கோபா அமெரிக்கா கால்பந்து கோப்பை : அர்ஜெண்டினா அணி கைப்பற்றியது!

கோபா அமெரிக்கா கால்பந்து கோப்பை : அர்ஜெண்டினா அணி கைப்பற்றியது!

விளையாட்டு பிரியர்களின் திருவிழாக்களில் ஒன்றான கோபா அமெரிக்கா கால்பந்து 47-வது போட்டி பிரேசில் நாட்டில் நடைபெற்றது. 10 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் பிரேசிலும், அர்ஜென்டினாவும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. ரியோடி ஜெனிரோ நகரில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினாவும், பிரேசிலும் மோதின. கொரோனா வைரஸ் அச்சத்தால் போட்டி நடந்த ரியோடி ஜெனிரோ நகரில் உள்ள மார்கானா அரங்கில் 10 சதவீதம் ரசிகர்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டு இருந்தது. தொடக்கம் முதலே இரு அணிகளும் ஆக்ரோஷமாக கோல் போட முனைப்பு காட்டின.

விறுவிறுப்பாக நடைபெற்ற முதல் பாதியின் 22-வது நிமிடத்தில், அர்ஜென்டினா வீரர் ரோட்ரிகோ டீ பால் தன்னிடம் இருந்து பந்தை ஏஞ்சல் டி மரியாவுக்கு பாஸ் செய்தார். அந்த பந்தை ஏஞ்சல் டி மரியா, பிரேசில் வீரர் எடர்ஸனை லாவகமாகத் தாண்டி பந்தை தூக்கி அடித்து கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். இதனால் முதல் பாதியில் அர்ஜென்டினா 1-–0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

இதைத் தொடர்ந்து 2வது பாதி ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி தடுப்பாட்டத்தைக் கையாண்டது. பிரேசில் வீரர்கள் கோல் அடிக்க முயன்ற வாய்ப்புகளை தகர்த்தனர். 2-வது பாதியிலும் பிரேசில் அணி வீரர்கள் கோல் அடிக்க முயன்றும், அர்ஜென்டினா வீரர்கள் சுவர் போல் தடுத்து கோல் அடிக்கும் வாய்ப்புகளை தகர்த்தனர். கடைசி நேரத்தில் பிரேசல் அணிக்கு கார்னர் கிக் கிடைத்தது, அதை நெய்மர் கோல் அடிக்க சுழற்றி அடிக்க, பிரேசில் கேப்டன் தியாகோ சில்வா தலையில் முட்டி கோல் அடிக்க முயன்றார், ஆனால், பந்து கோல் போஸ்ட்டுக்கு மேல் பட்டுச் சென்று ஏமாற்றமளித்தது.

இதைத் தொடர்ந்து பிரேசில் அணியை 0–-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. கோபா அமெரிக்கா போட்டியில் அர்ஜென்டினா சாம்பியன் பட்டம் வெல்வது இது 15-வது முறையாகும். ஆட்டநாயகன் விருது அர்ஜென்டினா வீரர் டி மரியாவுக்கு வழங்கப்பட்டது.

இதற்கு முன், 1921, 1925, 1927, 1929, 1937, 1941, 1945, 1946, 1947, 1955, 1957, 1959, 1991, 1993 ஆகிய ஆண்டுகளில் அர்ஜென்டினா கோபா அமெரிக்கா சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இதற்கு முன் கடைசியாக கடந்த 1993-ம் ஆண்டு சாம்பின் பட்டத்தை அர்ஜென்டினா அணி வென்றிருந்தது. அதன்பின் 28 ஆண்டுகளுக்குப்பின் லயோனல் மெஸ்ஸி தலைமையில் அர்ஜென்டினா அணி கோப்பையை வென்றது. அர்ஜென்டினா சீனியர் அணிக்கு லயோனல் மெஸ்ஸி தலைமையில் பெறும் முதல் கோப்பை இதுவாகும். ஏறக்குறைய 16 ஆண்டுகளுக்குப்பின் தனது அணிக்காக மெஸ்ஸி கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.

லீக் சுற்றில் சிலி, உருகுவே, பாராகுவே, பொலிவியா நாடுகளை வென்று காலிறுதிக்கு அர்ஜென்டினா அணி தகுதி பெற்றது. காலிறுதியில் ஈக்வெடார் அணியை 0-3 என்ற கோல்கணக்கில் வென்று அரையுறுதிக்கு அர்ஜென்டினா தகுதி பெற்றது. அரையிறுதியில் கொலம்பியா அணியுடன் ஆட்டம் 1-1 என்ற கணக்கில் அர்ஜென்டினா டை செய்தது. இதையடுத்து நடத்தப்பட்ட பெனால்டி சூட்அவுட்டில் கொலம்பியா அணியை 2-3 என்ற கணக்கில் வீழ்த்தி பைனலுக்கு அர்ஜென்டினா தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த கோப்பா அமெரிக்காவில் மெஸ்ஸி ஒட்டுமொத்தமாக 4 கோல்கள் அடித்துள்ளார். 2-வது இடத்தில் அர்ஜென்டினா வீரர் லாடாரோ மார்டினஸ் 3 கோல்கள் அடித்துள்ளார். சொந்த நாட்டில் நடந்த இறுதி போட்டியில் பிரேசில் அணி தோல்வியடைந்திருப்பதால் அந்நாட்டு ரசிகர்கள் பெரும் கோபத்தில் உள்ளனர். கோபா அமெரிக்காவை அதிக முறை வென்ற அணி என்ற உருகுவேவின் சாதனையை அர்ஜென்டினா சமன் செய்தது

error: Content is protected !!