எக்ஸ்கியூஸ் மீ – இன்னும் கறுப்புப் பணம் வரல்லை!
500,1000த்தை மாத்தித்தர்றேன்னு சொல்லிட்டு நிறைய பேரு கிளம்பியிருக்காங்க..எத்தனை கோடி இருந்தாலும் பரவாயில்லை. ஹன்ட்ரன்ட்ஸ்ஸா வேணுமா இல்லே த்தவுசன்ஸ்ஸா வேணுமான்னு கேட்டு 25 பர்சென்ட்ல ஆரம்பிச்சு இந்த கணக்கில் வராத பணத்தை மாத்தறதுக்கு கமிஷன் 35 பர்சென்ட் வரை போகுது.. இதுல எத்தனை பேரு எத்தனை பேருக்கு முறையா மாத்திக்கொடுத்தாங்கங்கிறத விட எத்தனை பேரு பழைய நோட்டை வாங்கிகிட்டு மாத்திக்கொடுக்காம கல்த்தா கொடுத்தாங்கங்கிறது தான் அதிகம்.
திருடனுக்கு தேள்கொட்ன கதையா பணத்தை பறிகொடுத்தவங்க ஸ்டேஷனுக்கும் போகமுடியாம இவங்களை மறுபடியும் தொடர்பு கொள்ளமுடியாம மாட்டிக்கிட்டு முழிச்சுகிட்டு இருக்காங்க.. இன்னும் சிலர் ஏதாச்சும் மாற்றம் வரட்டும்ன்னு கமுக்கமா கணக்கில் வராத அல்லது கணக்கே காட்டமுடியாத கோடிகளை மாத்தாம வச்சுகிட்டு இருக்காங்க.. இன்னும் சில பேரு எப்படியாச்சும் பாங்க் மேனேஜர்களை கையில் போட்டு கிட்டு மாத்த முடியுமான்னு யோசிக்கிறாங்க. அது மிகப்பெரிய அளவுல மாத்தறதுக்கான வாய்ப்பு இல்லேங்கிறது நிச்சயமா தெரிஞ்சுபோச்சு..காரணம் ரிசர்வ் வங்கி கண்ல வெளக்கெண்ணைய்யை விட்டு வங்கிகளை கண்காணிச்சுகிட்டு வருது..
பொதுமக்கள் கொடுக்கிற 100 ரூபாய், 50 ரூபாய் நோட்டுகளும் போக்குவரத்துக் கழகங்கள், பெட்ரோல் நிலையங்கள்ல, சில மளிகைக்கடைகள், ஹோட்டல் கள்ல பதுக்கப்பட்டு அது இந்த கணக்கில் வராத நோட்டுக்களுக்கு கமிஷன் அடிப்படையில் கைமாறுது. சென்னையில் மீனம்பாக்கத்தில் இருக்கிற பிரபல பெட்ரோல் பங்க்ல ஒரு நாளைக்கு வசூலாகிற தொகையில் பாதிக்கு மேல் இப்படி பதுக்கப்பட்டு அது கமிஷனுக்காக கைமாறுவதா சொல்றாங்க..இப்படி சென்னையில் மட்டுமல்லாது இந்தியாவில் உள்ள சில பெட்ரோல் பங்க்குகள் கமிஷனுக்க ஆசைப்பட்டு 100 ரூபாய் நோட்டுக்களை அப்படியே பதுக்கிவக்க முயற்சி பண்றாங்க..
ஆக இப்படி இந்த கணக்கில் வராத 1000,500 ரூபாய் நோட்டுக்கள் பலவகைகள்ல வங்கிக்கு போகாம கருப்புப்பணம் கணக்கில் வராத பணம் நல்ல நோட்டுக் களா மாறுது. ஆனா இது மொத்த பதுக்கல்கள், கள்ளப்பணம், கருப்புப்பணம் இதை எல்லாம் கணக்கில் வச்சுப்பார்த்தோமுன்னா இப்படியான வகைகளில் மொத்தம் இருக்கிற பணத்தில் ஒரு 10 சதவீதம் இந்த மாதிரி வகைகள்ல மாற்றப்படுமான்னு தெரியல.. சரி இதுபோகட்டும்..
மத்திய அரசும் இப்படி வீம்பாகவும் ரொம்பவும் ஸ்ட்டிரிக்ட்டாகவும் 200 சதவீத அபராதம், 2.50இலட்சத்துக்கு மேல டெபாசிட் பண்ணா கணக்கு காமிக்கனும்கிறதெல்லாம் கொஞ்சம் தளர்த்தி அடிப்படையா சில சலுககைள் வழங்கினா வருமான வரித்துறைக்கும் ஒரு கணிசமான வருமானம் கிடைக்கும். இப்படி மறைமுகமா மாத்தனும்னு நினைக்கறவங்களும், மாத்தும்போது மத்தவங்ககிட்ட ஏமாந்துபோறவங்களும் நேரிடையாக வங்கிக்கு போய் பணத்தை தைரியமா டெபாசிட் பண்ணிட்டு வரிவகை யறாக்கள் போக மீதிப்பணத்தை வெள்ளையாக்கிக்க முயற்சி பண்ணுவாங்க.
1.2.6லேந்து 15 இலட்சம் வரை 10பர்சென்ட்டும், 15 இலட்சத்துக்கு மேல 25 இலட்சம் வரை டெபாசிட் பண்றவங்களுக்கு 15 பர்சென்ட், வரிகட்டச்சொ சொல்லிடலாம். அதுக்கு முன்னாடி வருஷங்கள்ல அவங்க வருமானவரி ரிட்டர்ன் தாக்கல் பண்ணியிருக் கனும். ரெண்டாவதா அவங்க கணக்குல அந்த பைனான்சியல் இயர்ல ஒரு முறைதான் இப்படி மாத்திக்க முடியும்ன்னு ஒரு விதிமுறையை கொண்டுவரனும். ஆனா 25 இலட்சம் வரை சோர்சஸ் எப்படின்னு கேட்கக்கூடாது. அவங்க பல வருஷமா வீட்ல சேர்த்து வச்ச பணமாகக்கூட அது இருக்கலாம். ஒரு வேளை ரிட்டர்ன் ஃபைல் பண்ணாதவங்களா இருந்தா 25 பர்சென்ட் பெறப்படும் வருமான வரித்தொகையில் கூடுதலா அபராதம் விதிச்சு அவங்க டெபாசிட் பணத்துல ரெண்டையும் பிடிச்சுகிட்டு மீதியை கொடுத்துடலாம்..
2. 26 இலட்சம் முதல் 50 இலட்சம் வரை கணக்கில் வராத பணத்தை டெபாசிட் பண்றவங்களுக்கு 25 பர்சென்ட் வரை வருமான வரியை பிடிச்சுகிட்டு மேலே முதல்ல சொன்ன அதே கண்டிஷன்களோட அவங்களோட பணத்தை கொடுத்துடலாம்.. இவங்களை வருடம் தோறும் கண்காணிக்கவேண்டிய பொறுப்பு வருமானவரி செய்யவேண்டும்..
3. 51 லேந்து 1 கோடி வரை 30 பர்சென்ட் பிளஸ் வரியில் 15 பர்சென்ட் அபராதம், சோர்ஸ்ஸஸ் அந்த அமெளன்ட்ல பாதிக்காச்சம் காட்டியாகனும்னு சொல்லனும். அப்படி காமிக்காம இருந்தா 40 பர்சென்ட் பிடிச்சுகிட்டு இனி அவர்கள் வருடம் தோறும் எல்லா கணக்கு வழக்குகள் வங்கிகள் மூலமே செய்யப்படவேண்டும் என்று ஒரு ஒப்பந்தத்தைப் பெற்றுக்கொண்டு எச்சரித்து அனுப்பலாம்..
4. 1 லேந்து 10 கோடி வரை 50 பர்சென்ட் வருமான வரி ப்ளஸ் அபராதம் ரெண்டையும் வசூல் பண்ணிட்டு 1ம் நெம்பர்ல சொன்னமாதிரி அவர்களின் கணக்குகள், சொத்துக்கள் போன்ற எல்லாத்தையும் கண்காணிக்கவும் இனி அவர்களது பரிவர்த்தனைகள் முழுவதும் வருமானவரித்துறையால் கண்காணிக்கப்படுமென்றும், அனைத்து பரிவரத்தனைகளும் வங்கிகள் மூலம் செய்யப்படவேண்டும் என்று எச்சரித்து அனுப்பிவிடலாம்..
5. 10 கோடிக்கு மேல ஆயிரக்கணக்கான கோடிகள்ன்னு கணக்கில் வராத பணம் வச்சிருக்கவங்களுக்கு அரசு எந்த சலுகையையும் காட்டக்கூடாது. ஏற்கெனவே அரசு அறிவித்த அறிவிப்பின் படி அவர்கள் வைத்திருக்கும் பணத்திற்கு முறையாக கணக்கு காண்பித்து வருமான வரியை செலுத்தவேண்டும். இவர்கள் தான் இன்று நாட்டின் பொருளாதார நிலையை சரியச் செய்தவர்கள். கருப்புப்பணத்தை பதுக்கியவர்கள். நாட்டில் விலை வாசியை உயர்த்தியவர்கள். டிசம்பர் 30 க்குள் ஒரு வேளை அரசாங்கம் வேறு விதமான சலுகைகள், வருமானவரி செலுத்துவதில் சலுகைகள் வழங்கப்படு மேயானால் பலனடைவது இவர்களாக இருக்கக்கூடும்.
