தமிழ் பத்திரிகையுலகில் புரட்சியை ஏற்படுத்திய சி.பா. ஆதித்தனார்!

தமிழ் பத்திரிகையுலகில் புரட்சியை ஏற்படுத்திய சி.பா. ஆதித்தனார்!

மிழகத்தில் பிறந்தவர்கள் அல்லது வாழ்பவர்கள் தமிழராக இல்லாவிட்டாலும் தினத்தந்தியைப் படிக்காமல் வளர்ந்திருக்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு பத்திரிகை உருவாகக் காரணமாக இருந்தவர் சி.பா.ஆதித்தனார்.

சிவந்தி பாலசுப்பிரமணிய ஆதித்தனார் – சி.பா.ஆதித்தனாரின் முழுப் பெயர் இதுதான். தூத்துக்குடி மாவட்டத்தில் கடற்கரை ஓரம் அமைந்துள்ள ஒரு சிறிய ஊர்தான் காயாமொழி. இந்த ஊரில் 1905-ம் ஆண்டில் பிறந்தார் ஆதித்தனார். அப்பா, சிவந்தி ஆதித்தனார், ஸ்ரீவைகுண்டத்தில் வழக்கறிஞராக இருந்தார். ஸ்ரீவைகுண்டத்தில் பள்ளிப் படிப்பு முடிந்தவுடன், திருச்சி ஜோசப் கல்லூரியில் பி.ஏ.வும், எம்.ஏ.வும் படித்தார். கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன் லண்டனுக்குச் சென்று பாரிஸ்டர் படிப்பு படிக்க வேண்டும் என்று விரும்பினார். 1927-ல் லண்டனுக்கு கப்பல் ஏறினார். லண்டனில் படித்துக் கொண்டிருந்தபோது, படிப்புச் செலவுக்கு அவர் வீட்டிலிருந்து பணம் எதிர்பார்க்கவில்லை. பத்திரிகை நிருபராக மாறி அவர் படிப்புக்குத் தேவையான பணத்தை அவரே சம்பாதித்துக் கொண்டார்.

பத்திரிகை நிருபராக அவர் செய்தி சேகரித்து அனுப்பிய விதம் தனித்துவமானது. அந்த சமயத்தில் லண்டனில் வட்ட மேஜை மாநாடு நடந்தது. எல்லா நிருபர்களும் அந்த மாநாடு பற்றிய செய்திகளை பத்தி பத்தியாக அனுப்பினார்கள். ஆனால், மாநாடு நடந்த சமயம் திடீரென மகாத்மா காந்தி வெளியே வந்தார். சிறிது நேரம் கழித்தே மீண்டும் உள்ளே போனார். காந்தியின் பல் ஒன்று ஆடிக் கொண்டிருந்தது. அந்த பல்லைப் பிடுங்கிப் போடவே காந்தி வெளியே வந்தார் என்கிற சுவாரஸ்யமான செய்தியை பத்திரிகைகளுக்கு அனுப்பியவர் ஆதித்தனார் மட்டுமே!

1933-ல் பாரிஸ்டர் படிப்பை முடித்துக் கொண்டு சிங்கப்பூருக்குப் போனார் ஆதித்தனார். சிங்கப்பூரில் ஓ.ராமசாமி நாடார் என்கிற மிகப் பெரிய செல்வந்தரின் மூத்த மகள் கோவிந்தம்மாளைத் திருமணம் செய்து கொண்டார். மனைவி யுடன் சென்னைக்குத் திரும்பினார். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்து கொண்டார். சென்னையில் ஒரு பத்திரிகையைத் தொடங்க வேண்டும் என்பது ஆதித்தனாரின் ஆசை. பத்திரிகை தொடங்கத் தேவையான பணம் அவரிடம் இல்லை. அந்த பணத்தைச் சேர்க்க ஒரே வழி, வழக்கறிஞர் தொழிலை முனைப்போடு செய்வதுதான் என்கிற முடிவுக்கு வந்தார்.

