சென்னைக் கார்ப்பரேஷன் & மேயர் பிரியா குறித்த முழு விபரம்!

சென்னைக் கார்ப்பரேஷன் & மேயர் பிரியா குறித்த முழு விபரம்!

மிழகத்தை கோலோச்சும் செயிண்ட் ஜார்ஜ் ஃபோர்ட் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளை உள்ளடக்கி வணிகம் செய்து வந்த ஆங்கிலேயர்கள் இப்பகுதியை மேலும் விரிவாக்கம் செய்து ஒரு நகர நிர்வாகத்தை அமைக்க திட்டமிட்டனர். இதற்கான அனுமதி இங்கிலாந்து மன்னரிடம் இருந்து கிடைத்த நிலையில் 1687 ஆம் ஆண்டு மதராஸப் பட்டினம் என்ற மெட்ராஸ் நகருக்கு என தனி நகர அமைப்பு உருவாவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு 1688ஆம் ஆண்டு மெட்ராஸ் மாநகராட்சியாக உருவானது. ஒரு மேயர், 12 கவுன்சிலர்கள், 60 முதல் 100 பிரதிநிதிகளை கொண்ட அமைப்பாக இந்த நிர்வாக அமைப்பு உருவாக்கப்பட்டது. இதில் ஆங்கிலேயர்கள், சில பிரஞ்சு வணிகர்கள், போர்த்துகீசியர்களும் அங்கம் வகித்துள்ளதாக சான்றுகளில் காணமுடிகிறது. லண்டனிற்கு பிறகு மாநகராட்சி அந்தஸ்து பெற்ற நகரமாக மெட்ராஸ் மாறிய நிலையில் அதன் முதல் மேயராக நந்தேனியல் ஹிக்கின்சன் என்பவர் பொறுப்பேற்றார்.  இவருடன், பல்வேறு சமூகத்தினர்கள் கவுன்சிலர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். இவர்களைத் தவிர, மாநகராட்சி மன்றத்தின் பிரதிநிதிகளாக ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுகாரர்கள், போர்ச்சுக்கீசியர்கள் போன்றோரும் நியமிக்கப்பட்டனர். கவுன்சிலர்களால் மேயர் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேயரின் பதவிக் காலம் ஓராண்டாக இருந்தது. ஆனால், கவுன்சிலர்கள் மாநகராட்சி மன்றத்தின் ஆயுள்கால உறுப்பினர்களாக இருந்தனர்.

1919ல் மாநகராட்சியின் அதிகாரம் மற்றும் பணிகள் வரையறுக்கப்பட்டன. இந்த ஆண்டில் தான் “மேயர்’ என்ற பெயர் “தலைவர்’ என்று மாற்றப்பட்டது. . இந்த ஆண்டில் தான் “மேயர்’ என்ற பெயர் “தலைவர்’ என்று மாற்றப்பட்டது. சர்.பிட்டி. பி.தியாகராஜ செட்டியார் தலைவராக நியமிக்கப் பட்டார். இவர் தான் சென்னை மாநகராட்சியின் தலைமைப் பொறுப்புக்கு முதலில் தேர்வு செய்யப்பட்ட இந்தியர். மாநகராட்சித் தலைவர் என்ற பெயர் 14 ஆண்டுகள் தான் நீடித்தது.

1933ஆம் ஆண்டு மீண்டும் விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு மேயர் பொறுப்பு கொண்டு வரப்பட்டு மேயருக்கான அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டது. மேயரின் உடை, இலச்சினை உள்ளிட்டவையும் முதன் முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. சென்னை மாநகரின் மேயராக எம்.ஏ.முத்தையா செட்டியார் தேர்வு செய்யப்பட்டார். 1933 முதல் 2011ஆம் ஆண்டு வரை நடந்த மறைமுக மற்றும் நேரடி தேர்தல்கள் வாயிலாக இதுவரை 49 பேர் சென்னை மாநகர மேயராக பொறுப்பு வகித்து உள்ளனர்.

விடுதலைக்கு பிறகு சென்னை மாநகராட்சியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் 1959ஆம் ஆண்டு அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அப்போது நடந்த மாநகராட்சி தேர்தலில் பெரும்பான்மை இடங்களை திமுக கைப்பற்றிய நிலையில், திமுகவின் முதல் சென்னை மாநகர மேயராக அ.பொ.அரசு பொறுப்பேற்றார். 1970ஆம் ஆண்டு வரை 65 வார்டுகளுடன் சென்னை மாநகராட்சி இயங்கி வந்த நிலையில், 1973ஆம் ஆண்டு உள்ளாட்சி அமைப்புகள் கலைக்கப்பட்டதால் 1996ஆம் ஆண்டு வரை உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படாமல் இருந்து. பின்னர் நடத்தப்பட்ட தேர்தலில் சென்னை மாநகராட்சியின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயராக தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார்.

