கண் பார்வையை பறித்த காலாவதியான கண் மை!
கண்ணுக்கு மை அழகு. அதோடு ஆரோக்கியமும் கூட. கண்களில் உண்டாகும் சூட்டை கட்டுப்படுத்தும். குளிர்ச்சியானது. கண்களுக்குள் விழும் தூசுகளை எளிதாக வெளியேற்றும். ஆனால் மைகளை நாம் கடைகளில் வாங்குகிறோம். அவை 100 சதவீதம் இயற்கையானது அல்ல. சிலவற்றில் மெழுகு போன்றவற்றை கலப்பார்கள். இப்போது மை அழியக் கூடாது என்று, நீரினால் அழியாத வண்ணம் கெமிக்கல் கலந்து விற்கிறார்கள். இவை கண்களுக்கு நல்லதல்ல. கண்மை அழியத்தான் செய்யும். அதுதான் இயற்கையானது. மேலும் பல கண் மைகள் பாதுகாப்பற்றவை என்று தெரியாமலே பயன்படுத்துவோர் அதிகம்.
இப்படித்தான் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஷெர்லி பாட்டார். இவர் தனது கண் இமைகளுக்கு கண்மை பூசி அலங்காரம் செய்தார். ஆனால் சில நாட்களிலேயே கண் எரிச்சல் தொடங்கியது. இதனால் அவதிப்பட்ட அவர் டாக்டர்களிடம் சென்று சிகிச்சை பெற்றார்.
கண்ணை பரிசோதித்த டாக்டர் ஷெர்லி காலாவதியான கண் மையை பயன்படுத்தி இருப்பதாக கூறினார். இது 20 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்டது. எனவே கண்ணில் தொற்று ஏற்பட்டு பார்வை பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
எனவே பல்வேறு இடங்களுக்கு சென்று சிகிச்சை மேற்கொண்டும் பலன் இல்லை. கண் பார்வை குறைந்து கொண்டே இருக்கிறது. தற்போது கண் பார்வை சிறிதளவே உள்ளது. இப்போது அவர் ஊன்றுகோல் பயன்படுத்தி நடக்கிறார். விரைவில் முழு பார்வையும் பறிபோகும் அபாயம் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.