ஏண்டா ஜெயிச்சோமுன்னு ஃபீல் பண்ண வச்சிட்டீங்க!- மு.க.ஸ்டாலின் வேதனை!

ஏண்டா ஜெயிச்சோமுன்னு ஃபீல் பண்ண வச்சிட்டீங்க!- மு.க.ஸ்டாலின் வேதனை!

மிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் மார்ச் 2-ம் தேதி பதவி ஏற்றுக்கொண்டனர். இதை அடுத்து, மாநகராட்சி மேயர் துணை மேயர் மற்றும் நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகள் குறித்து உரிய முறையில் பேச்சு வார்த்தை நடத்தி கூட்டணிக் கட்ட்சியினருக்கு சில பல இடங்களை ஒதுக்கி கையெழுத்திட்டு கொடுத்தது திமுக. இந்நிலையில் அதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் பல இடங்களில் சண்டைகள், தகராறுகள் ஏற்பட்டன. சில இடங்களில் கூட்டணிக்கு ஒதுக்கிய இடங்களில் திமுகவினர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். அது கூட்டணி கட்சியினர் இடையே கடும் அதிருப்தியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் தங்களுடை மன வருத்தத்தை வெளிப்படையாகவே செய்தியாளர்கள் சந்திப்பைக் கூட்டி வெளிப்படுத்தினர். இந்த நிலையில், கூட்டணிக்கு ஒதுக்கிய இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுகவினர் உடனடியாக பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் அதன் பின்னர் அவர்கள் தன்னை வந்து சந்திக்க வேண்டும் என்றும் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெற்ற வெற்றி மிகப் பெரிய மகிழ்ச்சியை அளித்தது. இதைத் தொடர்ந்து, கூட்டணிக் கட்சிகளுக்குள் நடத்திய பேச்சுவார்த்தை தோழமை உணர்வுடன் அமைந்து அனைவரும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளும் பங்கீடாக அமைந்ததும் அதிகளவு மகிழ்ச்சியை அளித்தது.

அந்த மகிழ்ச்சியைக் சீர்குலைக்கும் வகையில், மறைமுகத் தேர்தலில் சில இடங்களில் நடந்த நிகழ்வுகள் என்னை மிகவும் வருத்தமடைய வைத்துள்ளது. வெற்றியை நினைத்தே கவலை அடைய வைக்கிறது. பேரறிஞர் அண்ணா சொன்ன “கடமை – கண்ணியம் – கட்டுப்பாட்டில்” மூன்றாவதாகச் சொல்லப்பட்ட கட்டுப்பாடுதான் மிக மிக முக்கியமானது என்று தலைவர் கலைஞர் அடிக்கடி சொல்வார்கள். அந்தக் கட்டுப்பாட்டை சிலர் காற்றில் பறக்கவிட்டு தோழமைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டப் பொறுப்புகளில் உட்கார்ந்திருக்கிறார்கள். ஏதோ சாதித்து விட்டதாக அவர்கள் நினைக்கலாம். ஆனால் கட்சித் தலைவர் என்ற முறையில் குற்ற உணர்ச்சியால், நான் குறுகி நிற்கிறேன்.

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம், நான் எனது மிகுந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். எந்தத் தோழமை உணர்வு நமக்கு மக்கள் மனதில் நல்லெண்ணம் உருவாக்கியதோ அந்த தோழமை உணர்வை எந்தக் காலத்திலும் உருக்குலைந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். கட்சித் தலைமை அறிவித்ததை மீறி தோழமைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்றவர்கள் உடனடியாக தங்கள் பொறுப்பை விட்டு விலக வேண்டும். விலகாவிட்டால் அவர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று கட்சித் தலைவர் என்ற முறையில் எச்சரிக்கிறேன்.

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு விட்டு, கட்சியின் நற்பெயருக்கே களங்கம் விளைவித்தவர்கள் அந்தப் பொறுப்பை விட்டு விலகிவிட்டு, என்னை வந்து சந்தியுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். மாவட்டச் செயலாளர்கள்/ பொறுப்பாளர்கள் இதற்குரிய நடவடிக்கையில் விரைந்து ஈடுபட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.” என்று அறிக்கை மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார்

error: Content is protected !!