என்னது எமர்ஜென்சியா? அப்படின்னா?

என்னது எமர்ஜென்சியா? அப்படின்னா?

முப்பது ஒன்பது வருடங்களுக்கு மேலாயிற்று…அந்த அச்சமூட்டும் காலங்களின் ஆட்டங்கள் நிகழ்ந்து!!!

1975 ஜுன் 25 அதிகாலை. திடீரென்று அந்த செய்தி வந்தது. ‘அவசர நிலை பிரகடனம்’….!

அப்படி என்றால் என்னவென்பதே பலருக்கு தெரியாது.


இதற்கு முன் ஒரு போரின்போது இது அறிவிக்கப்பட்டதாக சிலர் சொன்னார்கள். தேர்தல் முறைகேடுகளால், இந்திராகாந்தி பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று அலகாபாத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை , நாட்டுக்கே ஆபத்து என்று திரித்து, அவசர நிலை பிரகடனம் செய்தாராம் அம்மையார்!

அப்போதைய ஜனாதிபதியான பக்ருதீன் அலி அகமது இந்த சட்டத்தையும், பின்னால் வந்த பல அவசர சட்டங்களுக்கும் மறுப்பேதும் சொல்லாமல் கையெழுத்து போட்டு தள்ளிக்கொண்டிருந்தார்! என்ன ஏது என்று புரிவதற்குள் எதிர்கட்சி தலைவர்கள் அனைவரும் சிறை வைக்கப்பட்டனர். ஆயிரக் கணக்கான தொண்டர்களும் சிறையில்..பலர் தலைமறைவானார்கள்!

அப்போது தமிழ்நாட்டில் திமுக ஆட்சி. காங்கிரசுக்கு எதிரான நிலை. தலைவர்கள் பலர் தமிழகத்தில் தலைமறைவாக தஞ்சம் புகுந்தனர். ஜார்ஜ் பெர்னாண்டஸ் கோவை பேரூரில் ஒரு வீட்டில் தலைமறைவாக இருந்தார் என்றெல்லாம் நண்பர்கள் சொன்னார்கள்! போராட்டங்கள் தடை செய்யப்பட்டன. வீராதி வீர சூராதி சூர தொழிற்சங்க தலைவர்கள் எல்லோரும் கப்சிப்.

நேரத்துக்கு ரயில்கள் ஓடின…காலை பத்து மணிக்கெல்லாம் அவரவர் சீட்டில் அரசு ஊழியர்கள் பவ்யமாக அமர்ந்தனர்! யாரை வேண்டுமானாலும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று உதைக்கலாம், கைது செய்யலாம், சித்ரவதை செய்யலாம், கொலை கூட செய்யலாம் என்ற நிலை உருவானது.

அடக்குமுறைக்கு எதிரான குரல்கள் ஒடுக்கப்பட்டன. எதிர்த்து குரல் கொடுத்த பெரும் தலைவர்கள் ஜெயபிரகாஷ் நாராயணன், கிருபளானி,அத்வானி,மொரார்ஜி, சரண்சிங் போன்ற தலைவர்கள் எந்த காரணமும் இன்றி கைது செய்யப்பட்டனர்.

பல அமைப்புக்கள் தடை செய்யப்பட்டன. ஆர்.எஸ் .எஸ். இவற்றில் ஒன்று. சில கட்சிகள் எதிர்த்து குரல் கொடுத்தன..

மார்க்சிஸ்ட் கட்சியும் திமுகவினரும் இதில் அடங்குவர். இவர்களின் தலைவர்களும் தொழிற்சங்க வாதிகளும் கைது செய்யப்பட்டு சிறையில் கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். இவர்களை முடக்கிய சட்டமான ‘மிசா’வையே பலர் பின்னாளில் பட்டமாக அணிந்து கொண்டனர்.

இதற்கிடையில் இந்திரா காந்தியும் அவருடைய ஆலோசகர்களும்…இருபது அம்ச திட்டம் என்ற பெயரில்! நாட்டு நலனுக்கு என்று இருபது திட்டங்களை அறிவித்து இருபத்தி நாலு மணிநேரமும் இதன் பஜனை பாடினார்கள்.

‘Be Indian, Buy Indian’ என்பது இதில் ஒன்று. இதன்படி அந்நிய பொருட்களுக்கு தடை என்ற வதந்தி கிளம்பியது. அப்போது கடத்தல் என்பது பெரும் தொழில் அல்லவா! அந்நிய வாட்சுகள், அந்நிய டேப் ரிக்கார்டர்கள் என்று இந்தியாவுக்கு கடத்தப்பட்ட பொருட்கள்தான் பரவலாக நம் மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த செய்தி கேட்டதும் அனைவரும் இவற்றை வீட்டுக்குள் மறைத்து வைத்த காமெடிகளும் நடந்தன.

