ஜெ. ரத்த மாதிரி இருக்கிறதா? அம்ருதா வழக்கில் ஐகோர்ட் டவுட்!
ஜெயலலிதா மகள் என கூறிய அம்ருதா தொடர்ந்த வழக்கில், ஜெயலலிதா ரத்தமாதிரி இருக்கிறதா? என அப்பல்லோ மருத்துவமனைக்கு ஐகோர்ட் விளக்கம் கேட்டுள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்த எஸ்.அம்ருதா, எஸ்.எஸ்.லலிதா மற்றும் ரஞ்சனி ரவீந்திரநாத் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அம்ருதா என்பவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மகள். நாங்கள் ஜெயலலிதாவின் குடும்ப உறுப்பினர்கள். எங்கள் குல வழக்கப்படி, அவருக்கு இறுதிச் சடங்கு செய்யவும், எங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும். அம்ருதா அவரது மகள் என்பதை நிரூபிக்க டிஎன்ஏ பரிசோதனைக்கு உத்தரவிடவும் இறுதிச் சடங்கு மரியாதைகளைச் செய்யவும் அனுமதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தனர்.
இந்த மனு மீதான விசாரணை மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, ஜெயலலிதாவின் ரத்தமாதிரிகள் மற்றும் உயிரியல்(டிஎன்ஏ) மாதிரிகள் பாதுகாப்பாக உள்ளதா என்பகு குறித்து பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பதில் மனுத் தாக்கல் செய்ய அரசு சார்பில் அவகாசம் கோரியதால் மார்ச் 7–ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ஜெ.தீபா நேற்று பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் தனது அத்தையான ஜெயலலிதாவின் சொத்துகளை குறிவைத்தே அம்ருதா இந்த வழக்கை தொடர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தனது பாட்டி சந்தியாவுக்கு ஜெயலலிதா மற்றும் ஜெயக்குமார் மட்டுமே வாரிசுகள் என்றும், இது ஒரு பொய் வழக்கு என்பதால் அம்ருதாவின் வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் எனவும் தீபா வலியுறுத்தியுள்ளார்.
அதே சமயம் இதற்கு முன்பு நடந்த விசாரணையின் போது, ஜெயலலிதாவை தாய் என உரிமை கோரும் மனுதாரர், அவரது மனுவில் குறிப்பிட்டுள்ளதைப் போல் சோபன்பாபுவை தந்தையென ஏன் உரிமை கோரவில்லை என நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.