உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை விபரம் – மத்திய அமைச்சர் பகிர்வு!
நாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று உறுப்பினரின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிரிதி சுபின் இராணி கீழ்காணும் தகவல்களை அளித்தார்.
உலகப் பொருளாதார அமைப்பால் வெளியிடப்பட்ட உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை 2021-ன் படி, 156 நாடுகளில் (1-க்கு) 0.625 மதிப்பெண்களுடன் 140-வது இடத்தில் இந்தியா உள்ளது,
உலகளாவிய பாலின இடைவெளி குறியீட்டின் மதிப்பெண்களை உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை வழங்குகிறது. பொருளாதார பங்கேற்பு மற்றும் வாய்ப்பு, கல்வி, ஆரோக்கியம் மற்றும் தொடர்ந்து வாழ்தல், மற்றும் அரசியல் அதிகாரம் ஆகிய நான்கு பரிமாணங்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான இடைவெளியை இது ஆய்வு செய்கிறது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், அரசியல் அதிகாரமளிப்புப் பரிமாணம் காரணமாக இந்தியாவின் பாலின இடைவெளி குறியீடு குறைந்துள்ளது. உள்ளூர் சுயாட்சி அளவில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு வழங்கியுள்ளதால், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் தற்போது 30% அதிகமாக இருக்கிறது.
இதன் காரணமாக இந்தப் பரிமாணத்தில் இந்தியாவின் மதிப்பெண் உலகிலேயே மிக உயர்ந்த ஒன்றாக இருக்க வேண்டும். இருப்பினும், நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை மட்டுமே உலகப் பொருளாதார மன்றம் கணக்கில் எடுத்துக்கொள்கிறது.
இந்தியாவில் பாலின இடைவெளியைக் குறைப்பதற்கும், ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான வேறுபாட்டைக் களைவதற்கும், பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், அவர்களின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கும், பல்வேறு துறைகளில் அவர்கள் பங்கேற்பதற்கும் இந்திய அரசு மிகுந்த முன்னுரிமை அளித்துள்ளது.
சமூக, பொருளாதார மற்றும் அரசியல் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் பாலின இடைவெளியை குறைப்பதற்கு இந்திய அரசு பல்வேறு முக்கிய முயற்சிகள் எடுத்து வருகிறது .