திடீரென்று ஒரு வதந்தி கிளம்பும்…’மேம்பாலத்துல கஸ்டம்ஸ் செக்கிங் பண்ணி பாரீன் வாட்சுகளை பிடிக்கிறாங்களாம்’ என்று…அவ்வளவுதான்…அனைவரும் தத்தமது சீக்கோ, ரீக்கோ வாட்சுகளை உள்ளாடைக்குள் மறைத்து வைக்காத குறையாய் ஒளித்து வைத்து நடமாடுவார்கள்!

இக்காலக்க்ட்டத்தில் இந்திரா மகன் சஞ்சய் காந்தியின் நடவடிக்கைகள் பிரபலமாயின.

குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்தை பலவந்தமாக குடிசைவாசிகள் மீது பிரயோகப்படுத்தினார். தில்லியை அழகுபடுத்துகிறேன் பேர்வழி என்று துர்க்மான் கேட் குடிசைகள் மீது புல்டோசர்களை ஏவினார்.

அவசர நிலையை கேலி செய்து எடுக்கப்பட்ட ‘கிச்சா குர்சி கா’ படத்தின் நெகடிவ்களை கைப்பற்றி கொளுத்தப் ப்ட்டது. அதிகார வ்ர்க்கம்..தங்களுக்கு வேண்டாதவர்களை உள்ளே தூக்கி போட இந்த அவசர நிலை அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக ஆயிற்று!

கல்லூரி விடுதிகளுக்குள்ளும் காவல் துறை நுழைந்தது. புரட்சிகர சிந்தனை மிக்க மாணவர்கள் இழுத்து செல்லப்பட்டனர்.கேரளத்தில் ராஜன் என்ற மாணவன் காவல் நிலையத்தில் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்று வரை அவன் உடலுக்கு என்ன ஆயிற்று என்ற தகவல் இல்லை. எதிர்ப்பு குரல் கொடுத்த கவிஞர்களும் இலக்கியவாதிகளும் காவல் நிலையங்களில் தொங்க விடப்பட்டு உதைக்கப்பட்டனர்..உருளைக்கட்டை சிகிச்சைகள் செய்யப்பட்டு நடக்க முடியாதவர்கள் ஆனவர் பலர்.

இயல்பாகவே ஆதரவுக்குரல் கொடுப்பவர்களும் உருவாயினர். ‘இந்திராதான் இந்தியா’ என்ற டி.கே.பருவாவின் புகழ் பெற்ற ஜால்ரா வார்த்தையை சிரமேற்கொண்டு தமிழகத்தில் இலக்கியங்கள் உருவாகின. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிட்டத்தட்ட இந்திராவின் மக்கள் தொடர்பாளராகவே மாறி, இந்தோ சோவியத் கழகம் சார்பில் பல கருத்தரங்கங்கள் நடத்தியது. இன்றும் நினைவிருக்கிறது…முன்னாள் துணைவேந்தர் நெ.து.சுந்தரவடிவேலு இருபதம்ச திட்டத்தின் புகழ் பாடும்போது சொன்ன வரி…காஷ்மீர் ஆப்பிளை இங்கே இருப்பவனும் வாங்கி திங்க பயன்படுகிறது இந்த திட்டம் என்று.

வினோபா பாவே, அன்னை தெரசா, குஷ்வந்த் சிங் போன்றவர்கள் பகிரங்கமாக அவசர நிலையை ஆதரித்தனர் என்று சொல்வார்கள். எம்.எப்.உசைன் என்ற ஓவியர் இந்திராவை ஒரு துர்கையாக சித்தரித்து ஒரு மாபெரும் ஓவியத்தை காட்சிக்கு வைத்தார்.

பத்திரிக்கை தணிக்கை அப்போது கொடி கட்டி பறந்தது. ஹிந்து போன்ற பத்திரிகைகள் கப்சிப் ஆயின. எதிர்ப்புக்குரல் இந்தியன் எக்ஸ்பிரஸ், துக்ளக் போன்ற பத்திரிகைகளில் இருந்து மட்டும் வந்தன. அதிகாரிகளுக்கு ஒரு செய்தி பிடிக்கவில்லை என்றால் நீக்கப்பட்ட பின்புதான் அச்சுக்கு போயின.

