தரையிறங்கும் போது இரண்டு துண்டான ஏர் இந்தியா விமானம் – 19 பேர் பலி!

தரையிறங்கும் போது இரண்டு துண்டான ஏர் இந்தியா விமானம் – 19 பேர் பலி!

இந்த கொரோனா & ஊரடங்குக் காலத்தில் துபாயில் இருந்து 191 பயணிகளுடன் இந்தியா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்றிரவு 7.40 மணிக்கு கோழிக்கோடு கரிப்பூர் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும்பொழுது விபத்தில் சிக்கியது. மழை பெய்து கொண்டு இருந்த நேரத்தில், தரையிறங்கிய விமானம் ஓடு பாதையிலிருந்து விலகி, 35 அடி பள்ளத்தில் கவிழ்ந்து இரண்டாக உடைந்தது.நெஞ்சைப் பிளக்கும் இந்த பயங்கர விபத்தில் 2 விமானிகள் (தலைமை விமானி தீபக் வசந்த், துணை விமானி அகிலேஷ் குமார்) உள்பட 19 பேர் உயிரிழந்தனர். 150 பேர் காயமடைந்தனர்.

உயிரிழந்தவர்களில் இதுவரை 6 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. 5 உடல்கள் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. விமானி மற்றும் துணை விமானியின் உடல்கள் உள்பட 3 உடல்கள் ஆஸ்டர் மிம்ஸ் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. 2 உடல்கள் பேபி மெமோரியல் மருத்துவமனையிலும், ஒரு உடல் கிரசென்ட் மருத்துவமனையிலும் உள்ளது. காயமடைந்தவர்களில் 19 பேர் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 14 பேர் பேபி மெமோரியல் மற்றும் 33 பேர் ஆஸ்டர் மிம்ஸ் மருத்துவமனையிலும் 4 பேர் மெய்த்ரா மருத்துவமனையிலும், 4 பேர் கிரெஸன்ட் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

விமானத்தில் 10 சிறுவர்கள் உள்பட 184 பயணிகள், இரு விமானிகள், 5 பணிப்பெண்கள் இருந்ததை ஏா் இந்தியா உறுதி செய்தது. இவா்களில் பெரும்பாலானோா் பெரிய அளவில் காயமின்றி பத்திரமாக மீட்கப்பட்டனா்.

கொரோனா வைரஸ் பரவில் அச்சுறுத்தல் எதிரொலியாக மார்ச் மாதத்திலிருந்து இந்தியாவில் வெளிநாட்டு சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. எனினும் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர மத்திய அரசு சார்பில் வந்தே பாரத் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி துபாயில் சிக்கி தவித்த இந்தியர்களை அழைத்து வந்த விமானம் இது.

இந்த ஓடுபாதை விமானிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் ஓடுபாதை, இதில் தரையிறங்குவது சுலபமல்ல. வழக்கத்தை விட மிகவும் கடினமானது.

விமானம் தீப்பிடிக்கவில்லை

விபத்து தொடா்பாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘விபத்தின்போது விமானத்தில் தீப்பிடிக்கவில்லை. கோழிக்கோடு விமான நிலையத்தில் ‘டேபிள் டாப்’ என்ற வகையில் மேடான பகுதியில் ஓடுபாதை அமைக்கப்பட்டு உள்ளது. அந்தப் பாதையில் இருந்து விலகியதால் விமானம் பள்ளமான பகுதியில் சரிந்து விழுந்துவிட்டது. காயமடைந்த பயணிகளுக்குத் தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் அளிக்கப்படுகின்றன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரில் விசாரணை

இந்த சம்பவம் பற்றி விசாரணை மேற்கொள்ள விமான விபத்து புலனாய்வு துறை, மத்திய விமான போக்குவரத்து பொது இயக்குனரகம் மற்றும் விமான பாதுகாப்பு துறை ஆகியவற்றின் அதிகாரிகள் கரிப்பூர் விமான நிலையம் சென்றனர். அதேபோல கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் மற்றும் முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோரும் விமான விபத்து நடந்த கரிப்பூருக்கு இன்று செல்கிறார்கள். மழை எதிரொலி: சறுக்கிய ஒரு பாதை

விமானம் தீப்பிடித்து இருந்தால் எங்களுடைய பணி அதிக சிக்கலாகி இருக்கும் என கரிப்பூர் விமான நிலையத்தை பார்வையிட்ட மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்தார்.

