ஆவின் பால் உற்பத்தியாளர் சங்கம் ஸ்ட்ரைக் : பாலுக்கு தட்டுபாடு வருமா?

ஆவின் பால் உற்பத்தியாளர் சங்கம்  ஸ்ட்ரைக் : பாலுக்கு தட்டுபாடு வருமா?

மிழ்நாடு பால் வளத்துறை அமைச்சருடன் பால் உற்பத்தியாளர் சங்கங்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், திட்டமிட்டப்படி இன்று (வெள்ளிக்கிழமை) முதல் போராட்டம் தொங்கி விட்டது என்று தகவல் வெளியாகியுள்ளது.

பால் கொள்முதல் விலை உயர்வு, பணியாளர்களின் பணி வரன்முறை, கால்நடை தீவனம், கால்நடைகளுக்கான இன்சூரன்ஸ் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த அக்டோபர் மாதம் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். தமிழக அரசு அவர்களை அழைத்து பேசி அவர்கள் கோரிக்கைகள் மீது தீர்வு ஏற்படுத்தி தருவதாக உத்தரவாதம் அளித்தது. அதன்படி, பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 மட்டும் உயர்த்தப்பட்டது. அதாவது, பசும்பால் லிட்டருக்கு ரூ.32-ல் இருந்து ரூ.35 ஆகவும், எருமை பால் ரூ.41-ல் இருந்து ரூ.44 ஆகவும் உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வு ‘யானைப்பசிக்கு சோளப்பொறி’ போன்றதாக உள்ளது என்றும், விலை உயர்வு போதாது என்றும் அப்போதே தமிழக அரசுக்கு தெரியப்படுத்தினார்கள்.

குறைந்தபட்சம் லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி தரும்படி கேட்டோம். பசும்பாலுக்கு லிட்டருக்கு ரூ.42-ம், எருமைப்பாலுக்கு ரூ.51-ம் வழங்கும்படி கேட்டிருந்தோம். இருந்தபோதிலும் லிட்டருக்கு ரூ.3 மட்டுமே உயர்த்தி வழங்கப்பட்டது. அதே வேளையில் மற்ற கோரிக்கைகள் மீது எந்த தீர்வும் காணப்படவில்லை. பால் விலை உயர்வு உள்ளிட்ட கோரிக்கையை நிறைவேற்றக்கோரி கடந்த 1-ந் தேதி கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். ஆனால், அரசு அவர்கள் கோரிக்கை மீது எந்த தீர்வும் காணவில்லை. எனவே, இன்று முதல் ஆவின் நிறுவனத்துக்கு பால் வழங்குவதை நிறுத்த முடிவு செய்து விட்டார்கள். இதன்மூலம் தமிழகத்தில் இருக்கும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக ஆவினுக்கு இன்று முதல் பால் அனுப்ப மாட்டார்கள்.

இது குறித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் மாநில தலைவர் வாழப்பாடி ராஜேந்திரன், “தற்போது தமிழகத்தில் உள்ள 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஆவினுக்கு நாள் ஒன்றுக்கு 27½ லட்சம் லிட்டர் பால் அனுப்பப்படுகிறது. இதில் 2½ லட்சம் லிட்டர் பால், நெய் உள்ளிட்ட பால் பொருட்கள் தயாரிக்க எடுத்துக்கொள்ளப்படுகிறது. மீதமுள்ள பால் ஆவின் நிறுவனத்தின் மூலம் நுகர்வோருக்கு வினியோகிக்கப்படுகிறது. இந்த போராட்டம் குறித்து தமிழகம் முழுவதும் உள்ள பால் உற்பத்தியாளர்களுக்கு தகவல் தெரிவித்து வருகிறோம். இந்த போராட்டத்தின் மூலம் காலை மற்றும் மாலையில் தலா 50 ஆயிரம் லிட்டர் என்ற வகையில் தொடர்ந்து குறைந்து கொண்டே வரும். தொடர்ந்து 5 நாட்களில் ஆவினுக்கு 10 லட்சம் லிட்டர் வரை பால் வழங்குவது குறையும். ஒரு கட்டத்தில் ஆவினுக்கு பால் கொள்முதல் முற்றிலும் தடைபடும்.

தனியார் நிறுவனங்கள் ஏற்கனவே உள்ள விலையில் 10 ரூபாய் கூடுதலாக கொடுத்து பாலை கொள்முதல் செய்துகொள்ள தயாராக இருக்கிறார்கள். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் பால் உபரி என்பது இல்லை. இதனால், நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் எங்கிருந்தும் பால் வாங்க முடியாது. ஆவின் நிறுவனத்தை தமிழக அரசு முழுமையாக காப்பாற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் எங்கள் சங்க உறுப்பினர்கள் கூடுதல் விலை கொடுக்கும் தனியார் நிறுவனத்துக்கு பாலை கொடுத்து விடுவோம்.

பால் விலை உயர்வுக்கு தீர்வு காணும் வரை போராட்டம் தொடரும். கேரளாவில் ஒரு லிட்டர் பாலுக்கு 48 ரூபாய் 70 காசு வழங்கப்படுகிறது. தமிழகத்தை விட கர்நாடகாவில் ரூ.15 கூடுதலாக வழங்கப்படுகிறது. இந்த கொள்முதல் விலைப்பட்டியலை தமிழக அரசுக்கு அளித்துள்ளோம். தமிழக அரசு மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படும்” என்றார்

Related Posts

error: Content is protected !!