அப்போதைய பத்திரிகைகளில் பல பத்திகள் காலியாகவும் வெள்ளையாகவும் இருப்பதை பார்க்கலாம். துக்ளக்குக்கு பயங்கர டிமாண்டு, பல பக்கங்கள் வெள்ளையாய் இருந்தும்!

ஒரு இதழில் எம்ஜியார் நடித்த ‘சர்வாதிகாரி’ படத்தின் வசனங்களை பல பக்கங்களுக்கு அச்சடித்திருந்தார் சோ!

வானொலியை திருப்பினால் எப்போதும் ‘இருபதம்ச திட்டம்…ஆஹா…இது இந்திராவின் சட்டம்…ஓஹோ’ என்ற கண்றாவி பாட்டை கேட்க வேண்டியது தலைவிதியானது!

திரைப்படத் தணிக்கைகளும் தடைகளும் இன்னும் பிரபலம். குடிப்பது போன்ற காட்சிகளும், வன்முறைச்சண்டைகளும் கத்திரிக்கு பலியாயின. அரசை விமர்சிப்பது போல காட்சிகள் வந்தால் அம்போதான்!

தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி ஒரு நாள் பிரகடனப்படுத்தப்பட்டது! பல தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். ஸ்டாலின், முரசொலி மாறன் போன்றவர்கள் உள்ளே! மக்கள் மத்தியில் குமுறல்கள் உருவாகத் தொடங்கின.

சிறையில் சிட்டிபாபு அடித்து கொல்லப்பட்டார் என்று தகவல் பரவியது. அவரது உடல் திருவல்லிக்கேணியில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு குழுமிய மக்களின் மனதில் சிறைக் கொடுமைகள் பற்றிய பல தகவல்கள் பரவின.

அதே நேரத்தில் முரசொலி அடியார் போன்ற சிலர் சிறை ஒரு உல்லாசக்கூடம் என்பது போன்ற தகவல்களையும் பரப்பினர். பின்னர் ஒரு வழியாக . 1977ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை கண்டது. இந்திரா, சஞ்சய் போன்றவர்கள் கூட அவர்கள் தொகுதியில் தோற்றனர்! மக்களும் சகஜ நிலைக்கு திரும்பினர்!

இப்போது இந்த பிளாஷ்பேக் கதை எதற்கு என்கிறீர்களா? நாட்டில் எமர்ஜென்சி (அவசர நிலை) பிரகடனப்படுத்தப்பட்டு 40 ஆண்டுகள் ஆன நிலையில், இதுதொடர்பாக டெல்லியில் இருந்து வெளியாகும் ஆங்கில பத்திரிகைக்கு அத்வானி பேட்டியளித்துள்ளார்.

அவசர நிலையை எதிர்த்து பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு 19 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவித்த அத்வானி அது தொடர்பான பேட்டியில், “இந்திய அரசியல் அமைப்பானது எப்போது வேண்டுமானாலும் அவசர நிலை ஏற்படும் அளவுக்கு மிகவும் வலுவற்றதாகவே இருக்கிறது.

தற்போதைய சூழலில், ஜனநாயகத்தை ஒடுக்கும் சக்திகளின் ஆதிக்கம் நாட்டில் மேலோங்கி இருக்கின்றன. அரசியல் சாசன பாதுகாப்பு வலுவாக இருப்பினும் கூட ஜனநாயகத்தை ஒடுக்கும் சக்திகளின் ஆதிக்கமே வலுவாக இருக்கிறது. இப்போது உள்ள சட்டதிட்டங்கள் அவசர நிலையை தவிர்க்க போதுமானதாக இல்லை.

மீண்டும் அவசர நிலை ஏற்படாமல் தடுக்கும் அளவிற்கு முதிர்ச்சியுடைய அரசியல் தலைமை இந்தியாவில் இல்லை என நான் கூறவில்லை. ஆனால், அந்த தலைமைக்கு அத்தகைய சூழலை தடுக்கும் வலிமையில்லை என்பதே எனது நம்பிக்கையின்மையை அதிகரித்துள்ளது. எனவே, நாட்டில் மீண்டும் அவசர நிலை ஏற்பட வாய்ப்பில்லை என நான் முழுமையாக நம்பவில்லை” எனக் கூறியுள்ளார். அதுதான் இப்போதைய ஹாட் டாபிக்!

இந்த டாபிக்கில் உங்கள் பங்களிப்பை பகிர்ந்து கொள்ளவே மேற்படி முன்கதைச் சுருக்கம்!

error: Content is protected !!