தடையை மீறி பட்டாசு வெடித்தால் 6 மாசம் ஜெயில்! – போலீஸ் எச்சரிக்கை!
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மீறி 2 மணி நேரத்துக்கு மேல் பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று சென்னை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தீபாவளி பண்டிகையின் போது, இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. மேலும், தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரத்தை அரசு முடிவு செய்து கொள்ளலாம் என்று அறிவித்தது. அதன்படி காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில், அனுமதிக்கப் பட்ட நேரத்தை விட கூடுதலான நேரம் பட்டாசு வெடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அந்த சுற்றறிக்கையில் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி பட்டாசு வெடித்தால் இந்திய தண்டனை சட்டம் 188வது பிரிவின் கீழ் 6 மாதம் சிறை அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் என்றும், மேலும், இரண்டையும் சேர்த்தும் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இதனிடையே பட்டாசு வெடிப்பதற்கு உச்ச நீதிமன்றம் நேரக் கட்டுப்பாட்டு விதித்ததற்கு பிறகு முதல் வழக்கு டெல்லியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லியின் காசிப்பூர் பகுதியில் சிறுவன் பட்டாசு வெடித்தது குறித்து, பக்கத்து வீட்டு நபர் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சிறுவனிடம் இருந்து பட்டாசுகளை பறிமுதல் செய்ததுடன், நீதிமன்றம் விதித்துள்ள நேர கட்டுப்பாட்டை மீறிய குற்றத்திற்காக சிறுவனின் தந்தை மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.