நல்ல படங்களுக்கு மொழி முக்கியம் இல்லை!- அவனே ஸ்ரீமன் நாராயணா டீம் நம்பிக்கை!

நல்ல படங்களுக்கு மொழி முக்கியம் இல்லை!- அவனே ஸ்ரீமன் நாராயணா டீம் நம்பிக்கை!

புஷ்கர் பிலிம்ஸ்’ நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் புஷ்கரா மல்லிகார்ஜுனையா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என்று ஐந்து மொழிகளில் பிரம்மாண்டமாக தயாரித்து இருக்கும் புதிய திரைப்படம் ‘அவனே ஸ்ரீமன் நாராயணா.’ இந்தப் படத்தில் ரக்ஷித் ஷெட்டி, ஷான்வி ஸ்ரீவஸ்தவா இருவரும் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். மேலும் முக்கிய வேடங்களில் பாலாஜி மனோகர், பிரமோத் ஷெட்டி, மதுசூதன் ராவ், அச்யுத் குமார், கோபாலகிருஷ்ண தேஷ் பாண்டே ஆகியோருடன் இணைந்து ரக்ஷித், சான்வி ஸ்ரீவஸ்தவா ஆகியோரும் சிறப்பாக நடித்து உள்ளனர். கரம் சாவ்லா ஒளிப்பதிவில், உல்லாஸ் ஹைதூர் கலை வண்ணத்தில் பிரமிப்பூட் டும், பிரம்மாண்ட மான செட்டுகளில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம், அமராவதி நகரை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது.இப்படத்தின் ஆடை வடிவமைப்பு  பொறுப்பாளரான அருந்ததி அஞ்சனப்பா, 1980-களில் நிலவி வந்த பேஷன் குறித்த தனது விரிவான ஆராய்ச்சிகளின் விளைவாக அவரது உழைப்பு வெகுவான பாராட்டுதலை பெற்றிருப்பதோடு, படத்திற்கும் பெருமை சேர்த்திருக்கிறது.

அஜநீஷ் லோக்நாத் பின்னணி மற்றும் இரண்டு பாடல்களுக்கு இசை அமைக்க, இப்படத்தின் வேறு இரண்டு பாடல்களுக்கு சரண்ராஜ் இசையமைத்திருக்கிறார். ‘ரங்கஸ்தலம்’ படத்திற்காக தேசிய விருது பெற்ற எம்.ஆர்.ராஜா கிருஷ்ணன் இப்படத்திற்கு ஒலி வடிவமைப்பு செய்திருக்கிறார். இம்ரான் சர்தாரியா நடன இயக்கம் செய்திருக்கிறார். விக்ரம் மூர் வித்தியாசமான சண்டைப் பயிற்சிகளைக் கொடுத்து இயக்கியிருக்கிறார்.

இயக்குநர் சச்சின் இப்படத்தின் இயக்கம், படத் தொகுப்பு, மற்றும் வி.எப்.எக்ஸ். சிறப்பு காட்சி அமைப்புகள் என மூன்று பொறுப்புகளிலும் திறம்பட செயலாற்றி இருக்கிறார்.

‘புஷ்கர் பிலிம்ஸ்’ புஷ்கரா மல்லிக்கார்ஜுனையா தயாரித்த முதல் படம் ‘கோதி பன்னா சாதாரண மை கட்டு’. அதனைத் தொடர்ந்து, கன்னட திரையுலகில் சிறந்த திரைப்படங்களை தயாரிக்கும் ஒரு வல்லமைமிக்க சக்தியாகவும், புதிய சிந்தனைகளையும் தொழிட் நுட்ப யுக்திகளையும் கொண்டு அனைத்து வகை திரைப்படங்களையும் மொழி வேறுபாடுகளையும் கடந்து வெற்றிப் பெற செய்வதில் முனைப்புடன் செயல்படுபவராகவும் திகழ்கிறார்.

அவரது முதல் திரைப்படத்தை தொடர்ந்து அவர் தயாரித்த ‘கிரீக் பார்ட்டி’, ‘ஹம்பிள் பாலிடீசியன் நோக்கராஜ்’, ‘கதையொந்து ஷுருவாகிதே’, ‘ஜீர்ஜிம்பே’ ஆகிய அனைத்தும் மகத்தான வெற்றிப் படங்கள். குறிப்பாக ‘கிரீக் பார்ட்டி’ கன்னட திரையுலக வரலாற்றில் வசூல் சாதனை படைத்த சில குறிப்பிட்ட படங்களில் ஒன்று என்ற பெருமையையும் பெற்றிருக்கிறது.

