9, 10, 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி – முதல்வர் அறிவிப்பு!

9, 10, 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி – முதல்வர் அறிவிப்பு!

நடப்பு 2020 – 2021ஆம் கல்வியாண்டில் தமிழக அரசு பாடத் திட்டத்தின் கீழ் 9, 10, 11ஆம் வகுப்பு படிக்கும் மாணாக்கர்கள் அனைவரும், முழு ஆண்டுத் தேர்வுகள் மற்றும் பொதுத் தேர்வுகள் ஏதுமின்றி தேர்ச்சி பெற்றதாக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

இன்று காலை கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2021 – 2022ம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் தொடங்கியது. சட்டப்பேரவை யில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் அறிக்கை – இன்றைய அறிக்கை (25.2.2021)

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. தமிழ்நாடு அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

2020-21ஆம் கல்வியாண்டில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவலை தடுப்பதற்காக பள்ளிகள் மூடப்பட்டு, கொரோனா நோய்த் தொற்று ஓரளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 19ம் தேதி முதல், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் ஆரம்பிக்கப் பட்டன. அனைத்து மாணவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஏதுவாக, வைட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்கப்பட்டன.

இந்த கல்வியாண்டு முழுவதும் மாணாக்கர்கள் கல்வி தொலைக்காட்சி மூலமாக மட்டுமே கல்வி பயின்று வந்தனர். மாணாக்கர்கள் தொலைக்காட்சி மூலமாகவும், இணையதளம் மூலமாகவும், கல்வி பயின்று வருவதில் ஏற்படும் சிரமங்களை கருத்தில் கொண்டு, பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டன.

மேலும், இந்த கல்வியாண்டில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்கொண்ட அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டும், பெற்றோர்களின் கோரிக்கை கருத்தில் கொண்டும், கல்வியாளர்களின் கருத்துகளை பரிசீலித்தும், 2020 – 2021ஆம் கல்வியாண்டில் 9, 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணாக்கர்கள் அனைவரும், முழு ஆண்டுத் தேர்வுகள் மற்றும் பொதுத் தேர்வுகள் ஏதுமின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது.

மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீட்டு நெறிமுறைகள் அரசினால் விரிவாக வெளியிடப் படும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொண்டு அமைகின்றேன். “இவ்வாறு, இன்றைய 2021 – 2022ம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரில் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Related Posts

error: Content is protected !!