செர்னோபில் அணுமின் நிலையம் ரஷ்யாவிடமிருந்து மீட்பு!- உக்ரைன் தகவல்!

செர்னோபில் அணுமின் நிலையம் ரஷ்யாவிடமிருந்து மீட்பு!- உக்ரைன் தகவல்!

ஷிய ராணுவ கட்டுப்பாட்டில் இருந்த செர்னோபில் அணுமின் நிலையம் மீட்கப்பட்டதாக சர்வதேச அணுசக்தி நிறுவனத்திடம் உக்ரைன் தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது படையெடுத்த ரஷிய படைகள் தொடர்ந்து 19-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு செர்னோபில் அணு உலை பகுதியை ரஷிய ராணுவம் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது. எனினும், இங்கு வெளியாகும் கதிர்வீச்சு அளவு குறித்த புள்ளிவிவரங்கள் சர்வதேச அணுசக்தி முகமைக்கு தொடர்ந்து தகவல்கள் அனுப்பப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக செர்னோபில்லில் இருந்து தங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை என சர்வதேச அணுசக்தி முகமை தெரிவித்துள்ளது. அணுமின் நிலைய ஊழியர்கள் ரஷ்ய ராணுவத்தினர் கட்டுப்பாட்டில் இருப்பதால் அங்கு என்ன நிலை என்பது தெரியாதது, கவலை தருவதாக சர்வதேச அணுசக்தி முகமை தெரிவித்துள்ளது.

செர்னோபில் அணு உலையில் மின்வசதிகளைத் தரும் கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதாகவும் விரைந்து அதைச் சரி செய்யாவிட்டால் அணு எரிபொருள் சேமிப்பு வசதியின் குளிரூட்டும் அமைப்புகளிலிருந்து அதிகப்படியான கதிர்வீச்சு வெளியேறும் அபாயம் இருப்பதாகவும் உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். மேலும், அவர் ‘ரஷியாவின் இந்த ஆபத்தான நடவடிக்கைகள் ஐரோப்பாவை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது’ எனக் குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில் 4 நாள்களுக்கு பிறகு ரஷிய கட்டுப்பாட்டில் இருந்த செர்னோபில் அணுமின்நிலையம் மீட்கப்பட்டதாக உக்ரைன் அணுசக்தி நிறுவனம் அறிக்கை அளித்துள்ளதாக சர்வதேச அணுசக்தி நிறுவன இயக்குனர் தெரிவித்துள்ளார்.

மேலும் உக்ரைன் அணுசக்தி நிறுவனம், செர்னோபில் அணுமின் நிலையத்தில் பழுதான மின்இணைப்பின் ஒரு பகுதியை சரிசெய்துவிட்டதாகவும் இப்போது அணுமின் நிலையத்துக்கு தேவையான மின்சாரம் முழுவதையும் வழங்க முடியும் என்றும் தகவல் அளித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தற்போது செர்னோபில் அணுமின் நிலையம் தொடர்ந்து டீசல் ஜெனரேட்டரில் இயங்கி வருவதாகவும் விரைவில் உக்ரைன் அரசின் மின்துறை இணைப்பில் இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செர்னோபில் அணுமின் நிலையத்தில் கடந்த 1986-ம் ஆண்டு ஏற்பட்ட விபத்தில் அதிளவு கதிர்வீச்சு வெளியானதில் ஏராளமானோர் உயிரிழந்தனர். மேலும் கதிர்வீச்சு பரவியதால் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Posts

error: Content is protected !!