காவிரி படுகை ஆய்வுக்கான ஆயத்தக் கூட்டம் இன்று தொடக்கம்!
காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பான தமிழக அரசின் மனுவை கடந்த 4-ம் தேதி விசாரித்த சுப்ரீம் கோர்ட், மத்திய உயர்நிலை தொழில்நுட்பக் குழுவை அமைத்து காவிரி படுகையை ஆய்வு செய்து வரும் 17-ம் தேதிக்குள் ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
மத்திய நீர் ஆணையத்தின் தலைவர் ஜி.எஸ்.ஜா தலைமையில் செயல்படும் இக் குழுவில் மத்திய நீர் ஆணைய பிரதிநிதி சையத் மசூத் ஹுசேன் ( நீர் மற்றும் திட்டமிடல் ), ஹைதராபாத்தில் உள்ள மத்திய நீர் ஆணையத்தின் கிருஷ்ணா, கோதாவரிப் பாசன அமைப்பின் தலைமைப் பொறியாளர் ஆர்.கே. குப்தா, மத்திய நீர்வளத் துறை முதன்மைச் செயலர் ராகேஷ் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
உயர்நிலை தொழில்நுட்பக் குழுவின் முதல் ஆயத்தக் கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு பெங்களூருவில் நடைபெறுகிறது.
காவிரி ஆறு உற்பத்தியாகும் தலைக்காவிரியில் தொடங்கி மைசூரு, மண்டியா, ஒகேனேக்கல், மேட்டூர், திருச்சி, தஞ்சாவூர், நாகை ஆகிய இடங்களில் பார்வையிட்டு கடைசியாக பூம்புகாரில் கடலில் கலப்பதுவரை இக்குழு ஆய்வு செய்யும் எனக் கூறப்படுகிறது.
இக்குழு தன் அறிக்கையை வரும் 17-ம் தேதி சமர்ப்பிக்கும்.
உயர்நிலைக் குழு ஆய்வு செய்ய இருக்கும் முக்கிய இடங்கள்:
கர்நாடகா : கிருஷ்ணராஜசாகர் அணை, ஹேமாவதி அணை, கபினி அணை, ஹாரங்கி அணை
தமிழகம் : மேட்டூர் அணை, லோயர் பவானி அணை, அமராவதி அணை.
கேரள அணை : பாணசுர சாகர்