அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் – முதல்வர் ஸ்டாலின்!

அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் – முதல்வர் ஸ்டாலின்!

10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள முதல் ஆங்கிலப் புத்தாண்டு இது என்றாலும், இனி வரும் காலங்களும் கழகத்தின் புத்தாண்டுகளாகவே இருக்கும் என்கிற உறுதியான நம்பிக்கையுடன் தொண்டர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்து, பாதுகாப்புடன் இருக்குமாறு வேண்டுகிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “இனிமை சூழ்ந்து – இன்னல் அகன்று, அனைத்து மக்களும் நலமும் வளமும் பெற்றிட நம்பிக்கையுடன் பிறக்கிறது 2022 ஆங்கிலப் புத்தாண்டு. கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகம் கண்டு வரும் பேரிடர்ச் சூழல், மனிதகுலத்திற்குப் பெரும் சவாலாக அமைந்துள்ளது. அந்த நிலையில், தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பினை உறுதிசெய்து, மாநிலத்தின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு செயல்படும் நமது அரசு, எதிர்வரும் புத்தாண்டில் இன்னும் கூடுதலான செயலாற்றலுடன் மக்கள் நலனுக்கான பணிகளைத் தொடர்ந்திட உறுதிபூண்டுள்ளது.

“தமிழ்நாட்டு மக்களின் பேராதரவுடன் ஆறாவது முறையாகத் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு வருகிற முதல் ஆங்கிலப் புத்தாண்டான 2022 ஜனவரி 1-ம் நாளில், அந்த வெற்றிக்காக அயராது பாடுபட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் என்னை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்கிற உள்ளார்ந்த எண்ணத்தை என்னால் உணர்ந்துகொள்ள முடிகிறது.
எனினும், கொரோனா நோய்த் தொற்றின் புதிய வடிவான ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பில் உங்களின் முதல்வரான நானும், அந்தக் கடமையை உணர்ந்தவர்களாகக் கட்சித் தொண்டர்களாகிய நீங்களும் இருப்பதால், உங்களின் மனப்பூர்வமான வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டு, புத்தாண்டு நாளான ஜனவரி 1-ம் தேதி அன்று என்னைச் சந்திப்பதற்காக நேரில் வருவதைக் கண்டிப்பாக முற்றிலும் தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நமது அரசின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையினை நிறைவேற்றும் வகையில் நிர்வாகச் செயல்பாடுகள் புத்தாண்டில் புதுப்பொலிவு பெறும். ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ எனும் மானுடத் தத்துவம் பாடிய பெருமைக்குரிய நமது தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் செழித்திடவும், உலகில் வாழும் மக்கள் யாவரும் பேரிடரைக் கடந்து நலன் பெற்றிடவும் விழைகிறேன். நமது அரசுக்கு உறுதுணையாக விளங்கிடும் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

error: Content is protected !!