இன்ஜினியரிங் டிகிரிக்கு கடந்த 9 நாட்களில் சுமார் ஒரு லட்சம் பேர் விண்ணப்பம்!
தமிழ்நாடு பள்ளிக்கல்வித் பாடத்திட்டத்தின் கீழ் கடந்த ஜுன் 20ம் தேதி பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இந்தாண்டு 12ம் வகுப்பு தேர்வில் 93.76% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனை தொடர்ந்து தேர்வு முடிவு வெளியான அன்று இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு தொடங்கியது. பி.இ., பி.டெக்., உள்ளிட்ட படிப்புகளுக்கான விண்ணப்பத்தை மாணவர்கள் http:/www.tneaonline.org என்ற இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
அதேபோல், மாணவர்கள் சொந்தமாகவோ அல்லது பள்ளிகள், அரசின் இலவச மையங்கள் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். தமிழகம் முழுவதும் 110 இலவச மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன
ஜூலை 19ம் தேதி வரை மாணவர்கள் அசல் சான்றிதழ் மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம். தொடர்ந்து ஜூலை 22ம் தேதி சம வாய்ப்பு எண்ணும், ஜுலை 20 முதல் ஜூலை 31ம் தேதி வரை சேவை மையம் வாயிலாக சான்றிதழ் சரிபார்ப்பும் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து ஆகஸ்ட் 8ம் தேதி தர வரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டு, பின்னர் கலந்தாய்வு தொடங்கும். ஆகஸ்ட் 9 முதல் 14ம் தேதி வரை மாணவர்கள் சேவை மையம் வாயிலாக குறைகளை சரி செய்து கொள்ளலாம்.
கலந்தாய்வை பொறுத்தவரையில் ஆக.,16 முதல் ஆக.18 ஆம் தேதி வரை மாற்றுதிறனாளி, முன்னாள் ராணுவ வீரர்கள், விளையாட்டு ஆகிய 3 பிரிவினருக்கு நடைபெறுகிறது. தொடர்ந்து ஆக.22 முதல் 14ம் தேதி வரை பொதுகல்வி, தொழில்முறை கல்வி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீடு ஆகிய 3 பிரிவினருக்கும் கலந்தாய்வு நடைபெறும். துணை கலந்தாய்வு அக்டோபர் மாதம் 15,16 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் பொறியியல் படிப்பில் சேருவதற்கு கடந்த ஒன்பது நாட்களில் 1,01,916 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் இதுவரை 31 ஆயிரத்து 319 மாணவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர். மேலும் 59 ஆயிரத்து 372 மாணவர்கள் இதுவரை கட்டணம் செலுத்தியுள்ளனர் என பொறியியல் மாணவர் சேர்க்கை குழு தெரிவித்துள்ளது.