இப்படத்திற்கு கதை எழுதியிருப்பவர்கள் மிகச் சிறந்த செயல் திறன் படைத்தவர்களான ‘தி செவன் ஆட்ஸ்'(The Seven Odds) எனும் எழுத்தாளர் குழு. இக்குழு ரக்ஷித் ஷெட்டி, சந்திரஜித் பெல்லியப்பா, அபிஜித் மகேஷ், சச்சின்(இயக்குநர்), அனிருத்தா கோட்கி, அபிலாஷ் மற்றும் நாகார்ஜுன் (பாடலாசிரியர்) ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்டது. ஏழு பேரைக் கொண்ட இந்த குழு, பல அருமையான கதைகளை எழுதி, பிரமிக்கத்தக்க திரைப் படமாக உருவாக்கி, அதை வெற்றிப் படங்களாக உயர்த்துவதில் சாதனைப் படைத்து வருகிறது.

இந்த ‘அவனே ஸ்ரீமன் நாராயணா’, ஒரு ஃபாண்டஸி அட்வென்சர் கலந்த நகைச்சுவை திரைப்படம். முற்றிலும் ஒரு கற்பனையான கதை. அமராவதி எனும் ஒரு பழமையான வெகு தூரத்து கிராமத்தில், புதையல் ஒன்றுடன் தொடர்புடைய இன்றளவும் தீர்க்க முடியாத ஒரு மர்மத்தைத் தீர்க்கும் முயற்சியே இத்திரைப்படத்தின் கதைக் கரு.

படத்தில் கதாநாயகன் ரக்ஷித் ஷெட்டி ஒரு நகைச்சுவை காவலராக நடிக்க, அவருடன் இணைந்து ஷான்வி ஸ்ரீவஸ்தவா நடிக்கிறார். இப்படத்தில் அவர் ஒரு கொடூரமான வழிப்பறித் திருட்டு கூட்டத்தையும், ஒரு தந்திரமான அரசியல்வாதியையும் சமாளித்து எப்படி அந்த மர்மத்தை தீர்த்து வைக்கிறார் என்பதை முழுக்க முழுக்க நகைச்சுவையுடன், ரசிக்கத்தக்க வகையில் பிரம்மாண்ட மாக படமாக்கியிருக்கிறார்கள். ரக்ஷித்துக்கு ஜோடியாக நடிக்கும் ஷான்வி நுட்பமாக காதலை வெளிப்படுத்தும் நாயகியாக இப்படத்தில் நடித்திருக்கிறார்.

வரும் ஜனவரி 3 ஆம் தேதி அனைத்து மொழிகளிலும் வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிகை யாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் ஹீரோ ரக்‌ஷித் ஷெட்டி, ஹீரோயின் ஷான்வி ஸ்ரீவட்சவ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டார்கள்.

இந்நிகழ்ச்சியில் பேசிய ரக்‌ஷித் ஷெட்டி, ”என் நண்பர் ஒரு முறை என்னிடம், “ஏன் உன் படத்தை தமிழில் வெளியிட கூடாது” என்று கேட்டார். அதுவரை எனக்கு அந்த ஐடியா இல்லை. தமிழில் வெளியிட வேண்டும் என்றால், அந்த படம் சரியான படமாக இருக்க வேண்டும், என்று காத்துக் கொண்டிருந்தேன். தற்போது அதற்கான வாய்ப்பை அவனே ஸ்ரீமன் நாராயணா படம் கொடுத்து இருக்கிறது. சிறு வயதிலேயே நான் அதிகமாக கே.பாலச்சந்தர் படங்களை பார்த்திருக்கிறேன். எனது அம்மாவுக்கு கே.பாலசந்தர் சாரின் படங்களும், நடிகர் கமல்ஹாசனின் படங்களும் ரொம்பவே பிடிக்கும். என் அம்மா மட்டும் அல்ல, எங்கள் ஊரில் பலர் பாலச்சந்தர் சார் படங்களுக்கு ரசிகர்களாக இருந்தார்கள். அப்போதே நான் யோசித்தேன், தமிழ்ப் படம் எப்படி உடுப்பி மக்களை கவர்கிறது, என்று. அப்போது தான் புரிந்தது நல்ல படங்களுக்கு மொழி முக்கியம் இல்லை என்பது. அப்படி ஒரு படமாகத்தான் இந்த அவனே ஸ்ரீமன் நாராயணா படம் இருக்கும்.” என்றார்.

ரக்‌ஷித் ஷெட்டிக்கு குரல் கொடுத்த பின்னணி குரல் கலைஞர் சேகர் பேசுகையில், “பாகுபலி படத்தின் பிரபாஷுக்கு குரல் கொடுத்த போது, இந்த படம் இந்திய சினிமாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று என் மனதில் பட்டது. அப்படி எண்ணம் தான் அவனே ஸ்ரீமன் நாராயணா படத்திற்கு டப்பிங் பேசும் போதும் தோன்றியது. இந்த படம் ஒரு ஜாலியான, ரசிகர்கள் கொண்டாடக் கூடிய படமாக இருக்கும். இதை என்னால் அழுத்தமாக சொல்ல முடியும்.” என்றார்.

Related Posts

error: Content is protected !!