இந்த விபத்து பற்றி மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் புரி செய்தியாளர்களிடம் கூறுகையில், 2 விமானிகள் உள்பட 19 பேர் உயிரிழந்து உள்ளனர். இது துரதிர்ஷ்டவசமானது. 127 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் சிகிச்சை முடிந்து சென்று விட்டனர்.

இந்த விமானத்தின் விமானி, ஓடுதள பாதையின் முடிவு பகுதி வரை ஓட்டி செல்ல முயற்சித்து இருக்க வேண்டும். பருவமழை பொழிவால் ஏற்பட்ட சறுக்கலான நிலையால் விமானம் ஓடுதள பாதையில் இருந்து விலகி சென்றுள்ளது. ஒருவேளை விமானம் தீப்பிடித்து இருந்தால் எங்களுடைய பணி அதிக சிக்கலாகி இருக்கும் என கூறியுள்ளார். துபையில் உள்ள இந்திய தூதரகம் சாா்பில் விபத்து குறித்து அறிய +97156 5463903, +971543090572, +971543090572, +971543090575 ஆகிய அவசரகால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

விமான நிலையம் தற்காலிகமாக மூடல்

கோழிக்கோடு விமான நிலையத்தின் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமான விபத்து குறித்து விசாரணை நடத்த வெளிவிவகாரத்துறை அமைச்சர் முரளிதரனுடன் டி.ஜி.சி.ஏ குழு ஒன்று கோழிக்கோடு விமான நிலையம் வந்துள்ளது. இதையடுத்து கோழிக்கோடு விமான நிலையத்தின் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப் பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு விமான நிலையம் வரும் அனைத்து விமானங்களும் கண்ணூர் மற்றும் கொச்சின் விமான நிலையங்களில் தரையிறங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

https://twitter.com/aanthaireporter/status/1291775528546926592

பாதுகாப்பு இல்லாத கரிப்பூர் விமான நிலையம்

கோழிக்கோடு விமான விபத்து நடந்த கரிப்பூர் விமானநிலையம் பாதுகாப்பாக இல்லை என விமான போக்குவரத்து பாதுகாப்பு ஆலோசனை கமிட்டி உறுப்பினர் மோகன் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பின்மை குறித்து அவர் 9 வருடங்களுக்கு முன்பே தெரிவித்திருந்தார். மங்களூருவில் ஏற்பட்ட விமான விபத்து சமயத்தில் இது பற்றி அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால், அப்போது அது கண்டு கொள்ளப்பட வில்லை என தெரிவித்துள்ளார்.

‘டேபிள் டாப்’ விமான நிலையம்

தற்போது விமான விபத்து ஏற்பட்டுள்ள கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையம் மலை மீது அமைந்துள்ள ‘டேபிள் டாப்’ விமான நிலையம். இதன் ஓடு பாதையின் முடிவில் போதுமான நீட்டிக்கப்பட்ட பகுதி இல்லை என தெரிவித்துள்ளார். பொதுவாக 240 மீட்டர் தூரத்திற்கு நீட்டிக்கப்பட்டிருக்க வேண்டும் ஆனால் கரிப்பூர் விமான நிலையத்தில் 90 மீட்டர் வரை தான் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஓடுபாதையின் இருபக்கமும் போதுமான இடம் இல்லை. 100 மீட்டருக்கு பதிலாக 75 மீட்டராக உள்ளது. மேலும் மழைக் காலங்களில் டேபிள் டாப் ஓடு பாதயைில் விமானம் இறங்குவதற்கு போதுமான வழகாட்டு நெறிமுறைகள் இல்லை’

கருப்பு பெட்டி மீட்பு

தற்போது விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டு உள்ளது. இந்த பெட்டியில் விமானத்தின் டிஜிட்டல் தகவல் பதிவு சாதனம் மற்றும் விமானியின் குரல் பதிவு சாதனம் ஆகியவை இருக்கும். இதன் வழியே, விமானம் எந்த உயரத்தில் பறந்து கொண்டிருந்தது, விமானத்தின் நிலை, அதன் வேகம், விமானிகளுக்கு இடையே நடந்த உரையாடல்கள் உள்ளிட்ட பல முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் பதிவு செய்யப்பட்டு இருக்கும். இதனை மீட்டு ஆய்வு செய்த பின்னரே விமான விபத்து ஏற்பட்டதற்கான சரியான காரணம் என்னவென்று தெரிய வரும்.

இறந்தவர் குடும்பங்களுக்கு ரூ. 10 லட்சம்

விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். படுகாயமடைந்தவர்களுக்கு ரூ. 2 லட்சம், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்று மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அறிவித்திருக்கிறார்.

error: Content is protected !!