தமிழ்நாட்டில் வறட்சியால் விவசாயிகள் சூசைடா? – நஹி.. நஹி! – தமிழக அரசு தகவல்
தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக தமிழ்நாடு பொதுநல வழக்குக்கான மையம் சார்பில் மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் கடந்த ஜனவரி மாதம் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு குறித்து கடந்த 13-ம் தேதி விசாரணை நடைபெற்ற போது, விவசாயிகளின் தற்கொலையை தடுக்க தவறியது ஏன் என்று தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்த சுப்ரீம் கோர்ட், அவர்களின் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் இதுவரை எடுத்த நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை 2 வாரத்திற்குள் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது. அப்போது மனுதாரர் தரப்பு வக்கீல், விவசாயிகளின் கடன்களை ரத்து செய்வதில் மத்திய அரசுக்கும் பொறுப்பு இருப்பதாகவும் எனவே, மத்திய அரசுக்கும் விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், விவசாயிகளின் பிரச்சினையை தீர்க்கும் தலையாய கடமை மாநில அரசுக்கு உள்ளது என்று கூறினார்கள். அத்துடன் வழக்கு விசாரணையை வருகிற 28–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இந்நிலையில் சுப்ரீம் கோர்ட் நோட்டீசுக்கு பதில் அறிக்கை தாக்கல் செய்த தமிழக அரசு வறட்சியால் விவசாயிகள் யாரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வறட்சியால் விவசாயிகள் யாரும் தற்கொலை செய்து கொள்ள வில்லை. 82 விவசாயிகள் மரணம் அடைந்துள்ளனர். அவர்கள் பல்வேறு காரணங்களால் இறந்துள்ளார்கள். உடல்நலக்குறைவு, வயது முதிர்வு, மாரடைப்பு, போன்ற காரணங்களால் மரணம் அடைந்துள்ளார்கள். 30 பேர் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்துள்ளார்கள். மரணம் அடைந்த 82 விவசாயிகள் குடும்பத்துக்கும் மனிதாபிமான உணர்வோடு தலா ரூ. 3 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. தேசிய விவசாய காப்பீட்டு திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு ரூ.623 கோடி வழங்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தாக்கல் செய்த அபிடவிட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் விவசாயிகள் மரணம் தொடர்பான இவ்வழக்கை வழக்கு சுப்ரீம் கோர்ட் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றிஉள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை சுப்ரீம் கோர்ட் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றி உத்தர்விட்டது.