யாராக இருந்தாலும் அடிப்பேன்! – விஜயகாந்த் பேச்சு

யாராக இருந்தாலும் அடிப்பேன்! – விஜயகாந்த் பேச்சு

விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் தே.மு.தி.க., மக்கள் நல கூட்டணி, த.மா.கா. ஆகிய கூட்டணி கட்சிகள் சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு பேசிய போது, “நாங்கள் 6 கட்சி தலைவர்களும் ஏழை, எளிய மக்களுக்காக எந்நேரமும் உழைக்கக்கூடியவர்கள். எந்த நேரத்தில் கூப்பிட்டாலும் உங்களுக்காக ஓடோடி வந்து உழைக்கக்கூடியவர்கள். எனவே விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளிலும் நமது கூட்டணி வேட்பாளர்கள் அமோக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.

v kanth may 8

தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் நடக்கிற போர்தான் இந்த தேர்தல். சிறுபான்மை மக்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களுக்காகவும் நாங்கள் குரல் கொடுப்போம். ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரை பற்றி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். நான் பங்கேற்ற கூட்டங்களில் எல்லாம் எத்தனையோ முறை அவர்களை பற்றி பேசியிருக்கிறேன். எத்தனை முறைதான் அவர்களை திட்டுவது.

தமிழகத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் மணல் கொள்ளை அதிகமாக நடந்து வருகிறது. இதன் மூலம் பயன் அடைபவர்கள் இரண்டு கட்சியினர்தான்.இன்றைக்கு ராகுல்காந்தி சொல்கிறார், பெரியார், காமராஜர், அண்ணா வழியில் வந்தவர் கருணாநிதி என்று கூறுகிறார். கருணாநிதி எழுதி கொடுத்து ராகுல்காந்தியை பேச சொல்லியிருக்கிறார்.

இன்றைக்கு எங்கள் தேர்தல் அறிக்கையை பார்த்து ஜெயலலிதா காப்பி அடித்துள்ளார் என்று மு.க.ஸ்டாலின் கூறுகிறார். 2 பேரும் எதிலெல்லாம் ஒத்துப் போகிறார்கள், பாருங்கள். 50 ஆண்டு காலம் தமிழகத்தில் மாறி, மாறி தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் ஆட்சி செய்து ஊழல் புரிந்துள்ளன. எங்கள் 6 பேர் மீது எந்த குற்றச்சாட்டாவது இருக்கிறதா? நாங்கள் யாரும் ஜெயிலை பார்க்கவில்லை.

ஆனால் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் மீது குற்றச்சாட்டுகள் இருக்கிறது. இந்த இரு கட்சிகளும் மக்களுக்காக எந்த நன்மையாவது செய்தார்களா?. தப்பு எங்கு நடந்தாலும் என் கண்ணுக்கு தெரியும். யாராக இருந்தாலும் அடிப்பேன். அடித்தவர்கள் யாராவது என் மீது புகார் செய்தார்களா?

32 மாவட்டங்களிலும் என் மீது வழக்கு போட்டு சுற்ற விட்டார்கள். எல்லா வழக்கையும் உடைத்து விட்டு வெளியே வந்துள்ளேன். அ.தி.மு.க. ஆட்சியில் படித்த படிப்பிற்கு மரியாதை இல்லை. எல்லாவற்றிலும் லஞ்சம், ஊழல் இருக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் லஞ்சம், ஊழலை ஒழிப்போம். விவசாயத்தை என் இரு கண்களாக நினைக்கிறேன். முதலில் நான் விருத்தாசலத்தை தேர்ந்தெடுத்தேன். அடுத்து ரிஷிவந்தியம், இப்போது உளுந்தூர்பேட்டையில் நிற்கிறேன். நான் கிராமப்புறங்கள் அனைத்தையும் மாதிரி கிராமமாக மாற்றிக்காட்டுவேன். இந்த விஜயகாந்த் மக்களுக்காகத்தான் வாழ்வான், மக்களுக்காகத்தான் வாழ்ந்தான் என்று இருக்க வேண்டும்” என்று விஜயகாந்த் பேசினார்.

error: Content is protected !!