சுருக்’ எழுத்தின் தந்தை: ஐசக் பிட்மன் நினைவு நாளின்று!

சுருக்’ எழுத்தின் தந்தை: ஐசக் பிட்மன் நினைவு நாளின்று!

‘‘ளவளன்னு பேசுறவங்களை சுருக்கமா, தெளிவா பேசுப்பா… ஏன் இப்படி லொடலொடன்னு பேசிக்கிட்டு இருக்கே’’ என்பார்கள். ஆனால், ஒரு நல்ல பேச்சாளரை நாம் இப்படி கடிந்து கொள்ள முடியாது. அவரது பேச்சில் பல நல்ல விஷயங்கள் இருக்கும். அனைத்தையும் நாம் நினைவில் வைத்துக் கொள்ள முடியாது. அது மட்டுமல்ல… சில கல்வி நிலையங்களில் வேகமாக சொல்லப்படும் ேநாட்ஸ்களை, விரைவாக நம்மால் குறிப்பெடுக்க முடியாது. சில தலைவர்களின் பேச்சு, பேட்டி உள்ளிட்ட விஷயங்களை கூட இப்படித்தான். இதற்காக உருவானதே Shorthand எனப்படும் சுருக்கெழுத்து.!

இந்த சுருக்கெழுத்தின் தந்தைதான் ஐசக் பிட்மன். யாரந்த பிட்மன் என்கிறீர்களா? இங்கிலாந்தின் டிரவ்பிரிட்ஜ் நகரில் 1813, ஜன.4ம் தேதி பிறந்தவர் பிட்மன். பிரிட்டிஷ் அன் பாரின் ஸ்கூல் சொசைட்டியில் கல்விப்பயணத்தை துவக்கினார். பின்னர் ஆங்கில ஆசிரியராக பணியாற்றினார். அப்போது அவரது நோட்ஸ்களை வேகமாக குறிப்பெடுக்க சில மாணவர்களால் முடியவில்லை. அதே நேரம் அவர்களுக்காக தனது வேகத்தையும் பிட்மனால் குறைத்துக் கொள்ள முடியவில்லை. அப்போதுதான் இதற்கான மாற்று வழியை யோசிக்க ஆரம்பித்தார் பிட்மன். அப்போதுதான் எழுத்தின் நீண்ட வடிவங்களை சுருக்கமான வடிவத்தில் குறிப்பால் உணர்த்தினால் என்ன என்று யோசிக்கத் தொடங்கினார். பல நாட்கள் இரவு, பகலாக யோசித்து கடைசியில் சுருக்கெழுத்து முறையை கண்டுபிடித்தார். 1837ம் ஆண்டு பிட்மன் ஷார்ட்ஹேண்ட் எனப்படும் சுருக்கெழுத்து முறை அறிமுகமானது.

பிட்மன் சுருக்கெழுத்துக்கு அழகான விளக்கம் தருகிறார். அதாவது, பல்வேறு குறியீடுகளைப் பயன்படுத்தி சின்னஞ்சிறு பத்திகளில் தகவல்களையும், பேச்சுகளையும், விவரங்களையும் பதிவு செய்துகொள்ளும் முறையே சுருக்கெழுத்தாகும். விரைவாக எழுதும் இம்முறையில் பயிற்சி பெற்றவர்களைச் சுருக்கெழுத்தர் (stenographer) எனக்கூறுவர். Stenography என்பது கிரேக்க மொழிச் சொல்லாகும். ‘Steno’ என்றால் குறுகிய (அ) சுருக்கிய, ‘graphy’ என்றால் எழுதுதல் என்பது பொருளாகும். சிசேரோ (Cicero), செனெகா (Seneca) போன்ற ரோமானிய தத்துவ அறிஞர்களின் “Tenets and Lectures” என்ற சொற்பொழிவை மெர்கஸ் தெரோ (Mercus Thero) என்பவர் முதன்முதலாக சிறு சிறு அமைப்புகளில் எழுதினார் எனக் கூறப்படுகிறது. ஆனால் தற்போதைய சுருக்கெழுத்து முறை 19ம் நூற்றாண்டில்தான் வளர்ச்சியடைந்தது.

பிட்மனின் கோட்பாட்டின்படி 26 ஆங்கில எழுத்துகளும் சிறு சிறு கோடுகள், வட்டங்கள் மற்றும் புள்ளிகள் என மாற்றி எழுதப்படுகின்றன. ஆனால் இவை அனைத்தும் கோடுகள் போடப்பட்ட தாள்களில் மட்டுமே எழுதப்பட்டன. ஆங்கிலத்தில் முதலில் வந்த இந்த முறை, படிப்படியாக அனைத்து மொழிகளிலும் வரத்தொடங்கின. தமிழில் சுருக்கெழுத்து முறையை எம்.சீனிவாசராவ் உருவாக்கினார். வேலூரில் காவல் பயிற்சி நிலையத்தில் சுருக்கெழுத்து பயிற்சியாளராகப் பணியாற்றிய இவர் 1894ல் தமிழ் சுருக்கெழுத்து முறையை உருவாக்கினார். இதனை பிரிட்டிஷ் அரசு 1910ல் ஏற்றுக் கொண்டது. கன்னடம், தெலுங்கிற்கு சுருக்கெழுத்து முறையையும் உருவாக்கினார். இன்று பொதுக்கூட்டங்கள், கட்டுரைகள், கருத்தரங்குகளில் பேசப்படுபவை எல்லாம் அனைவரும் குறிப்பெடுக்க பிட்மனின் கடின உழைப்பே காரணம் என்றால் அது மிகையில்லை. சுருக்கெழுத்தின் முறையை அடுத்தடுத்த உயரத்துக்கு கொண்டு சென்ற பிட்மன் 1897ல் இதே ஜனவரி22 தேதி தனது 84ம் வயதில் உயிரிழந்தார்.

error: Content is protected !!