3 -தொகுதிகளில் வெற்றி ; எல்லையில்லா மகிழ்ச்சி – ஜெயலலிதா ஸ்டேட்மெண்ட்

3 -தொகுதிகளில் வெற்றி ; எல்லையில்லா மகிழ்ச்சி – ஜெயலலிதா ஸ்டேட்மெண்ட்

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளிலும் அண்ணா தி.மு.க. அமோக வெற்றி பெற்றுள்ளது. அரவக்குறிச்சி தொகுதியில் வி.செந்தில் பாலாஜி, தஞ்சாவூர் தொகுதியில் ரங்கசாமி, திருப்பரங்குன்றம் தொகுதியில் ஏ.கே.போஸ் ஆகியோர் வெற்றி பெற்றார்கள். இந்த நிலையில், அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அ.தி.மு.க. பொது செயலாளரும், முதல்–அமைச்சருமான ஜெயலலிதா வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து, நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

jaya nov 23

அதில், “அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் 19–11–2016 அன்று நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு மகத்தான வெற்றியை வழங்கி இருக்கும் அன்பார்ந்த வாக்காள பெருமக்களுக்கு என் இதயம் கனிந்த நன்றியை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். புதுச்சேரி மாநிலம், நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளருக்கு வாக்களித்த வாக்காள பெருமக்களுக்கும் எனது நன்றி.

அரவக்குறிச்சி தொகுதியில் 88,068 வாக்குகளை பெற்று 23,661 வாக்குகள் வித்தியாசத்திலும்; தஞ்சாவூர் தொகுதியில் 1,01,362 வாக்குகளை பெற்று 26,874 வாக்குகள் வித்தியாசத்திலும்; திருப்பரங்குன்றம் தொகுதியில் 1,13,032 வாக்குகளை பெற்று 42,670 வாக்குகள் வித்தியாசத்திலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி வாகை சூடி உள்ளனர். மருத்துவமனையில் உடல் நலம் தேறி வரும் எனக்கு நீங்கள் வழங்கி இருக்கும் இந்த தேர்தல் வெற்றி எல்லையில்லா மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளித்துள்ளது.

எனது தலைமையிலான ஆட்சியின் சாதனைகளையும், நலத்திட்டங்களையும், தொலைநோக்கு திட்டங்களையும் சீர்தூக்கி பார்த்து அ.தி.மு.க. வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்து, எனக்கு தொடர் வெற்றியை அளித்துள்ள எனது அருமை வாக்காள பெருமக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இதன்மூலம் மக்கள் என் பக்கம் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப என்னுடைய பணிகள் எப்பொழுதும் போல் சிறப்புடன் தொடரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் விரைவில் பூரண நலம்பெற வேண்டி அ.தி.மு.க. தொண்டர்களும், தமிழக மக்களும், என் மீது பேரன்பு கொண்ட அனைத்து தரப்பினரும் தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருகிறீர்கள் என்பதையும்; பலர் மருத்துவமனைக்கே நேரில் வந்து நலம் விசாரித்து செல்கிறீர்கள் என்பதையும் நான் நன்கு அறிவேன். உங்களுடைய பரிவுக்கு நன்றி. உங்களுடைய பேரன்பை நான் ஒரு போதும் மறவேன்.

என்னுடைய அன்பு கட்டளையை ஏற்று அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், நெல்லித்தோப்பு ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணியாற்றிய என் உயிரினும் மேலான எனது அருமை அ.தி.மு.க. தொண்டர்களுக்கும், அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கும், கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதனிடையே தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் போட்டியிட்ட பாரதீய ஜனதா, தே.மு.தி.க. டெபாசிட் இழந்தது.தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் மட்டும் போட்டியிட்ட பா.ம.க.வும் டெபாசிட் இழந்தது.பதிவான ஓட்டுகளில் 6-ல் 1 மடங்கு ஓட்டு வாங்கும் வேட்பாளர்களுக்கு மட்டுமே டெபாசிட் தொகை திரும்ப கிடைக்கும். திருப்பரங்குன்றம் தொகுதியில் 2 லட்சத்து 3 ஆயிரத்து 57 ஓட்டுகள் பதிவாகியுள்ளன. இந்த தொகுதியில் 33 ஆயிரத்து 843 ஓட்டுகள் பெறும் வேட் பாளர் களுக்கே டெபாசிட் தொகை திரும்ப கிடைக்கும். தஞ்சாவூர் தொகுதியில் 1 லட்சத்து 86 ஆயிரத்து 388 வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த தொகுதியில் டெபாசிட் பெற 31 ஆயிரத்து 65 வாக்கு கள் பெற வேண்டும்.
அரவக்குறிச்சி தொகுதியில் 1 லட்சத்து 64 ஆயிரத்து 582 வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த தொகுதியில் 27 ஆயிரத்து 430 ஓட்டுகள் பெற்றால் மட்டுமே டெபாசிட் திரும்ப கிடைக்கும். ஆனால் பாரதீய ஜனதா, தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சிகள் 3 தொகுதிகளிலும் அதைவிட குறைவான வாக்குகளே பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

error: Content is protected !!