2001ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலிலிலும் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்று மேயராக பொறுப்பேற்றாலும் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, ஒரு நபர் ஒரே நேரத்தில் இரண்டு அரசுப் பொறுப்புகளை வகிக்க முடியாது என்ற சட்டத்திருத்தத்தால் ஆயிரம் விளக்கு தொகுதியின் எம்.எல்.ஏவாகவும் பொறுப்பு வகித்து வந்த மு.க.ஸ்டாலின் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது. பின்னர் 2002ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை கராத்தே தியாகராஜன் பொறுப்பு மேயராக இருந்தார். 2006ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் சென்னை மாநகராட்சி மேயராக மா.சுப்பிரமணியன் தேர்வு செய்யப்பட்டார். 2011ஆம் ஆண்டு நடந்த நேரடி தேர்தலில் வென்று சைதை துரைசாமி சென்னை மேயராக பொறுப்பேற்றார். சென்னை மாநகராட்சி வரலாற்றில் மேயர் பொறுப்பை அதிமுகவை சேர்ந்த முதன்முறையாக அலங்கரிக்கும் வாய்ப்பை அப்போது நடந்த உள்ளாட்சித் தேர்தல் ஏற்படுத்தி கொடுத்தது.

2016ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றத் தடை காரணமாக ஒத்திவைக்கப்பட்டு நீண்ட காலத்திற்கு பிறகு தேர்தலை சந்திக்கிறது சென்னை மாநகராட்சி, சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை மொத்தமுள்ள 200 வார்டுகளில் 84 வார்டுகள் பொதுப்பிரிவை சேர்ந்த பெண்களுக்கும் 16 வார்டுகள் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும் 16 வார்டுகள் பட்டியல் சமூகத்தை சேர்ந்த பெண்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், பட்டியல் சமுதாயத்தை சேர்ந்த பெண்ணுக்கே மேயர் பொறுப்பும் ஒதுக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் சென்னை மாநகராட்சி வரலாற்றில் முதன்முறையாக பட்டியல் இனத்தை சேர்ந்த பெண் ஒருவர் மேயர் பொறுப்பை ஏற்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது. இதன்படி பட்டியல் இனத்தவருக்கான பொதுப்பிரிவுக்கும் பட்டியல் இனத்தவருக்கான பெண்களுக்கும் ஒதுக்கப்படுள்ள 32 வார்டுகளில் ஏதேனும் ஒரு வார்டில் வெற்றி பெறும் பெண் ஒருவரே சென்னை மேயர் பொறுப்பை அலங்கரிக்க உள்ளார்.

அந்த வகையில் திமுகவைச் சேர்ந்த பிரியா ராஜன் சென்னை மேயராகத் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். இவர் வட சென்னை பகுதியான திருவிக நகரில் இருக்கும் 74வது வார்டில் வெற்றி பெற்று கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். முன்னதாக, இந்தப் பதவிக்கு கடும் போட்டி நிலவியது. பதவியை கைப்பற்ற பல வி.வி.ஐ.பி.க்கள் மோதிக் கொண்டனர். சென்னையின் இரண்டாவது பெண் மேயர் யார் என்பது மிகவும் கௌரவமான பொறுப்பு. அதே போல் பவர் புல் பதவியும். மேலும் தலைவர் ஸ்டாலின் ஒருமுறை அலங்கரித்த பொறுப்பு. இத்தனைக்கும் சிங்கார சென்னை 2.0 ப்ராஜெக்ட் வருவதால், இந்தப் பதவியை அலங்கரிக்கப் போகிறவர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது.இந்த போட்டியில் 3 பேர் இருந்தனர். திமுக சார்பில் 159 மாவட்டத்தில் வெற்றி பெற்ற எம்.யு.நந்தினி, 100 மாவட்டத்தில் வெற்றி பெற்ற வசந்தி பரமசிவம், 74-வது மாவட்டத்தில் வெற்றி பெற்ற ஆர்.பிரியா ஆகியோருக்கு மேயராக வாய்ப்பு அதிகம். இறுதியில் 74வது வார்டில் வெற்றி பெற்ற ஆர்.பிரியாவை ஸ்டாலின் தேர்வு செய்தார்.

இந்த பிரியா ராஜன் 28 வயதான எம்.காம். பட்டதாரி ஆவார். முன்னாள் எம்எல்ஏ செங்கை சிவத்தின் பேத்தி இவர். அமைச்சர் சேகர்பாபு ஆதரவினால் பிரியா ராஜனின் பெயர் மேயர் பட்டியலில் தேர்வாகியிருக்கிறார்.. இவர் சென்னையின் 3வது பெண் மேயர் ஆவார். அதற்கு முன் 1957ல் தாரா செரியன் மற்றும் 1971-72 வரை திமுகவின் பெண் மேயராக காமாட்சி ஜெயராமன் ஆகியோரை அடுத்து சென்னையின் 3ஆவது பெண் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இவர் வட சென்னையில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் முதல் மேயர், முதல் தலித் பெண் மேயர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரெங்கராஜன்

Related Posts

error: Content is protected !!