March 22, 2023

போரிஸ்கா மர்மம் – செவ்வாய் கிரகத்திலிருந்து வந்த பொடியன்!

அண்மையில் நடிகர் ராஜேஷ் சாரை அவரது இல்லத்தில் சந்தித்தேன். அருமையான காஃபியுடன் ஒரு நல்ல உரையாடல். அப்போது சொன்ன பல விஷயங்கள் எனக்கு புதுசாக இருந்தன. அவரிடம் பேசி வந்த பிறகு ராஜேஷ்  சொன்ன சில பேர் மற்றும் விஷயங்களை கூகுளில் போட்டு சர்ச் பண்ணிய போது இதையெல்லாம் எப்படி உடனுக்குடன் அறியாமல் போனோம் என்று வருத்தமே ஏற்பட்டது.

அவரிடமிருந்து அறிந்து கொண்ட ஒரு சோறு பதம் நீங்களே பாருங்களேன்..

அற்புதங்கள் தினமும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அற்புதங்கள் பற்றிய உங்கள் பார்வையை மாற்றிக் கொண்டு பாருங்கள். உங்களைச் சுற்றி ஏராளமான அற்புதங்கள் நிகழ்வதை நீங்கள் காண்பீர்கள்.” – ஜோன் போன் ஜோவி

அறிவுஜீவியான இண்டிகோ பையன் (மிகவும் அறிவு மிக்கவர்களை இண்டிகோ என்று அழைப்பர்) தான் முற்பிறவி ஒன்றில் செவ்வாய் கிரகத்தில் பிறந்தவன் என்று சொல்லி வருகிறான். ரஷியாவைச் சேர்ந்த இந்தப் பையனின் பெயர் போரிஸ்கா (Boriska).  நாளுக்கு நாள், வளர வளர, வயது ஏற ஏற, தன் வியத்தகு அறிவினால் அனைத்து விஞ்ஞானிகளையும் அசத்தி வருகிறான் போரிஸ்கா.அறிவியலுக்குச் சவால் விடும் வகையில் உலகெங்கும் பலர் இப்படி அடிக்கடி பிறந்து கொண்டே தான் இருக்கின்றனர். விஞ்ஞானிகளால் திகைப்பதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியவில்லை.

ஆம்.. பிறந்து பதினைந்தே நாட்கள் ஆன குழந்தையின் தலை நிற்குமா? நான்கு மாதத்தி லேயே தாயை ‘அம்மா’ என்றழைக்குமா? ஒன்றரை வயதிலேயே செய்தித்தாள் தலைப்புச் செய்திகளைப் படிக்குமா? இரண்டு மூன்று வயதிலேயே விண்வெளியைப் பற்றி விளக்கிக்  கூறும் அறிவு கிட்டுமா?

வழக்கமாக நம் மூளையில் பதியப்பட்ட தகவல்களின்படி, ‘இல்லை’ என்பதே நம் பதிலாக இருக்கும்.

ஆனால் ‘ஆம்’ என்று சொல்கிறார்கள் போரிஸ்காவின் பெற்றோர்.

யார் இந்த போரிஸ்கா?

ரஷ்யாவில், சைரினொவிஸ்க் என்னும் நகரத்தில் ஜனவரி 11, 1996ல் பிறந்தவன் போரிஸ் கிப்ரியானோவிச், சுருக்கமாக போரிஸ்கா. மேலே கேட்கப்பட்ட அத்தனை கேள்விக்குறி களையும் ஆச்சரியக்குறிகளாக மாற்றியவன். தற்போது 12  வயதாகிறது இந்தச் சிறுவனுக்கு.

இவனது அசாத்தியமான ஆற்றல்களைக் கண்டு கவலைப்படுகின்றனர் பெற்றோர். புதிரான சில வழிகளின் மூலம் அவனுக்குள் தகவல்கள் ஊட்டப்படுவதாக எண்ணுகின்றனர். இரண்டு வயதிலேயே கிண்டர் கார்டனில் சேர்க்கப்பட்ட போரிஸ்காவின்  மொழியாற்றல்,  நினைவுத் திறன், சுட்டித்தனம் போன்றவை அசாதாரணமாய் இருந்ததாக ஆசிரியர்கள் கூறுகின்றனர். யாரும் அவனுக்கு சொல்லிக் கொடுக்காமலே ‘தானாக’ பல திறமைகள் அவனுக்கு வந்ததாகக் கூறுகின்றனர்.

சில நேரங்களில், சம்மணமிட்டு அமர்ந்து செவ்வாய் கிரகம், அங்கு நிலவிய வாழ்க்கை முறை, இதர கிரக அமைப்புகள் போன்றவற்றைப் பற்றி விவரிக்கிறானாம் போரிஸ். தான் செவ்வாய் கிரகத்திலிருந்து பிறப்பெடுத்து இங்கு வந்ததாகவும்,  இன்றும் செவ்வாய் கிரகத்தில் மக்கள் வசிப்பதாகவும், ஆனால் பயங்கரமான பேரழிவினால் தற்போது நிலத்தின் அடிப்பரப்பில் வாழ்ந்து வருவதாகவும் கூறுகிறான்.

