“‘அடுத்த சாட்டை’ படம் காசு சம்பாதிக்கிறதுக்கான படம் இல்லை” – சமுத்திரகனி பேச்சு!

“‘அடுத்த சாட்டை’ படம் காசு சம்பாதிக்கிறதுக்கான படம் இல்லை” – சமுத்திரகனி பேச்சு!

சமுத்திரகனி, தம்பி ராமையா நடிப்பில் அன்பழகன் இயக்கிய சாட்டை திரைப்படம் கடந்த 2012-ம் ஆண்டு வெளிவந்து மிக பெரிய வெற்றி பெற்றது. இந்த வெற்றியை அடுத்து ஏழு வருடங்கள் கழித்து தற்போது ‘அடுத்த சாட்டை’ என்ற இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. பெண் ஐ.பி.எஸ். அதிகாரியான திலகவதி மகன் பிரபுதிலக்-கே தற்போதும் தயாரித்துள்ள இந்த படத்தில் முதல் பாகத்தில் நடித்த சமுத்திரகனி, தம்பிராமையா ஆகியோருடன் அதுல்யா ரவி, சசிகுமார், ஜூனியர் பாலையா உள்பட பலர் நடித்து உள்ளனர் முதல் பாகத்தை இயக்கிய அன்பழகன் இயக்கியுள்ள இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ஆசிரியர் பகவான், “மாணவர்கள் என்னை பாசப்போராட்டத்தால் போகவிடாமல் தடுத்தது அதிகம் பேசப்பட்டது. நிறைய பேர் எங்கிட்ட பேசுனாங்க. சமுத்திரக்கனி அண்ணனும் பேசுனாரு. ’நான் நடிச்சேன். நீ வாழ்ந்துட்ட தம்பி’னு சொன்னாரு. கல்வி கற்க இயலாத சூழலில் இருந்து நிறைய மாணவர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு கத்துக்கொடுத்து வழிகாட்றதுலதான் ஒரு ஆசிரியரின் வேலை முழுமையடையும். அந்தச் சூழலை ’சாட்டை’ படம் மூலமாகச் சொல்லியிருந்தார். மாணவர் களுக்குப் பிடித்த பாடம் என்று எதுவுமில்லை. மாணவர்களுக்குப் பிடித்த ஆசிரியர் எடுக்கக்கூடிய எல்லாப் பாடமும் அவர்களுக்குப் பிடிக்கும். பள்ளிக்கு ஒருவர் சமுத்திரக்கனியாக இருக்கும் பட்சத்தில்தான் பள்ளியிலும் கல்வியிலும் மாற்றம் வரும். இன்னும் நிறைய சாட்டைகள் உருவாக வேண்டும். மாணவர்கள் மத்தியிலும் கல்வியிலும் புரட்சியை ஏற்படுத்தட்டும்” என்று பேசினார்.

இயக்குநர் மற்றும் நடிகர் சமுத்திரக்கனி பேசும்போது, “ ‘சாட்டை’ படம் முதல்நாள் தியேட்டர்ல நானும் தம்பி ராமையா அண்ணனும் பார்த்துட்டு இருந்தோம். திரையில் மிகப்பெரிய மேஜிக் நடந்துட்டு இருக்கு. அப்போ அண்ணன் அழுதுட்டே, ‘நாம எங்கேயோ கெடந்தோம்டா. அப்பா டைரக்டர் கிடையாது; அம்மா தயாரிப்பாளர் கிடையாது. ஆனால், நம்ம இரண்டு பேரும் சினிமாவுக்கு வந்து, உருண்டு புரண்டு ஒரு இடத்துல நிக்கிறோம். நம்மளைப் பார்த்து கை தட்டுறாங்க’னு சொன்னாரு. அவர் அழுகையை அடக்க 15 நிமிஷம் ஆச்சு. ஒரு பொறுப்புடன் இருக்கக்கூடிய நடிகனாக என்னை நிலைநிறுத்தியவர் அன்பழகன்.

பெருசா ஆ..ஊனு சொல்ற படம் ‘அடுத்த சாட்டை’ இல்லை. பார்வையாளனோடு உரையாடுகிற, தன்னுடைய ஆசிரியரை நினைவுப்படுத்துகிற திரைப்படம்தான் இது. இந்தத் திரைப்படம் வந்தபின் எந்த ஆசிரியரும் தன்னுடைய மாணவனை, ’வெளிய போ’னு சொல்லவே மாட்டாரு. பள்ளியும் இல்லாமல் வீடும் இல்லாமல் மூன்றாவது இடம் ஒன்று வேண்டும்னு மாடசாமி ஐயா எழுதியிருந்தாரு. அடுத்த படம் ‘இன்னொரு சாட்டை’ இதைப்பத்திதான். ‘அடுத்த சாட்டை’ படம் காசு சம்பாதிக்கிறதுக்கான படம் இல்லை’’ என்று பேசினார்.

இதை அடுத்து படத்தின் தயாரிப்பாளர் பிரபு திலக், படத்தின் முக்கிய நடிகர்கள், சமுத்திரக்கனியின் ஆசிரியர்கள், ரூட்டு தல விவகாரத்தில் அதிரடி நடவடிக்கைகளை எடுத்த காவல் உயர் அதிகாரி ஈஸ்வர், இராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், அன்னை கல்விக் குழுமத்தின் தாளாளர் ஹியூமாயுன், பின்னணி பாடகர்கள், பிரபல இயக்குநர்கள், திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் என அரங்கமே நிரம்பி வழிய, இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

error: Content is protected !!