கொரோனாவால் வீழ்ந்து கொண்டிருப்பது கல்வி மட்டுமல்ல.. இரண்டு தலைமுறையாக்கும்!

கொரோனாவால் வீழ்ந்து கொண்டிருப்பது கல்வி மட்டுமல்ல.. இரண்டு தலைமுறையாக்கும்!

ரு தலைமுறையையே அழித்துக்கொண்டிருக்கும் இந்த கொரோனா லாக்டவுன் என்ற வார்த்தை. அனைத்தும் திறந்துவிடப்பட்டுள்ளது, அறிவை வளர்க்கும் கல்விக்கூடங்களை தவிர. கொரோனாவை விட கொடிய விளைவுகளை சந்திக்க காத்திருக்கும் பெற்றோர்கள். சமூக வலைத்தளங்களில் மாணவர்கள் என்ற பெயரிலும், குழந்தைகளின் பாதுகாப்பில் அக்கறை என்ற பெயரிலும், பெற்றோர்களிடம் பயத்தை காட்டி அவர்களின் குழந்தைகளை பற்றியான எதிர்காலத்தை மிகப்பெரிய கேள்விக்குறியாக்கும் சிலரின் செயல்கள் வேதனையளிக்கிறது. ஏற்கனவே 3 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒன்றாம் வகுப்பு அறிவை கூட பெறாமல் இருக்கிறான்.

1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள பெரும்பாலான குழந்தைகள் பொறுமை இல்லாமல், பெற்றோர்களை மதிக்காமல் அவர்களையே மிரட்டி, மரியாதை என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல், ஒழுக்கம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரியாமல், வயதுக்கு மீறிய செயல்களை செய்து கொண்டிருக்கிறார்கள். குழந்தைகள் திசைமாறி தவறான வழியில் செல்வதற்குத்தான் இந்த லாக்டவுன் மிக பெரிய பங்கு வகிக்கும். அவர்களை திசைமாற்றி விட்டுவிட்டோம் என்பதை மட்டும் ஒவ்வொரு பெற்றோரும் நினைவில் கொள்ளுங்கள்.

நம்முடைய குழந்தைகளுக்கு உடலளவு மட்டுமே நாம் பாதுகாப்பு தருகிறோம். கல்வி அறிவில் பெரும்பாலான குழந்தைகள் கோமா நிலைக்கே சென்றுவிட்டார்கள் என்பது எதார்த்தமான உண்மை. முறையான கல்வி மறுக்கப்படும் போது மனதளவில் பாதுகாப்பற்ற சூழ்நிலை உருவாகி, அவர்களின் செயல்கள் அனைத்தும் தவறான வழியில் செல்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
நீங்கள் எவ்வளவு சம்பாதித்தும் அதனால் ஒரு பலனும் இருக்கப்போவதில்லை.

உங்கள் குழந்தைகள் தவறான பாதையை தேர்ந்தெடுக்க மட்டுமே இந்த லாக்டவுன் உதவும். மாணவர்களுக்கு நோய் பரவாமல் தடுப்பதற்காக 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன் விளைவு மீண்டும் மொபைல் போனில் கூட்டம் கூட்டமாக மாணவர்கள் எல்லா பகுதிகளிலும் மூழ்கி கிடக்கிறார்கள். மீண்டும் ஆன்லைனில் பிரீபையர் (free fire game) கேம் உங்கள் குழந்தைகள் விளையாடுவதற்கு நீங்களே வழிவகுத்து கொடுப்பீர்கள்.மீண்டும் youtube இல் தேவையற்ற வீடியோ பதிவுகளை பார்ப்பதற்கு நாமே வழிவகுத்துக் கொடுக்கப்போகிறோம். மொபைல் போன்ஐ கொடுக்கவில்லை என்றால் அவர்கள் மிரட்டுகிறார்கள், கோபப்படுகிறார்கள் என்று சில பெற்றோர்களின் பதில்கள் வேறு.

