முந்திரி ஆலை தொழிலாளி கொலை : தி.மு.க எம்.பி. ரமேஷ் கோர்ட்டில் சரண்!
முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் கடலூர் நாடாளுமன்ற திமுக உறுப்பினர் ரமேஷ் பண்ருட்டி நீதிமன்றத்தில் இன்று காலையில் சரணடைந்தார்.
கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷூக்கு சொந்தமான முந்திரி ஆலையில் பணிசெய்த தொழிலாளி கோவிந்தராஜ் கடந்த 19 ந்தேதி உயிரிழந்தார். உயிரிழப்பில் மர்மம் இருப்பதாக, கோவிந்தராஜின் உறவினர்கள், முந்திரி ஆலை உரிமையாளரும் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான ரமேஷ் உள்ளிட்டவர்கள் மீது போலீசில் புகார் அளித்திருந்தனர். இதன்பின் போலீசார் சந்தேக வழக்கு பதிவு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. சிபிசிஐடி போலீசார், ரமேஷ் உள்ளிட்ட 6 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக, திமுக எம்பி ரமேஷின் முந்திரி ஆலை ஊழியர்கள் 5 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
முந்திரி ஆலை தொழிலாளி கோவிந்தராஜ் கொலையில், நடராஜ், அல்லா பிச்சை, சுந்தர், வினோத், கந்தவேல் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள நிலையில், தற்போது கடலூர் நாடாளுமன்ற திமுக உறுப்பினர் ரமேஷ் , பண்ருட்டி நீதிமன்றத்தில் இன்று காலை 10.30 மணி அளவில் சரணடைந்துள்ளார்.
பண்ருட்டி நீதித்துறை எண்.2 இல் ரமேஷ் சரணடைந்ததும், பொறுப்பு நீதிபதி கற்பகவள்ளி அவரை அக்டோபர் 13 வரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார்.