அந்த சமயம், சிங்கப்பூர் பாரிஸ்டர்களின் சொர்க்க பூமியாக இருந்தது. சிங்கப்பூரில் ஆதித்தனார் ஆஜராகிய எந்த வழக்கும் தோற்கவில்லை. இரண்டாம் உலகப் போர் தொடங்கும் முன் சோமப்பா வழக்கில் ஆஜராகி, வெற்றி பெற்றதன் விளைவாக அவருக்கு கிடைத்த பணம் 60 ஆயிரம் ரூபாய். அந்த சமயத்தில்தான் இரண்டாம் உலகப் போர் மூண்டது. சிங்கப்பூரை எந்த நேரத்திலும் ஜப்பான் ராணுவம் கைப்பற்றிவிடும் என்கிற நிலையில் தாக்குதலுக்கு முதல் நாளன்று கிளம்பிய கடைசி விமானத்தில் ஏறினார் ஆதித்தனார். அந்த விமானம் கொல்கத்தா போவதற்குப் பதில் இந்தோனேஷியாவுக்குப் போனது. அங்கிருந்து ஒரு சிறிய கப்பலில் ஏறி, இலங்கைத் தலைநகர் கொழும்புக்கு இரண்டு மாதம் கழித்து வந்து சேர்ந்தார். இந்த இரண்டு மாதக் காலத்தில் அவர் பட்ட கஷ்டம் சொல்லி மாளாது. ஆனால், இந்த கஷ்டங்கள் ஆதித்தனாரின் மனவலிமைக்கு இன்னும் வலு சேர்ப்பதாகவே அமைந்தது.

எந்த நோக்கத்துக்காக ஆதித்தனார் சிங்கப்பூருக்குச் சென்றாரோ, அந்த நோக்கத்தை தாயகம் திரும்பியவுடன் செயல்படுத்த ஆரம்பித்தார். 1942-ல் சிங்கப்பூரிலிருந்து தமிழகம் திரும்பிய நான்கே மாதங்களுக்குள் மதுரையில் ‘தமிழன்’ என்கிற பெயரில் ஒரு வாரப் பத்திரிகையைத் தொடங்கினார்.ஆதித்தனாருக்கு தமிழுணர்வு அதிகம். அதனால்தான் தன் பத்திரிகைக்கு ‘தமிழன்’ என்று பெயர் வைத்தார்.

தமிழன் பத்திரிகையைத் தொடங்குவதற்கு முன்பு மதுரை முரசு என்கிற பெயரில் ஒரு செய்திப் பத்திரிகையைத் தொடங்கினார் ஆதித்தனார். அந்த சமயத்தில் வெள்ளையனே வெளியேறு போராட்டம் உச்சத்தில் இருந்தது. மதுரையில் நடந்த இந்த போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியது வெள்ளைக்கார அரசாங்கம். இந்த துப்பாக்கிச்சூட்டில் மூன்று பேர் இறந்தார்கள். ஆனால், இறந்தது ஒருவர்தான் என்று செய்தி வெளியிடும்படி உத்தரவு போட்டது ஆங்கிலேய அரசாங்கம். உண்மையை மட்டுமே சொல்வேன் என்பதில் உறுதியாக இருந்த ஆதித்தனார் ‘துப்பாக்கிச்சூட்டில் மூன்று பேர் சாவு’ என்று தெள்ளத் தெளிவாக கொட்டை எழுத்தில் செய்தி போட்டுவிட்டு, அந்த பத்திரிகையை நிறுத்தினார்.

என்றாலும், செய்திப் பத்திரிகை தொடங்கி நடத்தும் வெறி அவருக்குள் தீயாக கனன்று எரிந்து கொண்டிருந்தது. சரியாக அறுபது நாட்கள் கழித்து, மதுரையில் ‘தந்தி’யைத் தொடங்கினார். லண்டனில் அவர் படித்துக் கொண்டிருந்த போது ‘டெய்லி மிரர்’ பத்திரிகையை விரும்பிப் படிப்பார். சாதாரண மனிதனுக்கும் புரியும்படியாக எல்லா செய்திகளையும் சுவாரஸ்யமாகத் தருவது டெய்லி மிரரின் வழக்கம். ‘தந்தி’யும் அப்படி இருக்க வேண்டும் என்று நினைத்தார்.

இதனிடையே, ‘தமிழன்’ பத்திரிகையின் விற்பனை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டுதான் இருந்தது. ஆனால், ஒரே நேரத்தில் இரு பத்திரிகை வேண்டாம் என்று நினைத்ததன் விளைவு, தமிழன் பத்திரிகையை நிறுத்தினார். எந்தச் செய்தியாக இருந்தாலும் அதை முதலில் சொல்லிவிட வேண்டும் என்பதில் குறியாக இருப்பார். மதுரை திருப்பரங்குன்றத்தில் காங்கிரஸ் மாநாடு நடந்தபோது ராஜாஜி அணி, காமராஜர் அணியை வெளியேற்றிய செய்தியை சிறப்பு பதிப்பாக வெளியிட்டு, சுடச்சுட மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்தார் ஆதித்தனார். சில செய்திகளின் தலைப்பில் நட்சத்திரக் குறியிட்டு, ‘இந்த செய்தி மற்ற பத்திரிகைகளில் நாளைதான் வரும்’ என்று எழுதினார்.

