செய்தி சேனல்களின் TRP Ratings நிறுத்தம் : BARC அறிவிப்பு!

செய்தி சேனல்களின்  TRP Ratings நிறுத்தம் : BARC அறிவிப்பு!

விளம்பர வருவாயைப் பெருக்கும் நோக்கில் எடுக்கப்படும் டி.ஆர்.பி. ரேட்டிங் அறிவிப்பு 3 மாதங்களுக்கு நிறுத்தம் செய்யப்படுவதாக பார்க்(BARC) தெரிவித்துள்ளது.

அண்மையில் டிஆர்பி முறைகேட்டில் ஈடுபட்டதாக ரிபப்ளிக் டிவி உரிமையாளர்களில் ஒருவரான அர்னாப் கோஸ்வாமியிடம் விசாரிக்க உள்ளதாக மும்பை காவல்துறை ஆணையர் பரம் பீர் சிங் தெரிவித்திருந்தார். மேலும், மும்பை காவல் துறையை இழிவுபடுத்தும் வகையில் ரிபப்ளிக் டிவி செய்திகளை வெளியிட்டு வருவதாகவும் காவல் ஆணையர் பரம் பீர் சிங் குற்றஞ்சாட்டியிருந்தார்.

எந்தெந்த டிவிக்களை மக்கள் அதிகம் பார்க்கிறார்கள் என வீடுகளில் BARO METER என்ற கருவி வைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த வீட்டினருக்கு சில நூறு ரூபாய் பணம் கொடுத்து தங்கள் சேனலை தொடர்ந்து ஓட வைத்து தங்கள் டிஆர்பி புள்ளிகளை உயர்த்திக்கொண்டார்கள் என்பதே ரிபப்ளிக் உள்ளிட்ட சில டிவி நிறுவனங்கள் மீதான குற்றச்சாட்டாகும்.

இதற்கிடையில் தங்‌கள் மீதான குற்றச்சாட்டை ரிபப்ளிக் டிவி மறுத்துள்ளது. சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண விவகாரத்தில் மும்பை போலீஸ் குறித்து செய்தி வெளியிட்டதற்கு பழி வாங்கும் விதமாக இந்த தவறான குற்றச்சாட்டை கூறுவதாக ரிபப்ளிக் டிவி விளக்கம் அளித்திருந்தது. மேலும், புள்ளிவிவரங்களை வெளியிடும் BARC நிறுவனம் ரிபப்ளிக் டிவி தவறு செய்ததாக எதுவும் கூறவில்லை என்றும் அத்தொலைக்காட்சி தெரிவித்திருந்தது.

இந்நிலையில், செய்தி சேனல்களுக்கான டி.ஆர்.பி. ரேட்டிங் அறிவிப்பு 3 மாதங்களுக்கு நிறுத்தம் செய்யப்படுவதாக பார்க்(BARC) தெரிவித்துள்ளது. இதுகுறித்து சிஇஓ சுனில் லுல்லா வெளியிட்டு உள்ள அறிவிப்பில், “இந்திய மக்கள் எதை பார்க்கிறார்கள் என்பதை உண்மையாகவும் தெளிவாகவும் வெளிப்படுத்தி வருகிறோம். பார்க் தொழில்நுட்பக் குழுவின் மேற்பார்வையின் கீழ் தரத்தை ஆய்வு செய்வதற்காக 8-12 வாரங்கள் டி.ஆர்பி ரேட்டிங் அறிவிப்பு நிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

error: Content is protected !!