நாட்டிலுள்ள எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீது 3 ஆயிரம் குற்ற வழக்குகள்: மத்திய அரசு தகவல்
நாடு முழுவதும் உள்ள எம்.பி மற்றும் எம்.எல்.ஏ-க்கள் 1,700-க்கும் மேற்பட்டோர் மீது 3,045 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
குற்ற வழக்கில் தண்டிக்கப்படும் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பா.ஜ.கவின் மூத்த வழக்கறிஞர் அஷ்வினி உபாத்யாய் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில், குற்ற வழக்கில் தண்டிக்கப்படும் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள், வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் பற்றிய விவரத்தை தாக்கல் செய்யுமாறு கடந்த டிசம்பர் மாதம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி ஐகோர்ட்டுகள் மூலம் திரட்டப்பட்ட தகவலின் அடிப்படையில், மத்திய சட்ட அமைச்சகம் சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
அதில் கூறியிருப்பதாவது,
2014 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில், நாடு முழுவதும் 1,765 எம்.பி மற்றும் எம்.எல்.ஏ-க்கள் மீது 3,816 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் கடந்த 3 ஆண்டுகளில் 771 வழக்குகள் மட்டுமே முடித்து வைக்கப்பட்டுள்ளன. 3,045 வழக்குகள் நிலுவையில் உள்ளன. உ.பி.யில் 248, தமிழ்நாடு 178, பீகார் 144, மேற்குவங்கம் 139 என்ற எண்ணிக்கையில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவ்வாறு அந்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.