எப்ஐஆர் விவரத்தை 24 மணி நேரத்துலே வெப்சைட்டிலே வெளியிடணும்! – சுப்ரீம் கோர்ட் ஆர்டர்
உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த “இந்திய இளைஞர் வழக்குரைஞர் சங்கம்’ சார்பாக சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த பொது நல மனுவில், “முதல் தகவல் அறிக்கை என்பது பொது ஆவணமாகும். ஆனால், காவல் நிலையத்தில் இருந்து முதல் தகவல் அறிக்கையின் நகலை பொது மக்கள் பெறுவது என்பது மிகவும் கடினமான காரியமாக உள்ளது. ஆகையால், காவல் நிலையங்களில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும்போது, பொது நலன் கருதி அதை காவல்துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட வேண்டும். அப்படி வெளியிடப்பட்டால், பொது மக்கள் சிரமங்களைச் சந்திக்க வேண்டியிருக்காது.எனவே, காவல் நிலையங்களில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட நேரத்தில் இருந்து 24 மணி நேரத்தில் அதை காவல்துறையின் இணையதளத்தில் வெளியிட உத்தரவிட வேண்டும் என்று அந்த பொது நல மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சிவகீர்த்தி சிங் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அந்த பொது நல மனு குறித்து பதில் அளிக்கக்கோரி, மத்திய அரசுக்கும், மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்பக்கோரி நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
பின்னர் வழக்கை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட் கோர்ட் எப்ஐஆர் பதிந்த 24 மணி நேரத்துக்குள் இணையத்தில் அதுகுறித்த தகவல்களை பதிவேற்ற வேண்டும் என அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சி.நாகப்பன் தலைமையிலான அமர்வு இதற்கான உத்தரவை பிறப்பித்தது.
இன்று வழங்கிய தீர்ப்பில், “எப்ஐஆர் பதிந்த 24 மணி நேரத்துக்குள் சம்பந்தப்பட்ட காவல் நிலைய இணையத்தில் தகவல்களை பதிவேற்ற வேண்டும். அதேவேளையில் இணைய இணைப்பு குறைபாடுள்ள பகுதிகளில் 72 மணி நேரத்துக்குள் இணையத்தில் எப்ஐஆர் தகவல்களை பதிவு செய்யலாம். எல்லையில் ஊடுருவியவர்கள், பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான பெண்கள், குழந்தைகள் தொடர்பான வழக்குகளில் எப்ஐஆர் தகவல்களை இணையத்தில் பதிய விலக்கு அளிக்கப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்ட நபர் எப்ஐஆர் தகவல்கள் இணையத்தில் பதிவு செய்யப்படவில்லை என்பதை காரணம் காட்டி சூழ்நிலையை தனக்கு சாதகமாக்கிக் கொள்ளக்கூடாது என்பதாலே இந்த உத்தரவை பிறப்பிப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.