1943-ல் சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் செயல்பட ஆரம்பித்தது தந்தி. பிற்பாடு மயிலாப்பூருக்கு மாறியது. 1960-ல்தான் தற்போதிருக்கும் எழும்பூர் அலுவலகத்துக்கு நிரந்தரமாக இடம் பெயர்ந்தது. 1948-ம் ஆண்டு வரை தந்தி என்று அழைக்கப்பட்ட பத்திரிகையை தினத்தந்தியாக மாற்றினார் ஆதித்தனார். தபால் துறை நடத்தும் தந்தி அலுவலகத் துக்கும் ஆதித்தனாரின் தந்தி அலுவலகத்துக்கும் இடையே ஏற்பட்ட குழப்பத்தைத் தவிர்க்கவே தந்தியை தினத்தந்தியாக மாற்றினார்.

தனித்துவம் நிறைந்த செய்தி அளிப்பின் மூலம் சாதாரண மனிதர்களும் தினத்தந்தியின் வாசகர்களானார்கள். சாதாரண மனிதர்களும் எழுத்து கூட்டி படிக்கிற மாதிரி கொஞ்சம் பெரிய அளவில் எழுத்துக்களில் செய்திகளை அச்சிட்டார். ஜனரஞ்சகமான பல விஷயங்களை தினத்தந்தியில் சேர்த்தார். கருத்துப்படம், ராசி பலன், படக் கதை போன்ற பல அம்சங்கள் ஆதித்தனாரின் கண்டுபிடிப்பு என்றே சொல்ல வேண்டும்.

ஜனரஞ்சகமான விஷயத்தை சுவாரஸ்யமாக எடுத்துச் சொல்ல வேண்டும் என்று நினைத்தவர் ஆதித்தனார். ‘கத்தியால் சதக், சதக் என்று குத்தினார்’ என்று படித்தபோது கொலைச் சம்பவத்தை நேரில் பார்த்த பரபரப்பை அடைந்தனர் வாசகர்கள். ஊரிலேயே பெரிய மருத்துவமனையை ‘பெரிய ஆஸ்பத்திரி’ என மக்கள் பாஷையிலேயே எழுதச் சொன்னார். கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டார் என்பதை ‘கென்னடி சுட்டுக் கொலை’ என்று நேரடியாக எழுதச் சொன்னார்.

ஆரம்பத்தில் மதுரை, சென்னை என இரண்டு நகரங்களிலிலிருந்து அச்சான தினத்தந்தியை எல்லா ஊர்களுக்கும் அனுப்பினார். ஆனால், போக்குவரத்து வசதி அந்த அளவுக்கு இல்லாத அந்த காலத்தில் எல்லா ஊர்களிலும் தன்னுடைய செய்தித்தாள் கிடைக்க வேண்டுமெனில் அந்தந்த ஊர்களில் பதிப்பை ஆரம்பிப்பதுதான் ஒரே வழி என்று நினைத்தவர் பெரிய நகரங்களிலும் தனியாக அலுவலகம் தொடங்கினார். இந்த அலுவலகங்கள் பெரும்பாலும் பஸ் ஸ்டாண்ட் அல்லது ரயில்வே ஜங்ஷனை ஒட்டி ஆரம்பித்தது ஆதித்தனாரின் பிஸினஸ் மூளைக்கு இன்னொரு சான்று. செய்திகள், ஆட்கள் எளிதில் வந்து போக உதவியாக இருப்பதோடு, பத்திரிகைகளை உடனுக்குடன் அனுப்பவும் உதவியாக இருந்தது இது.

விளம்பரங்களிலும் புதுமை படைத்தவர் ஆதித்தனார். சிறிய நிறுவனங்கள்கூட சிறிய அளவில் விளம்பரம் தரும்படி மாற்றி அமைத்தார். ஆனால், விளம்பரம் வேண்டும் என்பதற்காக விற்பனை பற்றி தவறான தகவல்களை தருவது அவருக்குப் பிடிக்காது. ஒரு முறை விளம்பரம் வாங்குவதற்காக மதுரையில் இருந்த ஒரு பெரிய நிறுவனத்தின் நிர்வாகியைச் சந்தித்து விளம்பரம் கேட்டார். ”எத்தனை பிரதிகள் விற்பனையாகிறது?” என்று கேட்டார் அந்த நிர்வாகி. ”ஏழாயிரம் பிரதிகள்” என்றார் ஆதித்தனார். ”சென்னையில் வெளிவரும் பத்திரிகைகளே பத்தாயிரம்தான் விற்பனையாகிறது. நீங்கள் ஏழாயிரம் என்கிறீர்களே” என்று கேட்டார் நிர்வாகி. ”உங்களுக்குச் சந்தேகம் இருந்தால் நள்ளிரவு எங்கள் அலுவலகத்துக்கு வாருங்கள். எத்தனை பிரதிகள் அச்சாகிறது என்று நீங்களே பாருங்கள்” என்று சொல்லி விட்டு வந்தார். அன்றிரவே தந்தி அலுவலகத்துக்கு வந்தார் அந்த நிர்வாகி. அச்சாகும் பிரதிகளின் எண்ணிக்கையைப் பார்த்தார். மறுநாளே விளம்பரம் தந்தார்.

