அக்டோபர் 2, 2021 காந்தி ஜெயந்தி அன்று கிராம சபைக் கூட்டங்கள் நடத்த அனுமதி!

அக்டோபர் 2, 2021 காந்தி ஜெயந்தி அன்று கிராம சபைக் கூட்டங்கள் நடத்த அனுமதி!

ரும் அக்டோபர் 2 ஆம் தேதி, காந்தி ஜெயந்தி அன்று பல்வேறு கட்டுப்பாடுகளுடன், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள மாவட்டங்களைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் கிராம சபை கூட்டங்கள் நடத்த தமிழ்நாடு அரசு அனுமதியளித்துள்ளது.

தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் கிராமசபைக் கூட்டங்கள் வருடத்திற்கு நான்கு முறை அதாவது ஜனவரி 26 (குடியரசு தினம்), மே 1 (தொழிலாளர் தினம்), ஆகஸ்ட் 15 (சுதந்திர தினம்) மற்றும் அக்டோபர் 2 (காந்தி ஜெயந்தி) ஆகிய நாட்களில் நடத்தப்பட வேண்டும். கடைசியாக கிராமசபைக் கூட்டங்கள் ஜனவரி 26, 2020 அன்று நடத்தப்பட்டது. அதன்பிறகு கடந்த 6 முறைகளாக கோவிட் – 19 பெருந்தொற்று காரணமாக கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்படவில்லை.

தற்போது, அக்டோபர் 2, காந்தி ஜெயந்தி அன்று நடைபெற வேண்டிய கிராமசபைக் கூட்டங்களை நடத்திட தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், ஊரக உள்ளாட்சித் தேர்தல்களின் காரணமாக தேர்தல் நன்னடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களிலும் மற்றும் இதர மாவட்டங்களின் தேர்தல்கள் நடைபெற உள்ள ஊராட்சிகளையும் தவிர்த்து பிற ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்படும்.

கிராமசபைக் கூட்டங்கள் ஊராட்சி நிர்வாகத்தின் ஆணிவேராகவும், மக்களதிகாரத்தின் அடித்தளமாகவும் அமைந்துள்ளது. கிராமசபைக் கூட்டங்கள் மூலமாக ஜனநாயக முறையில் ஊராட்சிகளில் பணிகளைத் தேர்வு செய்தல், ஊராட்சியின் நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்தல், ஊராட்சிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கலந்தாலோசித்து தாங்களே தேர்வு செய்தல், நிதி தணிக்கை செய்தல் போன்ற மிக முக்கிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கிராமசபைக் கூட்டங்களில் நடைபெறும் விவாதங்கள் ஆக்கபூர்வமாக அமைந்து அவ்வூராட்சியின் ஒட்டுமொத்த வளர்ச்சியை எட்டிடும் வகையில் அமைகின்றன. எனவே கோவிட் 19 தொற்று தவிர்ப்பு நெறிமுறைகளுடன் கிராமசபைக் கூட்டங்கள் நடத்த தமிழ்நாடு அரசு அனுமதித்துள்ளது.

கிராமசபைக் கூட்டங்கள் நடத்திடும்போது அரசு விதித்துள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் வழிகாட்டு நெறிமுறைகளையும் முழுவதுமாக பின்பற்றிட மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கிராம ஊராட்சிகளை வழிநடத்திட வேண்டும். கிராமசபைக் கூட்டங்களில் பங்கேற்கும்போது, ஊரக வாழ் மக்கள் முகக்கவசம் அணிந்தும், தகுந்த தனிநபர் இடைவெளியை பின்பற்றியும் மற்றும் இதர வழிகாட்டு நெறிமுறைகளையும் சிறிதும் வழுவாமல் கடைப்பிடித்திட வேண்டும் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை விவரம் வருமாறு:

கிராம சபை கூட்டங்களை திறந்தவெளியில் நடத்த வேண்டும். கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இடைவெளியுடன் இருக்குமாறு இடங்களைத் தேர்வு செய்ய வேண்டும்.

மாவட்ட ஆட்சியர்கள் இதுகுறித்த வழிகாட்டு நெறிமுறைகளை கிராம பஞ்சாயத்துகளுக்கு வழங்க வேண்டும்.

கூட்டம் நடத்துவதற்கு முன் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்ய வேண்டும்.

6 அடி சமூக இடைவெளி இருப்பதையும் முகக்கவசம் அணிந்திருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்து தனிமைப்படுத்தப்பட்டவர்கள், 14 வயதுக்குள்பட்ட குழந்தைகள் கூட்டத்தில் கலந்துகொள்ளக் கூடாது.

அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று காலை 10:00 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை கிராம சபை கூட்டம் நடைபெறும் என விதிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!