வாடகை தாய் சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
நம் நாட்டில் வாடகைத் தாய்க்கான தனிச் சட்டம் இயற்றப்படாவிட்டாலும், இந்திய மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரம் இருப்பதால், இந்தியாவை உலகின் குழந்தை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை (Baby Factories) என்று வேடிக்கையாகக் கூறும் அளவுக்குச் செயலாற்றிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் Commerical Surrogacy என்று சொல்லக்கூடிய வியாபார ரீதியாக செயல்படும் வாடகைத் தாய்கள், ஒரு கருவை தன் கருப்பையில் சுமப்பதற்கு அதற்காகபேறுகால வாடகையாக ஒரு தொகையை பெற்றுக்கொண்டு செயலாற்றி வருகிறார்கள். 2002ம் ஆண்டிலிருந்து நம் நாட்டில் வியாபார ரீதியான வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் முறை ஒருவித அங்கீகாரத்துடன் நடைபெறுகிறது. இந்திய உச்ச நீதிமன்றம் 2008ல், இவ்வாறான Commerical Surrogacy இந்தியாவில் அனுமதிக்கக்கூடியதே என்ற கருத்தை பதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2002ம் ஆண்டு முதல் இதற்கான சட்டம் இயற்றுவதற்கான மாதிரி நகல் தயாரிக்கும் முயற்சியும் விவாத அளவிலேயே இருந்து வந்த நிலையில் வெளிநாட்டவர்கள் இந்தியாவில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள புதிய விதிமுறைகளை இந்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, வெளிநாட்டை சேர்ந்த ஓரின சேர்க்கை தம்பதிகள் இனிமேல் இந்தியாவில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது.
அதே போல் வாடகை தாய் மூலம் குழந்தை பெறுவதை அனுமதிக்காத ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த தம்பதிகளும் இனிமேல் இந்தியாவில் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது. வாடகை தாயாக ஒப்பந்தம் செய்து கொள்பவர் 21 வயது நிரம்பியவராகவும், 35 வயதுக்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும். வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பும் வெளிநாட்டவர்கள் இனிமேல் மருத்துவ விசாவில் இந்தியா வர வேண்டும். சுற்றுலா விசாவில் வந்து குழந்தை பெற்றுக் கொள்ளக்கூடாது.
வாடகை தாய் குழந்தையை பார்க்க விரும்பினால் காட்ட வேண்டும். தம்பதி வெளிநாட்டுக்கு சென்றுவிட்டால் வாடகை தாய் அங்கு சென்று குழந்தையை பார்க்க அனுமதிக்க வேண்டும். வாடகை தாயுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் தொடர்பான நகலை இந்திய தூதரகத்திடம் தர வேண்டும் உள்ளிட்ட புது விதிமுறைகளை உள்துறை அமைச்சகம் வெளியிட்டது.
இதுதொடர்பாக, கடந்த ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்தில் புதிய சட்ட மசோதா தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டது. ஆனால், இந்த மசோதாவுக்கு இறுதி வடிவம் கொடுக்கப்படாததால் அப்போது நடைபெற்ற பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது இந்த மசோதாவை அறிமுகப்படுத்த இயலவில்லை.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுரையின் பேரில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா, வணிகவரித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோர் அடங்கிய மந்திரிகள் உயர்மட்ட குழு ”வாடகை தாய் சட்டம் – 2016”-க்கு இறுதி வடிவம் கொடுத்தது.
இதுபோன்ற வாடகை தாய் மூலமான குழந்தை பிறப்பை வெளிப்படையாகவும், சட்டபூர்வமாக்கவும் வகை செய்யும் இந்த சட்ட மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய மந்திரிசபை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.