இரண்டாம் உலகப் போர் சமயத்தில் செய்தித்தாள் அச்சிடும் காகிதத்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. காகிதத்தட்டுப்பாட்டை சமாளிக்க தானே காகிதம் தயாரித்தார். வைக்கோலை கொண்டுவந்து, ஊறவைத்து, அதை கூழாக்கி, காகிதமாக்கி, பயன்படுத்தினார். 1962-ல் திருநெல்வேலியை அடுத்த அரியநாயகிபுரத்தில் சன் பேப்பர் மில் தொடங்கினார். பிஸினஸ் மொழியில் ‘பேக்வர்ட் இன்டக்ரேஷன்’ என்று சொல்லப்படும் இந்த யுக்தியை அரை நூற்றாண்டுக்கு முன்பே செய்தவர் ஆதித்தனார்.காலை எழுந்தவுடன் தினத்தந்தி என்கிற வழக்கத்தை ஏற்படுத்திய பிறகு, மாலையிலும் ஒரு செய்தித் தாள் வெளிவந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்ததன் விளைவு, அடுத்தடுத்து மாலை செய்தித் தாள்களும் வந்தன. வாரப் பத்திரிகையைப் படிக்க நினைக்கிற வாசகர்களுக்கும், நாவல் படிக்க நினைக்கிறவர்களுக்கும் புதிய இதழ்கள் என பலவாறாக கிளை பரப்பியது இந்நிறுவனம்.

ஆதித்தனார் வெறும் பத்திரிகையாளர் மட்டுமல்ல, அரசியலிலும் அதிக ஆர்வம் கொண்டவர். சட்டமன்ற உறுப்பினராக இருந்ததோடு, அவைத் தலைவராகவும் அமைச்சராகவும் பதவி வகித்தார். அரசியலில் முழுநேரமாகச் செயல்பட வேண்டியிருந்ததால் தனது புதல்வர்களை நிர்வாகத்துக்கு தயார்படுத்தினார்.

தனது இரண்டாவது மகன் சிவந்தி ஆதித்தனை எடுத்த எடுப்பிலேயே நிர்வாகத்துக்கு அவர் கொண்டு வந்துவிடவில்லை. ஆரம்பத்தில் அச்சுக் கோர்க்கும் தொழிலாளியாகப் பணிபுரியச் செய்தார். பிறகு அச்சு இயந்திரப் பிரிவில், பிறகு பார்சல், விற்பனைப் பிரிவில் எழுத்தர், நிருபர், துணை ஆசிரியர், இறுதியில் நெல்லை யில் மாலை முரசு தொடங்கி, அதன் உரிமையாளர், நிர்வாகி, ஆசிரியர் என படிப்படியாக வளர்த்து, இறுதியில் தினத்தந்தி-யின் நிர்வாகத்தை அவரிடம் ஒப்படைத்தார்.

சிவந்தி ஆதித்தன் தினத்தந்தியை இன்னும் உயர்த்தி காட்டினார். அவரது மகன் பாலசுப்பிரமணியன் இன்று வானொலி, தொலைக்காட்சி என புதிய துறைகளிலும் கால் பதித்துள்ளார்.ஆதித்தனாரின் முதல் மகன் ராமச்சந்திர ஆதித்தன் மாலை நாளிதழ், வார இதழ், நாவல் என்று பத்திரிகைகளை வெற்றிகரமாகத் தொடர்ந்து நடத்தி வருகிறார். மேலும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி மீட்புப் பணியில் இவரின் பங்கு முக்கியமானது. 1981-ல் இதே மே 24ல் சி.பா.ஆதித்தனார் மறைந்தாலும் அவர் விட்டுச் சென்ற தினத்தந்தி தமிழர் வாழ்வோடு ஒன்றிவிட்டது.

error: Content is protected !!