ஃபேக் நிலாவை அடுத்து பொய்யான சூரியன்! – சீனா உருவாக்குது!!

ஃபேக் நிலாவை அடுத்து பொய்யான சூரியன்! – சீனா உருவாக்குது!!

அதி நவீனமயமாகி விட்ட பெரு நகரங்களின் காலை நேர பூங்காக்களில் வேக வேகமாக தொப்பை குலுங்க நடக்கும் மனிதன் எதை தேடுகிறான், தொலைத்த இயற்கையைத்தான்…

இன்றைய யுகத்தின் அதி முக்கிய பிரச்சனையே இதுதான்.

நவீன மனிதன் துவக்கத்தில் இயற்கையை தன் எதிரியாக நினைத்தான் . இயற்கையான காற்று, இயற்கையான நீர், இயற்கை யான உணவு, எல்லாவற்றையும் வெறுத்து செயற்கை எனும் மாய வலையை அவனே பின்னிக்கொண்டான். இல்லாத நோய்கள் அனைத்தும் அவனை அதிகமாக சூழ்ந்து வரும் இப்போதும் அந்த அந்த இயற்கையை மேலும் மறக்கடிக்கும் விதமாக இவ்வுலகில் செயற்கை அருவி, ஆறு, செயற்கை தீவுகள் என மனிதர்கள் உருவாக்கி கொண்டேதான் இருக்கிறார்கள்.

இதெற்கெல்லாம் ஒரு படி மேல் சென்று, செயற்கை நிலாவையும், சூரியனையும் சீனா உருவாக்கி வருகிறது. செயற்கை சூரியன் இவ்வருடமும், செயற்கை நிலா திட்டம் 2020ல் செயல்பாட்டுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் பூமிக்கு வெளிச்சம் தரும் வகையில் செயற்கை நிலவினை சீனா உருவாக்கி வருகிறது. இதன்படி பூமிக்கு மேலே 500 கிமீ உயரத்தில் விண்கலம் ஒன்று நிலைநிறுத்தப்பட உள்ளது. அதற்கு மேலே சுற்றப்பட்டு இருக்கும் ஒளியினை உமிழும் தகடுகள் இயற்கை நிலவினை போன்று, சூரியனில் இருந்து பெற்ற ஒளியினை பூமியின் மீது பிரதிபலிக்கும். இதன் மூலம் 50 கிமீ சுற்றுப்புற பகுதிக்கு வெளிச்சத்தை இந்த செயற்கை நிலவு தரும். இதன் மூலம் தாங்கள் நினைக்கும் பகுதிக்கு வெளிச்சம் தருவதோடு பேரிடர் காலங்களில் வெளிச்சம் ஏற்படுத்திட செயற்கை நிலவு பயன்படலாம் என தெரிவிக்கிறார்கள்.

இதேபோன்று செயற்கை சூரியனையும் சீனா உருவாக்கி வருகிறது. உலகில் இயற்கையான‌ சூரியன் வெளியிடும் வெப்பத்தினால் அணுக்கரு இணைவு மூலம் ஆற்றலை உருவாக்குகிறது. அதே ஆற்றலை செயற்கையாக பூமியில் உருவாக்க இந்த செயற்கை சூரியன் உருவாக்கப்பட்டு வருகிறது. எச்.எல்.2 எம் என்ற அந்த சூரியன் அணுசக்தி மூலம் உயிரூட்டப்படுகிறது. 100 மில்லி யன் டிகிரி செல்சியஸ் வெப்பத்தை இது தரும். இயற்கை சூரியனின் சக்தி 15 மில்லியன் டிகிரி செல்சியஸ்தான். இந்த செயற்கை சூரியனின் மையக்கரு எலக்ட்ரான்கள் மற்றும் அயனிகளால் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் பெறப்படும் ஒளி மூலம் சோலார் சக்தி தகடுகளை சக்தி பெறச் செய்ய முடியும்.

இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள் இணைந்தால், அவை மிகப்பெரிய அளவிலான ஆற்றலை உற்பத்தி செய்கின்றன. அணுக்கரு இணைவு என்றழைக்கப்படும் அந்த செயல்முறை மூலமாகத் தான் சூரியன் ஒளி மற்றும் வெப்ப ஆற்றல்களை உருவாக்குகிறது. அந்த ஆற்றல்களை செயற்கை யாக பூமியில் உருவாக்க வேண்டும் என்பது ஆய்வாளர்களின் நம்பிக்கை. இவ்வாண்டே இத்திட்டம் செயல்பாட்டுக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் செயற்கை சூரியனின் பயன்பாடு குறித்த முழு விவரம் இதுவரை வெளியிடப்படவில்லை.

இயற்கைக்கு மாற்றமாக செயற்கை நிலவினை அமைப்பதினால் பல கோடி ஆண்டுகளாக உலகில் நிலவும் இயற்கைச் சூழல் மாற்றம் பெற்று புதிய பிரச்னைகள் உருவாகலாம் என்றும் ஒளி மாசு ஏற்பட்டு புதிய பிரச்னைகள் உண்டாகலாம் என்றும் அதேபோன்று செயற்கை சூரியனால் பருவக் கால மாற்றங்கள் ஏற்பட்டு உலகிற்கு எதிர்மறையான பிரச்னைகள் உருவாகவும் வாய்ப்பிருப்பதாக மற்றொரு தரப்பு ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

1990ம் ஆண்டுகளில் ரஷ்ய அரசாங்கம் சூரிய ஒளியினை பிரதிபலிக்க பூமியின் மீது செலுத்தும் விதமாக மிகப்பெரிய கண்ணாடியை விண்வெளியில் அமைக்க திட்டமிடப்பட்டு பின்னர் அந்த திட்டம் கைவிடப்பட்டதையும் சுட்டிக்காட்டுகின்றனர். இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள சீனா முதலில் செயற்கை நிலவானது பாலைவன பகுதியில் சோதிக்கப்படும். பின்னர் எந்தவொரு பாதிப்பும் இல்லையென தெரிந்தால் மட்டுமே நகரங்களில் பயன்படுத்தப்படும் என அறிவித்து உள்ளது. இத்திட்டங்கள் வெற்றி பெற்றால் இரவையும், பகலையும் மனிதனே தீர்மானிக்க முடியும் என்று சொல்கிறார்கள்.

Related Posts

error: Content is protected !!