பர்சனாலிட்டிகள் பெயரிலுள்ள போலி ட்விட்டர் கணக்குகள் நிரந்தரமாக நீக்கம்!
உலக அளவில் பிரபலமான சமூக வலைத்தளமான ட்விட்டரில் அரசியல், விளையாட்டு, சினிமா உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் கணக்கு வைத்துள்ளனர். அந்த பிரபலங்களின் பெயர்களில் ட்விட்டரில் பல்வேறு போலி கணக்குகளும் உள்ளன. இந்த போலி கணக்குகள் ட்விட்டரின் நம்பகத்தன்மையை வலுவிழக்க வழிவகுக்கிறது.
அதேவேளை, இந்த போலி ட்விட்டர் கணக்குகளை கண்டுபிடித்து நீக்க ட்விட்டர் நிறுவனம் பல்வேறு வழிகளை கையாண்டு வருகிறது. அந்த வகையில், போலி கணக்குகள் கண்டறியப்பட்டாலும் அந்த கணக்குகளும் முதலில் எச்சரிக்கை விட்டு அதன் பின்னரே அந்த போலி கணக்கு நீக்கப்படுகிறது.
இந்நிலையில், ட்விட்டர் பயனாளர்கள் போலி ட்விட்டர் கணக்கை உருவாக்கி ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டால் அந்த கணக்குகள் எந்த வித எச்சரிக்கையும் விடுக்கப்படாமல் நிரந்தரமாக நீக்கப்படும் என்று எலான் மஸ்க் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில், முன்னோக்கி செல்கையில், போலி கணக்கு என்று தெளிவாக குறிப்பிடாமல் ஆள்மாறாட்டத்தில் ஈடுபடும் பயனாளர்களின் ட்விட்டர் கணக்குகள் எச்சரிக்கையின்றி நிரந்தரமாக நீக்கப்படும். கடந்த முறை கணக்கு நீக்கப்படுவதற்கு முன்பாக நாங்கள் எச்சரிக்கை அளித்தோம். ஆனால், தற்போது நாங்கள் அடையாள சரிபார்ப்பு நடைமுறயை விரிவுபடுத்தி விட்டதால் எச்சரிக்கைகள் எதுவும் அளிக்கப்படாது. இது ட்விட்டரின் ‘ட்விட்டர் புளூ’ வசதியை பெறுவதற்கான தெளிவான நிபந்தனையாகும்’ என்று தெரிவித்துள்ளார்.