சென்னையில் டெங்கு :- மு. க. ஸ்டாலின் எச்சரிக்கை!

சென்னையில் டெங்கு :- மு. க. ஸ்டாலின் எச்சரிக்கை!

தமிழக தலைநகரான சிங்காரச் சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு 2 குழந்தைகள் பலியாகியுள்ள நிலையில் இந்த விஷக் காய்ச்சலைத் தடுக்க தமிழ்நாடு அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து திமுக தலைவரும், எதிர் கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை யில்,” சென்னை மதுரவாயலைச் சேர்ந்த 8 வயது ரோகித், முகப்பேர் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 6 வயது மகாலட்சுமி ஆகிய குழந்தைகள் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகியிருப்பது வேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது. கடந்த ஆண்டுகளில் டெங்கு காய்ச்சலுக்கு 80க்கும் மேற்பட்டோர் பலியாகி, 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இந்த வருடம் அதிமுக அரசும், சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர்களும்-டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உரிய காலத்தில் எடுக்க தவறிய மோசமான போக்கின் விளைவாக, இரு குழந்தைகளின் உயிர்கள் சென்னையில் மட்டும் பறிபோயிருக்கிறது.

இதுபோல் மற்ற மாவட்டங்களிலும் டெங்கு காய்ச்சலால் உயிர்ப்பலியும், பாதிப்பும் தொடருகிறது. சின்னஞ்சிறு குழந்தைகள் டெங்கு காய்ச்சலுக்குப் பலியாகிக் கொண்டிருப்பதற்கு காரணமாக இருக்கும் அதிமுக அரசின் அலட்சியத்திற்கும், மெத்தனத்திற்கும் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். சென்னை மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் அதிமுக அரசு உடனடியாக டெங்கு காய்ச்சலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழுமையாக எடுக்க வேண்டும். காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கி உயிர்களை காப்பாற்றுவதற்கு தேவையான அனைத்து மருத்துவ வசதிகளையும் அரசு மருத்துவமனைகளில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

கொடிய டெங்கு நோயிலிருந்து குழந்தைகளையும், மக்களையும் காப்பாற்ற தேவையான போர்க்கால நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்திட வேண்டும் என்றும், பொதுமக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். அதிமுக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று காத்திராமல், அதிமுக அரசின் மெத்தனமான போக்கை நன்றாக அறிந்துள்ள திமுக மருத்துவ அணியினரும்-ஆங்காங்கே டெங்கு காய்ச்சல், அதன் பாதிப்புகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு பிரசாரங்களை நடத்திட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்

error: Content is protected !!