தஞ்சை தேர்பவனியின் போது ஏற்பட்ட விபத்தில் 11 பேர் பலி!
தஞ்சையில் தேர்பவனி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரை இன்று நேரில் சந்திக்கவிருக்கிறார்.
தஞ்சாவூர் டிஸ்ட்ரிக்கில் உள்ள பூதலூர் சாலையில் 4 கி.மீ. தொலைவில் உள்ள களிமேடு கிராமத்தில் 150 ஆண்டுகளுக்கு முன்பு அப்பர் மடம் அமைக்கப்பட்டது. இந்த மடத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாத சதய நட்சத்திர நாளில் அப்பர் சதய விழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இதன்படி மூன்று நாள் அப்பர் சதய விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. வெகு விமரிசையாக நடைபெற்று வந்த இத்திருவிழாவில் இரவில் மின் அலங்கார தேர் புறப்பாடு தொடங்கியது. இதில் அப்பர் படம் வைத்து தேர் இழுத்து வரப்பட்டது. தொடர்ந்து களிமேடு கிராமத்திலுள்ள நான்கு வீதிகளிலும் தேர் வலம் வந்தது. இன்று அதிகாலை 3.15 மணியளவில் கீழத்தெருவிலிருந்து முதன்மைச் சாலைக்கு வந்த இத்தேர் திருப்பத்தில் திரும்பியபோது, மேலே சுமார் 30 அடி உயரத்தில் உள்ள உயரழுத்த மின் பாதையில் தேரின் அலங்கார தட்டி உரசியது.
இதனால் தேரை இழுத்து வந்த மக்கள் மீதும், சுற்றி இருந்தவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இவர்களில் களிமேடு கிராமத்தைச் சேர்ந்த எம். மோகன் (22), முன்னாள் ராணுவ வீரர் கே. பிரதாப் (36), ஏ. அன்பழகன் (60), இவரது மகன் ராகவன் (24), நாகராஜ் (60), ஆர். சந்தோஷ் (15), டி. செல்வம் (56), எம். ராஜ்குமார் (14), ஆர். சாமிநாதன் (56), ஏ. கோவிந்தராஜ் ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் பலத்த காயமடைந்த எம். ரவிச்சந்திரன் (48), ஆர். கலியமூர்த்தி (40), கே. ஹரிஷ் ராம் (10), எம். நித்தீஷ் ராம் (13), ஏ. மாதவன் (22), டி. மோகன் (54), என். விஜய் (23), எம். அரசு (19), ஜி. விக்கி (21), திருஞானம் (36), வி. ஹரிஷ் (11), மதன் மனைவி சுகுந்தா (33), பி. கௌசிக் (13), எஸ். பரணி (13) ஆகியோர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் பரணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதையடுத்து களிமேடு கிராமத்திற்குச் சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டார். இதேபோல தஞ்சாவூர் சரகக் காவல் துணைத் தலைவர் ஏ. கயல்விழி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்ரியா கந்தபுனேனி உள்ளிட்டோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிவாரணம் அறிவித்த முதல்வர்
இந்நிலையில், இந்த விபத்து செய்தி அறிந்த முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தேர் திருவிழாவில் 11பேர் உயிரிழந்த செய்தி அறிந்து துயரமுற்றதாக கூறிய அவர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சையளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே முதல்வர் ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் இன்று காலை 11.30 மணிக்கு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்க தஞ்சை செல்கின்றனர்.