கொரோனாவுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்க 9 மாதங்கள் வரை ஆகும்! – செளமியா தகவல்!

கொரோனாவுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்க 9 மாதங்கள் வரை ஆகும்! – செளமியா தகவல்!

உலக மக்களை மிரட்டி வரும் கொரோனா வாக்சின் சோதனைகளை நடத்தி முடிக்க 6 முதல் 9 மாதங்கள் ஆகும் என்று உலக சுகாதார நிறுவன தலைமை அறிவியல் நிபுணர் சௌமியா அறிவித்துள்ளார்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் இந்தியன் வைராலஜி நிறுவனமும் ஹைதராபாத் மருந்து கம்பெனி ஒன்றுடன் இணைந்து தயாரிக்கும் வாக்கினை ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கு முன்னர் வெளியிட வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கடிதம் அனுப்பி இருப்பது குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை அறிவியல் நிபுணர் சௌமியா சுவாமிநாதனிடம் ஆங்கில நாளிதழ் ஒன்று கேள்வி எழுப்பியிருந்தது.

அந்த கேள்விக்கு உரிய பதிலை ஈமெயில் மூலம் சௌமியா சுவாமிநாதன் அனுப்பியுள்ளார். அவர் தன்னுடைய ஈமெயில் பதிலில் கூறியுள்ள விவரம் :

வாக்சின் ஒன்றுக்கான ஒன்று முதல் மூன்று பிரிவு சோதனைகளை வெற்றிகரமாக நிறைவேற்ற 6 முதல் 9 மாதங்கள் ஆகும்.

இந்தியாவை சேர்ந்த 7 கம்பெனிகள் கொரோனா வைரஸ் வாக்சின் தயாரித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன .இது உண்மையில் ஊக்கம் அளிக்கும் செய்தியாகும். இந்த ஏழு கம்பெனிகள் தயாரிக்கும் வாக்சின்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.. அவை அனைத்தும் மூன்று கட்ட சோதனைகளுக்கு முறையாக உட்படுத்தப்பட வேண்டும்.

இந்த மூன்று கெட்ட சோதனைகளின் முடிவுகள் வெளியாகும் வரை நம்மால் இந்த வாக்சின்கள் குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்க இயலாது.

நெருக்கடியான காலத்தில் வாக்சின்களுக்கான சோதனை நடைமுறையை எளிமைப்படுத்த அமெரிக்காவின் உணவு மருந்துகள் ஏஜென்சி ஆவணம் ஒன்றை தயாரித்துள்ளது .அதே போல உலக சுகாதார நிறுவனமும் ஆவணம் ஒன்றை தயாரித்துள்ளது .ஆனால் தடுப்பூசி மருந்துகளுக்கான சோதனைகளை முறைப்படி நடத்த வேண்டும் என்பது மிகவும் முக்கியம்.

அதே நேரத்தில் சோதனைகளுக்குப் பிறகு இந்த வாக்சின்களை பெரும் அளவில் உற்பத்தி செய்து தேவைக்கு ஏற்ற அளவில் அவற்றை விநியோகம் செய்வதும் மிகவும் முக்கியமானதாகும். எனவே சோதனைகளில் கவனம் செலுத்துவது போல சோதனைகளுக்குப் பிறகு அவற்றின் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் கவனம் செலுத்துவதும் அவசியம் என்று சௌமியா தெரிவித்தார்.

Related Posts

error: Content is protected !!