மேலும், செவ்வாய் கிரக வாசியாக இருந்தபோது, பூமிக்கு ஆராய்ச்சிக்காக வந்து சென்றதாகவும் கூறுகிறான்.

லெமூரியக் கண்டத்தின் ஆய்வுப் புத்தகம் ஒன்றை அவனது தாய் அவனுக்குக் கொடுத்த போது, ஆச்சரியத்துடன் பார்த்த போரிஸ், லெமூரியா கண்டத்தின் அழிவு பற்றி பரபரப்பாக விவரிக்க ஆரம்பித்தான். இதெல்லாம் எப்படித் தெரியும் என்று கேட்டால்,  எல்லாம்  நினைவில் இருக்கிறது என்று பதிலளிக்கிறான்.

பெரிய பிரமிடுகளைப் பற்றிப் பேசும் போரிஸ், மனிதத் தலை, சிங்க உடம்பாக காட்சி அளிக்கும் Sphinx பிரமிடுக்குள் மனித வாழ்க்கையின் ரகசியங்கள் இருக்கின்றன என்றும், அதைத் திறப்பதற்கான வழி அதன் காதுப் பகுதியில்  உள்ளதுபோலத் தெரிவதாகவும் விவரிக்கிறான்.

போரிஸ்காவைப் போன்ற குழந்தைகள் பிறப்பது சமீப காலத்தில் சாத்தியமாகியுள்ளது என்றும் பொதுவாக 1980க்குப் பின்னர் பிறந்த குழந்தைகளில் சிலருக்கு இது போன்ற இயற்கையின் கொடை கிடைத்திருக்கிறது என்றும் ஒரு சாரார் கூறுகின்றனர்.  இத்தகைய தன்மையுடையோரை ‘இண்டிகா குழந்தைகள்’ என்றும் அழைக்கின்றனர்.

மாறிவரும் பூமியின் காந்தப் புலனானது 2029 மற்றும் 2032 காலகட்டங்களில் மிகப் பெரும் இரண்டு அழிவுகளை ஏற்படுத்தும் என்று போரிஸ் கூறுகிறான்.

செவ்வாயில் ஏற்பட்ட பேரழிவிற்கு அணு ஆயுதப் போரே காரணமென்றும், கதிரியக்கங் களின் வீரியம் காரணமாக, தப்பிப் பிழைத்தவர்கள் வெளியே வரமுடியவில்லை என்றும் பாதுகாப்பான கவச அறைகளில் அவர்கள் பாதாளத்தில் வாழ்வதாகவும் கூறும் போரிஸ்,  அவர்கள் கார்பன்-டை-ஆக்ஸைடை சுவாசித்து வாழ்பவர்கள் என்றும் கூறுகிறான்.

பூமியைப் பொறுத்த வரை ஆக்ஸிஜனை மட்டுமே சுவாசிக்க முடியும் என்றும், ஆனால் இந்த பிராணவாயு மனிதர்களின் வாழ்நாளைக் குறைப்பதாகவும் சொல்கிறான்.

விண்வெளியைப் பற்றி சகலமும் தெரிந்து வைத்திருக்கும் போரிஸ் UFOக்களைப்பற்றியும் நிறைய பேசுகிறான். செவ்வாயில் இருக்கும்போது ஸ்பேஸ்கிராஃப்டை இயக்கும் பயிற்சி பெற்றிருந்ததாகவும் கூறுகிறான்.

இவனை வியப்புடன் நோக்கும் விஞ்ஞான உலகம், விஞ்ஞான பேராசிரியர்களே சரளமாக உரையாடுவதில் உள்ள சிக்கல்கள் இவனுக்கு இல்லை எனத் தெரிவிக்கிறது.

போரிஸ்காவைப் பொறுத்தவரை “கள்ளங்கபடமில்லாத அன்பும், எதையும் மன்னிக்கும் தயாள குணமுமே மக்களின் சந்தோஷமான வாழ்க்கைக்கு வழி என்றும், இதைத் தாண்டிய எந்தவொரு விஷயமும் மனித குல அழிவிற்கு வழிவகுக்கும்” என்கிறான்.

இதை எல்லாம் விவரமாக சொல்லிவிட்டு காட்டிய வீடியோ இது:

போரிஸ்காவின் கூற்றுகளின் படி, நாம் வாழும் இப்பூமி தன்னைப் புதுப்பித்துக் கொள்ள ஆயத்தமாகி வருவது போலத் தெரிகிறது.

மோகன ரூபன்