மே 25 முதல் உள்நாட்டு விமான சேவை – மத்திய அமைச்சர் அறிவிப்பு
நாட்டு மக்களை நடமாட விடாமல் செய்து வரும் கொரோனா வைரஸ் நம் நாட்டிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை அடுத்து தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் நான்காம் கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதே சமயம் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கில் படிப்படியாக சில தளர்வுகள் கொண்டுவரப்பட்டன. இதையொட்டி ஜூன் 1ம் தேதி முதல் ஏசி அல்லாத 200 ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று அறிவிப்பு வெளியிட்டார். இதையடுத்து வரும் மே 25 முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து துவக்கப்படும் என்று மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்திப்சிங் புரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமைச்சர்,” மே 25, திங்கள்கிழமை முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கப் படும். இதைக் கவனத்தில் கொண்டு தயார் நிலையில் இருக்கும்படி அனைத்து விமான நிலையங்கள் மற்றும் விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. பயணிகளை அழைத்துச் செல்வதற்கான நடைமுறைகள் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகத்தால் தனியாக வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே இதனிடையே பல்வேறு தனியார் விமான நிறுவனங்கள் உள்நாட்டு விமானங் களுக்கான முன்பதிவுகளை ஆரம்பிக்க தொடங்கி உள்ளன என்பதும் சென்னை, மும்பை, அஹமதாபாத், டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் விமான சேவைகளை இயக்குவதில் சிக்கல் நீடிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது