பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்; செர்பியா வீரர் ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தை வென்றார்
பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் செர்பியா வீரர் ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தை பெற்று 19-வது கிராண்ட்ஸ்லாம் வென்று சாதனை பட்டியலில் இணைந்தார்.‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரீஸ் நகரில் கடந்த 2 வாரங்களாக நடந்து வந்தது. கடைசி நாளான நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீரர் நோவக் ஜோகோவிச்சும் (செர்பியா), 5-ம் நிலை வீரர் சிட்சிபாசும் (கிரீஸ்) மோதினர். 72 நிமிடங்கள் போராடி முதல் செட்டை வென்ற சிட்சிபாஸ் 2-வது செட்டையும் தனக்குரியதாக்கினார். இரு செட் பின்தங்கிய நிலையிலும் ஜோகோவிச் ஆபார ஆட்டத்தை வெளியிப்படுத்தி அடுத்தடுத்த செட்டுகளில் முன்னிலை வகித்தார். 4 மணி 11 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில் ஜோகோவிச் 6–-7 (6–-8), 2-–6, 6-–3, 6–-2, 6–-4 என்ற செட் கணக்கில் சிட்சிபாசை தோற்கடித்து கோப்பையை கைப்பற்றினார்.
களிமண் தரை போட்டியான பிரெஞ்ச் ஓபனை ஜோகோவிச் உச்சிமுகர்வது இது 2-வது முறையாகும். ஏற்கனவே 2016-ம் ஆண்டிலும் இங்கு வாகை சூடியுள்ளார். இதன் மூலம் கடந்த 52 ஆண்டுகளில் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் போட்டியிலும் குறைந்தது இரண்டு முறை பட்டம் வென்ற முதல் வீரர் என்ற மகத்தான பெருமையை ஜோகோவிச் பெற்றார். ஒட்டுமொத்தத்தில் ராய் எமர்சன் (ஆஸ்திரேலியா), ரோட் லாவர் (ஆஸ்திரேலியா) ஆகியோருக்கு பிறகு இச்சாதனையை ஜோகோவிச் செய்துள்ளார்.
ஒட்டுமொத்தத்தில் ஜோகோவிச் 19-வது முறையாக (ஆஸ்திரேலிய ஓபன் –-9, பிரெஞ்ச் ஓபன்-–2, விம்பிள்டன்-–5, அமெரிக்க ஓபன்-–3) கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார். அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர்களின் வரிசையில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரும், ஸ்பெயினின் ரபெல் நடாலும் தலா 20 கிராண்ட்ஸ்லாமுடன் முதலிடத்தை பகிர்ந்துள்ளனர். அவர்களை நெருங்கி விட்ட ஜோகோவிச், விம்பிள்டன் போட்டியின் போது அவர்களின் சாதனையை சமன் செய்ய வாய்ப்புள்ளது.
வெற்றி பெற்ற ஜோகோவிச்சுக்கு ரூ.12½ கோடியும், கிராண்ட்ஸ்லாம் போட்டியில் முதல்முறையாக இறுதி சுற்றுக்கு வந்து 2-வது இடத்தை பிடித்த சிட்சிபாசுக்கு ரூ.6¾ கோடியும் பரிசுத்தொகையாக கிடைத்தது.