மணப்பெண் குழந்தைகளின் மரண அவஸ்தை தெரியுமா?

மணப்பெண் குழந்தைகளின் மரண அவஸ்தை தெரியுமா?

னது முதலிரவில், இடுப்பு உடைக்கப்பட்டு, நாக்கு வெளியே தள்ளிய நிலையில், படுக்கையில் இறந்து கிடந்த, பத்து வயதேயான அந்த மணப்பெண் குழந்தையை, நம்மில் எத்தனை பேர் அறிவோம்……!? 1889ஆம் ஆண்டு, ஒரிசாவைச் சேர்ந்த, 35 வயது ஹரி மோகன் மைத்தி என்ற மனிதனுக்கு, திருமணமான முதலிரவிலேயே, பத்து வயதே ஆன குழந்தை ஃபுல்மணி Phulmoni என்ற தன் மனைவியின் கன்னித் தன்மையை அழித்துவிட வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. முதலிரவு படுக்கை விரிப்பில், ரத்தக்கறை படிந்திருக்க வேண்டும் என்பது அந்தக் கால ஆசாரமாக, சமூக வழக்கமாக இருந்தது. அப்படித்தான், இடை உடைக்கப்பட்ட நிலையில், ஃபுல்மணி என்ற மணப்பெண் குழந்தை, கொல்லப்பட்டு, படுக்கையில் கிடந்தாள். ‘மணப்பெண்ணின்’ கன்னித்திரை கிழிந்து, ரத்தம் சொட்டவில்லை என்றால், அந்தப் பெண்ணை, அப்படியே கைவிட்டு விடும் வழக்கமும் அந்தக் காலத்தின் நடை முறைதான். ஆனால், அதைக் கண்டு நெஞ்சுருகிக் கரைந்து குமுறியவர்கள், அப்போதைய உயர்ந்த சாதி எஜமான்களோ, சகோதர மதத்தைச் சார்ந்தவர்களோ அல்ல! மாறாக, அந்தக் குழந்தைக்காகக் கண்ணீர் விட்டவர்கள் பிரிட்டிஷ்காரர்கள் மட்டும் தான்.

இந்த சூழலில் தான்,1891ஆம் ஆண்டு Age Consent Bill என்ற சட்டத்தை பிரிட்டிஷ் ஆட்சி நிறைவேற்றியது. ஃபுல்மணி என்ற அந்தப் பத்து வயது மணப்பெண்ணின் “கொடிய மரணம் தான், இந்தச் சட்டம் கொண்டு வரக் காரணமாக இருந்தது. இந்தச் சட்டத்தின்படி, பெண் குழந்தைகளின் திருமண வயது பத்திலிருந்து (10), பனிரெண்டு (12) வயதாக உயர்த்தப்பட்டது, என்பது கூட வியப்பளிக்கும் செய்தி தான். ஆனால், பெண்களின் திருமண வயது பன்னிரெண்டாக உயர்த்தப்பட்ட போது, அதை எதிர்த்துப் போராடியவர்கள், வேறு யாரும் இல்லை; பால கங்காதர திலகர், பிபின் சந்திர பால் போன்ற தீவிர தேசிய வாதிகள்தான்..!

ஆமாம், ஆயிரக்கணக்கான மக்களைத் திரட்டி மாநாடுகளும், கூட்டங்களும் நடத்தி, “இந்தச் சட்டம், தங்களது மதத்திற்கு எதிரானது என்றும் தனது மதத்தைப் பாதுகாக்க எந்த எல்லைக்கும் போவோம்” என்றும் சூளுரைத்தார்கள்; நம்பிக்கை பாதுகாப்பு போன்ற போராட்டங்களை நடத்தினார்கள்; இந்தப் போராட்டங்களில் பிராமணர்கள் அதிகமாகக் கலந்து கொண்டனர்! இவர்களுக்கு ஆதரவாக அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களும் கூட சேர்ந்து கொண்டனர். இந்தியப் பண்பாட்டை பிரிட்டிஷ் ஆட்சி சிதைப்பதாக அவர்கள் குற்றம் சுமத்தினார்கள்! ஆனால், சட்டத்தை இயற்றிய கையோடு, போராட்டம் நடத்தியவர்களுக்கு நேராக, துப்பாக்கி முனையை பிரிட்டிஷ் ஆட்சி குறி வைத்த உடன், போராடியவர்கள் அப்படியே பின் வாங்கிச் சென்றனர்..

1891 ஆம் ஆண்டின் Age Consent Bill என்ற சட்டத்தைத் தொடர்ந்து,1929 ஆம் ஆண்டு, Child Marriage Restraint Act என்ற சட்டமும் நிறைவேற்றப் பட்டது… இப்படித்தான், திருவாங்கூர்/கொச்சி/மலபார் பகுதிகளில், மூஸ் என்று அழைக்கப்பட்ட, கிழட்டு நம்பூதிரிகளுக்கு வாழ்க்கைப்பட்டு இல்லற சுகம் என்பதை அறியாமல், வெட்டியாக வாழ்ந்து மடிந்த எண்ணற்ற நம்பூதிரி குலப் பெண்களுக்கும், நாயர் தறவாடுகளில் சம்பந்தம் செய்து கொண்ட நம்பூதிரிகளுக்கு அந்தி உறங்க வைக்கப்பட்ட நம்பூதிரி கட்டில்களுக்கும் பேசும் வாய்ப்புக் கிடைத்திருந்தால் எழுத்தில் அடங்காத துயரங்களை உரக்கக் கூறியிருக்கக் கூடும்.

நம்பூதிரி இல்லங்களின் இருட்டு அறைகளில் அடைக்கப்பட்டு, திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்பு கூட கிடைக்காமல், கன்னியாகவே மடித்து போன நம்பூதிரிப் பெண்களின் பிணங்களுக்குத் திருமணச் சடங்குகளைச் செய்து, பின் எரித்துச் சாம்பலாக்கிய கயமையும் இந்த உயர் சாதிக்கு வழக்கமாக இருந்தது. இவை அனைத்தையும் எதிர் கொண்டு, தங்களது மீட்சிக்காகப் போராடியதால் தான், பெண்களுக்கு ஓரளவுக்குப் பாதுகாப்பான சட்டங்களும் வரத் துவங்கின என்பதும் மறுக்க முடியாத வரலாறு..!

சாகுல் ஹமீது

Related Posts

error: Content is protected !!