பெரும்பாலான நேரங்களில் மொபைல் போனிலேயே மூழ்கி கிடக்கிறார்கள் என்று உண்மையாகவே கவலைப்படும் பெற்றோர்களுக்கு ஒரு எச்சரிக்கை.

உங்கள் குழந்தைகளை நீங்களே மிக பெரிய அழிவுப்பாதைக்கு கொண்டு செல்கிறீர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். அந்ததந்த வயதில் கற்றுக்கொள்ளவேண்டிய அனைத்தும் இப்போதே கற்றுக்கொள்கிறார்கள். இந்த மொபைல் போன்ஐ தவறாக பயன்படுத்தும் போது எழுந்து வரமுடியாத அளவு சாக்கடைக்குள் விழுகிறார்கள் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். பள்ளிகள் பாதுகாப்பான சூழ்நிலையையே ஏற்படுத்தி தருகிறது. தினமும் இரண்டு முறை temperature செக் பண்ணுகின்றனர், பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்க சொல்லி ஆசிரியர்கள் அறிவுறுத்துகின்றனர். இதெல்லாம் வீட்டில் சாத்தியமா என்பதை நன்றாக சிந்தியுங்கள்.

கிராமப்புறங்களில் உள்ள பெற்றோர்கள் வேலைக்கு சென்றவுடன், அவர்களுடைய பிள்ளைகளும் வெளியில் கூட்டமாக விளையாட செல்கின்றனர். ஏரிகளிலும் குளங்களிலும் கூட்டமாக மீன் பிடிக்க செல்கின்றனர். அங்கே சில விபத்துகளும் நடக்கிறது. வீட்டிற்கு அருகிலுள்ள கிணறுகளுக்கும், குளம், குட்டைகளுக்கும், ஆறுகளுக்கும் சென்று விபரீதம் புரியாமல் விளையாடி சிலர் உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள். வேலைக்கு சென்ற பெற்றோர்களும் வேலையில் முழு கவனம் செலுத்தமுடியாமல் குழந்தைகளை பற்றிய பயத்திலேயே இருக்கின்றனர். தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் இழுத்து மூடப்பட்டிருந்த நாட்களில் மாணவ மாணவிகளின் இறப்பு விகிதம் எப்படி நடந்தது என புள்ளி விபரங்களை எடுத்துப்பாருங்கள் கொரோனா இறப்பை விட பல மடங்கு அதிகமாக இருக்கும். கிணற்றிலும், குளம் குட்டைகளிலும் விழுந்து இறந்தவர்களே அதிகமாக இருப்பார்கள்.

அதற்கு அடுத்தபடியாக வாகன விபத்தில், பருவம் அறியா இளம்வயதிலேயே காதலில் சிக்கி ஓடிப்போய் முடிவெடுக்கத்தெரியாமல் தற்கொலை செய்து கொண்டவர்களே அதிகமாக இருப்பார்கள். அதற்கு அடுத்து ஆன்லைன் விளையாட்டில் மூழ்கி தன்னிலை இழந்து தற்கொலை செய்து கொண்டவர்களே இருப்பார்கள். பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இழுத்து மூடப்பட்டதால் வயதுக்கு மீறிய சேர்க்கையினால் ஒழுக்கம் கெட்டு பெற்றோரை மதிக்காமல் பல்வேறு குற்ற செயல்கள் செய்வதற்கு நாமே வழிவகுத்து கொடுக்கிறோம். கடந்த இரண்டு வருடங்களில் கொரோனாவால் இறந்த குழந்தைகள் மற்றும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கையின் விகிதத்தையும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இழுத்து மூடப்பட்டதால் பல்வேறு தேவையற்ற செயல்களால் ஏற்பட்ட இறப்புகளின் எண்ணிக்கையின் விகிதத்தையும் கணக்கிட்டு ஒப்பிட்டு பாருங்கள். நிச்சயமாக பல மடங்கு அதிகமாக இருக்கும்.

சமூக ஊடகங்கள் அனைத்தும் ஏதேதோ காரணங்களுக்கு சர்வே எடுக்கிறீர்கள். இந்த விசயங்களுக்கு ஒரு சர்வே எடுத்துப் பாருங்களேன். உங்களுக்கு என்ன பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இழுத்து மூடப்பட்டு இருப்பதால் இனி நிறைய லைக்ஸ் வரும், நிறைய Subscriber கள் வருவார்கள் சில ஊடகங்கள் வெளியிடும் சமுதாயத்தை சீரழிக்கும் வீடியோக்களை பார்ப்பதற்க்கு நிறைய பார்வையாளர்கள் வருவார்கள்.இனி முழுநேரமும் மொபைல் போனிலேயே மூழ்கி கிடப்பார்கள். எப்படி பெற்றோர்களை ஏமாற்றுவது என கற்றுக்கொள்வார்கள். கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை மொபைல் டேட்டா ரீசார்ஜ் செய்ய ஏதேதோ பொய்யான காரணம் சொல்லி பிடுங்குவார்கள். முடிவில் கொரோனாவிற்காக போடப்பட்ட லாக்டவுன் இன்றைய தலைமுறை மாணவர்களின் எதிர்காலத்தை மொத்தமாக சீரழிக்கும் லாக்டவுன் ஆக நிச்சயமாக மாறும். லாக்டவுன் போடப்பட்டதால் மனதளவில் சீரழிக்கும் தேவையற்ற அனைத்தையும் பொது வெளியில் கற்றுக்கொண்டு, லாக்டவுன் முடிந்தவுடன் மீண்டும் பள்ளி கல்லூரிகள் திறக்கும் போது சமுதாயத்தை சீரழிக்கும் மொத்த விசயத்தையும் பல்வேறு இடங்களில் வரும் அத்தனை பேரும் ஒன்றாக ஒரே வகுப்பறையில் அமர்ந்து பேசும் போது என்னவாகும் என்று சற்று சிந்தித்து பாருங்கள். இதனால் ஏற்படும் விளைவுகளுக்காக மீண்டும் லாக்டவுன் போட வேண்டிய சூழ்நிலை கூட நிச்சயம் ஏற்படலாம்.

சமூக ஊடகங்களை நடத்துபவர்கள் மற்றும் அதில் வேலைபார்ப்பவர்களிடம் வேண்டி கேட்டுக்கொள்வது….. உங்களின் குழந்தைகளும், உங்கள் உறவினர்களின் குழந்தைகளும், உங்கள் நண்பர்களின் குழந்தைகளும் இதில் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை மனதில் வைத்து செயல்படுங்கள். உள்ளதை உண்மையாக சொல்லுங்கள். பெற்றோர்களை ஒருவித பயத்துடனே வைத்து இருக்கிறீர்கள்.

பள்ளி கல்லூரிகளை மூடுவதற்கான செய்தியையே முதன்மை செய்தியாக வெளியிடுகிறீர்கள். மற்ற துறைகளுக்கும் கொரோனாவுக்கும் சம்பந்தம் இல்லை என்பதைப்போல் செய்தி வெளியிடுகிறீர்கள். இந்த தலைமுறையிடம் உலகத்தையும் சமுதாயத்தையும் தெளிவாக எதிர்கொள்வதற்கான அத்தனை கல்வி முறைகளும் இழுத்து மூடப்பட்டுள்ளது என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்… அன்பையும், மனிதாபிமானத்தையும் விழிப்புணர்வையும், மரியாதையையும்ஒழுக்கத்தையும் கற்றுக்கொடுக்கும் கல்விக்கூடங்கள் அனைத்தும். உயிர்தன்மையோடு இருக்க வேண்டும்… ஆனால் கொரோனா என்னும் வார்த்தையால் உயிரற்று கிடக்கிறது அத்தனையும் இன்று..!

ரெங்கராஜன்

error: Content is protected !!