சுப்ரீம் கோர்ட்டின் மீதான நம்பிக்கை போய்விட்டது!- கபில் சிபல் பேச்சு!

சுப்ரீம் கோர்ட்டின் மீதான நம்பிக்கை போய்விட்டது!- கபில் சிபல் பேச்சு!

பில் சிபல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து அதன் மூத்த தலைவராக வலம் வந்தார். இந்தியாவின் மூத்த வழக்கறிஞர்களில் ஒருவரான இவர் பல முக்கிய வழக்குகளில் ஆஜராகி இந்தியாவின் முக்கிய வழக்கறிஞராக திகழ்ந்தார். காங்கிரஸ் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினரான இவர் ஒன்றிய அமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார். பின்னர் காங்கிரஸ் தலைமையோடு அதிருப்தியில் இருந்த இவர் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். பின்னர் சமாஜ்வாதி ஆதரவோடு ராஜ்யசபா எம்,பியான இவர், தற்போது சுயேச்சை எம்.பியாக இருந்து வருகிறார். பா.ஜ.க.வின் மக்கள் விரோத செயல்களை தொடர்ந்து விமர்சித்து வரும் இவர், தற்போது நீதித்துறையை குறித்து கூறியுள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் நடந்த மக்கள் தீர்ப்பாய நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு பேசிய கபில் சிபல், “இந்த ஆண்டோடு சுப்ரீம் கோர்ட்டில் 50 வருட பயிற்சியை நான் நிறைவு செய்கிறேன். ஆனால், இந்த 50 ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த நீதிமன்றத்தின்மீது எனக்கு நம்பிக்கை இல்லை என்று உணர்கிறேன். நீங்கள் சுப்ரீம் கோர்ட்டால் வழங்கப்பட்ட முற்போக்கான தீர்ப்புகளைப் பற்றி பேசுகிறீர்கள். ஆனால், தரை மட்டத்தில் என்ன நடக்கிறது என்பதில் பெரிய வித்தியாசம் இருக்கிறது.

நான் 50 ஆண்டுக்காலம் பணியாற்றிய நீதிமன்றம் குறித்து இப்படி பேச விரும்பவில்லை. ஆனால், நான் பேசாவிட்டால் வேறு யார் பேசுவது? உண்மையைச் சொல்லப்போனால் சில சென்ஸிட்டிவான வழக்குகள் குறிப்பிட்ட நீதிபதிகள் முன்பே விசாரணைக்கு வருகின்றன. பின்னர், அந்த வழக்குகளின் முடிவுகள் எப்படியாக இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும்.

சுப்ரீம் கோர்ட்டில் நீதி கிடைக்காது. அங்கு முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் குறிப்பிட்ட சில நீதிபதிகளிடம் மட்டுமே விசாரணைக்கு செல்கிறது. 50 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றிய அனுபவத்திலிருந்து இதை நான் சொல்கிறேன், சுப்ரீம் கோர்ட்டின் மீதான நம்பிக்கை போய்விட்டது” எனக் கூறியுள்ளார். இவரின் இந்த பேச்சு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

error: Content is protected !!