ரோபோட் எந்திரத்தை திருமணம் செய்து கொண்ட சீன இளைஞன்!
நம் அண்டை நாடான சீனாவில் ஜனத்தொகை அதிகரித்துக் கொண்டே போனதால் அங்குள்ள தம்பதியினர் ஒரு குழந்தை மட்டுமே பெற்று கொள்ள வேண்டும் என்று சட்டம் இருந்தது. எனவே, பெரும்பாலான தம்பதியினர் ஆண் குழந்தைகளை மட்டுமே தேர்வு செய்து பெற்றுக்கொண்டனர். இதனால் பெண் குழந்தைகள் பிறப்பு மிக குறைவாக இருந்ததுடன் அவர்கள் வளர்ந்து ஆளாகி உள்ள நிலையில் தற்போது ஆண்களுக்கு மணப்பெண்கள் கிடைக்கவில்லை. இதனால் பல ஆண்கள் அதிக வயது ஆகியும் திருமணம் செய்து கொள்ள முடியாமல் இருக்கிறார்கள்.
இப்படி பெண் கிடைக்காததால் வாலிபர் ஒருவர் ரோபோட் எந்திரத்தை திருமணம் செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. அந்த வாலிபரின் பெயர் செங் ஜியா ஜியா (வயது 31). ரோபோட் என்ஜினீயரான இவர், பல்வேறு ரோபோட்டுகளை உருவாக்கி உள்ளார். கடந்த ஆண்டு இளம்பெண்ணை போன்ற தோற்றம் உடைய ரோபோட் ஒன்றை உருவாக்கினார். அதற்கு இங் இங் என்று பெயரிட்டார்.
இதனிடையே இவர் திருமணம் செய்வதற்காக நீண்ட நாட்களாக பெண் தேடி வந்துள்ளார். தனக்கு 31 வயது பூர்த்தியடைந்தும், இதுவரை தனக்கு விருப்பமான பெண் அமையாததால் விரக்தியுற்றார். பெண் கிடைக்காத விரக்தியில் இருந்த ஜெங் ஜியாஜியா தான் உருவாக்கிய பெண் ரோபோட்டையே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். இதற்கு அவரது குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்தனர்.
இதையடுத்து இவருக்கு நடைபெற்ற திருமண விழாவில் ஜியாஜியாவின் தாயாரும் மற்றும் நண்பர்களும் கலந்துகொண்டுள்ளனர்.திருமணத்தில் இங் இயிங் ரோபோவின் மீது பாரம்பரிய சிவப்பு தாவணி கொண்டு அலங்கரிக்கப்பட்டு பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது.
இந்நிலையில் 35 வருடங்களுக்கு பிறகு ரோபோவை மனிதர்கள் மணமுடிப்பது இயல்பாகி விடும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளதும் நம் இந்தியாவில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை கணக்கிடுகையில் இங்கு இன்னும் 10 வருடங்களில் அந்த நிலை வந்துவிட்டாலும் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது..