என்னாது : ட்விட்டரை வாங்குனுமா? எதுக்கப்பூ??- எலான் மஸ்க்!
சர்வதேச அளவில் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க், அண்மையில் ட்விட்டர் தளத்தை வாங்குவது குறித்த செய்தி வெளியானது. மேலும் அதற்கான பணிகளை அவர் மேற்கொண்டு வந்தார் என்றும் சேதி வந்தது. இந்த நிலையில், இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். ட்விட்டரிலுள்ள கணக்குகளில் 5 சதவீதம் போலியானவை என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
உலக அளவில் ஏகப்பட்டோரால் புழங்கப்படும் ட்விட்டர் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்துக் கடந்த சில ஆண்டுகளாகவே விமர்சனம் செய்து வந்தார் எலான் மஸ்க். மேலும் ட்விட்டர் நிறுவனத்தில் கருத்துச் சுதந்திரம் இல்லை எனக் கூறி வந்தார். இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பாகத்தான், ட்விட்டர் நிறுவனத்தில் 9.2 சதவீத பங்குகளை அவர் வாங்கினார். ட்விட்டரில் இருந்து போலிக்கணக்குகளை நீக்குவதே தன்னுடைய முதல் வேலை என எலான் மஸ்க் முன்பு பேசியிருந்தார். அவரின் அடுத்த முயற்சியாக ட்விட்டர் நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் 44 மில்லியன் டாலருக்கு வாங்க இருப்பதாகத் தெரிவித்தார். இதையடுத்து அந்த நிறுவனத்தின் பங்குகள் 50 சதவீதம் அளவிற்கு வீழ்ச்சியைக் கண்டது.
இந்த நிலையில் அவரின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் “ட்விட்டர் தளத்தில் இருக்கும் கணக்குகளில் சுமார் 5 சதவீதக் கணக்குகள் போலியானவை. ட்விட்டருடனான ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது” என்று ட்வீட் செய்துள்ளார். இதையடுத்து அமெரிக்கப் பங்குச்சந்தையின் ஃப்ரி மார்கெட் வர்த்தகத்தில் டிவிட்டர் பங்குகள் சுமார் 20% வரையில் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது