டாடா – விமர்சனம்!
2 கே அல்லது 90ஸ் கிட்ஸ் ஆகட்டும் இளமைக்காலத்தில் வாழ்வதென்னவோ இப்படித்தான்..ஆனால் ஒரு வீம்பு அல்லது பொறுப்பு வந்து விட்டால் எல்லா இளசுகளின் லைஃப் ஸ்டைலே மாறி விடும் என்பதை அழகான ஃபீல் குட் கதையுடன் சொல்லி அசத்தி உள்ளார்கள் டாடா டீம்..! அடுத்தடுத்து என்னதான் நடக்குமென்று ஊகிக்க முடிந்த நிலையிலும் ஃபர்பெக்டான திரைக்கதையினால் சகலருக்கும் பிடித்த சினிமா ஒன்றைக் கொடுக்க முடியும் என்பதை உறுதிப்படுத்தி விட்டார்கள்.
கதை என்னவென்றால் கதையை ஆரம்ப பேராவில் சொன்னது போல் அப்பா & அம்மா பேச்சைக் கேட்மால், சரியாக படிக்காமல், தறுதலையாக சுற்றும் காலேஜ் மாணவன் மணிகண்டன்(கவின்). இவருக்கும், அதே காலேஜில் படிக்கும் சிந்துவிற்கும்(அபர்ணா தாஸ்) லவ்.. அந்த லவ்வால் அபர்ணா தாஸ் கர்ப்பம் ஆகி விடுறார். இதை எதிர்பார்க்காத நாயகன் கவின் அந்த கர்ப்பத்தை கலைக்கச் சொல்கிறார். அதை நாயகி அபர்ணா கேட்காத சூழலில் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள நேருகிறது
அப்படி மேரேஜ் ஆன பிறகும் கூட நாயகன் ஊதாரியாகவே வருகிறார், போகிறார் . அதிலும் அன்றாடம் குடித்து விட்டு வீட்டிற்குள் வருகிறார். என்றாவது திருந்தி விடுவார் என்று நினைத்த கணவன் இன்னும் இப்படியே இருக்கிறாரே என்று மனம் நொந்து போகிறார், நாயகி. ஒரு கட்டத்தில் நாயகன் டென்ஷனாகி, “நீ செத்துரு” என்று சொல்லி விட்டு போய் விடுகிறார் , அதை அடுத்து மனைவிக்கு பிரசவ வலி வந்து கால் செய்யும் போதும் அதை பொருட்படுத்தாமல், போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து விடுகிறார். இதை அடுத்து, குழந்தை பெற்ற அபர்ணா தாஸ் அக்குழந்தையை ஹாஸ்பிட்டலியே விட்டு விட்டு தனது அப்பா & அம்மாவுடன் போய் விடுகிறார்.
இதை அடுத்து கைக்குழந்தையை வளர்க்கும் முழு பொறுப்பும் நாயகனிடத்தில் வருகிறது. அதுவரை வெட்டியாக பொறுப்பில்லாமல் சுற்றித் திரிந்த ஹீரோ தனது குழந்தைக்கு நல்ல அப்பாவாக இருக்க முடிவு செய்கிறார். கூடவே தனது மனைவிக்கு குழந்தையை காண்பிக்கவே கூடாது என்ற எண்ணத்தோடு நாட்களைக் கடத்துகிறார், ஆனால் சில வருஷங்கள் கழித்து மனைவியை எதிர்பாராத விதமாக சந்திக்கிறார். அதை அடுத்து நடக்கும் அட்டகாசமான கிளைமாக்ஸ்தான் டாடா.
நாயகனாக வரும் கவின் சிம்பிளாக சொல்வதானால் ஸ்கோர் செய்கிறார்.. ஒட்டு மொத்த யூத்களின் சாயலைப் பக்காவாக வெளிக்காட்டி அசத்துகிறார்.. இண்டர்வெல் வரை, வெட்டித்தனமாக ஊதாரியாக வரும் போது காண்போரை கடுபேற்றுவதில் ஜெயித்து விடுகிறார். அதிலும் , திருமணத்திற்கு பிறகு பொறுப்பற்ற கணவராக வருபவரைப் பார்த்து, ச்சீ இவனெல்லாம் ஏன் உயிரோடு இருக்கிறான் என்று ரசிகர்கள் கோபமாக கேட்கவும் வைத்து விடுகிறார், ஆனால் குழந்தை ஸ்பரிசத்தப் பின்னர் தொடரும் காட்சி பின்னணிகளால் மேற்படி நெகடிவ் பிம்பத்தை மொத்தமாக அழித்துக் காட்டி விடும் வித்தையையும் செய்கிறார்..எமோஷன், காதல், பாசம், காமெடி எல்லாவற்ரிலும் அதகளம் செய்து அப்ளாஸ் வாங்குகிறார்
நாயகி அபர்ணாதாஸ் கிடைத்த வாய்ப்பை மிகச் சிறப்பாக பயன்படுத்தி வாவ் சொல்ல வைத்திருக்கிறார். அவர் இல்லாத காட்சிகளிலும் அவரை தேடும் வகையில் இருப்பதைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்..கவினின் மகனாக வரும் குழந்தை நட்சத்திரம் ஆத்விக் சோ க்யூட்.கேரக்டர் ஆர்டிஸ்டான விடிவி கணேஷ், இப்படத்தில் கவினுக்கு அறிவுரை சொல்வது போல் அவ்வப்போது வந்து தியேட்டரை கலகலப்புக்குள்ளாகிறார். . அடிசினல் ரோலில் வரும் பிரதீப் ஆண்டனி, ஹரிஷ் குமார் ஆகியோர் மனதில் நிற்கின்றனர்
பாடல்கள் எல்லாமே ரசிக்க வைக்கிறது. குறிப்பாக “தாயாகா நான்..” பாடல் திரும்ப கேட்க தோன்றுகிறது. ஜென் மார்டினின் பின்னணி இசையும் படத்துக்கு பலம் சேர்த்துள்ளது…! யதார்த்ததை பிரதிபலிக்கும் வசனங்களும் ப்ளஸ் பாயிண்ட்
மொத்தத்தில் ஒரு சினிமா ரசிகனுக்கு தேவையான முழு மசாலாக்கள் கலந்த ஃபுல் மீல்ஸ் இது
மார்க் 3.75/5