எனவே அரசு 10 கோடி ரூபாய் வரை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாதவர்களுக்கு சில வரிச் சலுகைகளை அளித்து அவர்களது கணக்கில் வராத பணத்திற்கு வரியையைும் அபராதத்தையும் செலுத்தி விட்டு ஆண்டுதோறும் இனி அவர்கள் வருமான வரி செலுத்துவதற்கு வழிவகைகளை அரசு செய்து தரவேண்டும். இப்போது அரசின் இந்த கெடுபிடியால் தெரிந்தோ தெரியாமலோ தாங்கள் வைத்திருக்கும் பணத்தை என்ன செய்வது என்று குழம்பிக் கொண்டு இருப்போர்கள் இவர்களில் எண்ணற்றோர்கள். இவர்களுக்காக சில சலுகைகள் வழங்குவதால் அரசுக்கு எந்த இழப்பீடும் ஏற்பட்டுவிடாது..
வருமானவரித்துறைக்கும் இதனால் கணிசமான வரிவகைகளின் மூலம் வருமானம் வர வாய்ப்புண்டு. இவர்களும் இனி இதுபோன்ற தவறைச் இனி வருங்காலத்தில் செய்யக்கூடாது என்றெண்ணுவர்.. டிசம்பர் 30 ம்தேதிக்குள் ஏதாவது அறிவிப்புகள் வராதா என்று காத்திருப்போர்கள் இந்த அதிகபட்சமாக 10 கோடி ரூபாய் வரை கணக்கில் வராத ரூபாய்களை வைத்திருக்கும் நபர்கள் தான்.. இந்த 10கோடி ரூபாய் வரை கணக்கில் வராத பணம் வைத்திருப்போரின் எண்ணிக்கை சற்று கூடுதலாகத்தான் இருக்கும். அவர்களை இப்படி கெடுபிடிகள் அரசாங்கம் செய்வதால் மாற்றுவழிகளை ஆராய்கின்றனர். சிலர் கணக்கு எப்படி காட்டுவது என்று பயந்து கொண்டு 40 சதவீதம் வரை கூட கமிஷன் கொடுத்துவிட்டு மாறும் நோட்டுக்களை பெற்றுக்கொள்கின்றனர். ஒரு சிலர் இந்த கமிஷன் ஏஜென்ட்டுகளால் பணத்தையும் இழந்துவிடுகின்றனர்.
ஒரு சிலர் நாம கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணம் யாருக்கும் கொடுக்கவும் கூடாது, மத்தவங்க அனுபவிக்கக்கூடாது, வங்கியிலேயும் டெபாசிட் பண்ணக்கூடாது என்று அதனை புதைக்கவும், எரிக்கவும் தயாராகிவருகின்றனர்..
அரசு இந்த வருமானவரி விஷயத்தில் கணக்கில வராத பணத்தில் சில சலுகைகளை காட்டுமேயானால் பலர் தைரியமாக இருக்கும் பணத்தை வங்கியில் செலுத்தி விட்டு வருமான வரியை கட்டத்தயாராவார்கள்.. அரசும் வருமானவரித்துறையும் தான் இதுபற்றி ஆலோசனை செய்யவேண்டும்..
பதுக்கல், கருப்புப்பணம், கள்ளநோட்டுக்கள் போன்ற வற்றை ஒழிக்க அதிரடி மாற்றம் தேவைதான். இது போன்ற சிறிய அளவிலான பதுக்கல்காரர்களுக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்ட விதிமுறைகளை கொஞ்சமாக சலுகைகள் வழங்கி அவர்களை இதுபோன்ற தவறுகள் செய்யக்கூடாது இனியும் செய்யக்கூடாது என்று எச்சரித்து விட்டுவிடலாமே…
இதுவரை கணக்கில் வராத பணம் இன்னமும் வங்கிக்கு செல்லாமல் ஆயிரக்கணக்கான கோடிகள் பதுக்கல்காரர்களிடமே உள்ளது.. டிசம்பர் 30 வரை என்னென்ன மாற்றங்களை மத்திய அரசும் வருமான வரித்துறையும் கொண்டு வருகின்றது எனப்பார்ப்போம். மாற்றம் ஒன்றே மாறாதது..