பொருளாதாரப் பாதிப்பில் இருந்து நாம் மீள ஏகப்பட்ட வருசமாகும்!- ரிசர்வ் பேங்க் கவலை!

பொருளாதாரப் பாதிப்பில் இருந்து நாம் மீள ஏகப்பட்ட வருசமாகும்!- ரிசர்வ் பேங்க் கவலை!

இந்தியாவில் ஏற்கெனவே இருந்த பொருளாதார பிரச்சனைக்கு மத்தியில் கொரோனா இந்தியாவை நிலைக் குழையச் செய்துள்ளது. இந்நிலையில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 40 ஆண்டுகளுக்கு முன் இருந்த பொருளாதார சீர்திருத்தத்தைவிட இந்தாண்டு மோசமாக இருக்கும் என்று உலக வங்கி முன்பே எச்சரித்தது. அதுமட்டுமின்றி, இந்தியா வரலாறு காணாத பொருளாதார சரிவைச் சந்திக்கப் போவதாக சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. மேலும் 2020ம் ஆண்டில் – 10.3 சதவிகிதம் குறைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ள நிலையில் இந்த கொரோனாவால் கடும் பொருளாதார பாதிப்புக்கு ஆளாகியுள்ள மாநிலங்கள், அதில் இருந்து மீள பல ஆண்டுகளாகும் என, ரிசர்வ் வங்கி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொருளாதார மந்தநிலை என்பது கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியா சந்தித்து வரும் மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளது. 2016ஆம் ஆண்டில் பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற் கொள்ளப்பட்ட நாள் முதலே இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சிப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது.

அதைத் தொடர்ந்து ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட சமயத்திலும் பொருளாதார வீழ்ச்சி மிக மோசமானது. வளர்ச்சியை மீட்டெடுக்கும் முயற்சியில் மத்திய மோடி அரசு ஈடுபட்டு வந்த நிலையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் விஸ்வரூபம் எடுத்த கொரோனா ஊரடங்கால் மத்திய, மாநில அரசுகளின் வரி வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வருவாய் இழப்பைச் சரிக்கட்ட பல்வேறு முயற்சிகளை அரசுகள் மேற்கொண்டன. இதன் ஒரு பகுதியாக, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகள் உயர்த்தப்பட்டன. வரி விதிப்பால் மது பானங்கள் விலையும் அதிகரித்தது. ஆனாலும் செலவுகளை ஈடுசெய்ய முடியவில்லை. கொரோனாவால் வாழ்வாதாரத்தைத் தொலைத்த மக்கள் தலையில்தான் இந்த சுமைகள் விழுந்தன. ஜிஎஸ்டியை அமல்படுத்தியபோதே, மாநிலங்களுக்கு நேரடி வரி வருவாய் வெகுவாகக் குறைந்து விட்டது.

இதனால் ஏற்படும் இழப்பை 5 ஆண்டுகளுக்கு ஈடுகட்ட மத்திய அரசு உறுதியளித்தது. ஆனால், வரி வசூல் குறைந்ததைக் காரணம் காட்டி, இழப்பீடு வழங்காமல் மத்திய அரசு கைவிரித்து விட்டது. மாநிலங்களுக்கு நடப்பு நிதியாண்டில் சுமார் ₹3 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என, ரேட்டிங் நிறுவனங்கள் கணிப்பு வெளியிட்டிருந்தன. மாநிலங்களுக்கு வருவாய் இழப்பு 2.35 லட்சம் கோடி மட்டும்தான் எனத் தெரிவித்த மத்திய அரசு, ஜிஎஸ்டியால் மாநிலங்களுக்கு 97,000 கோடி மட்டுமே வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தது. இவற்றை வெளிச்சந்தையிலும், ரிசர்வ் வங்கி மூலமாகவும் திரட்டிக்கொள்ள யோசனை கூறியது. மாநிலங்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து, மத்திய அரசு நிதிச்சந்தையில் கடன் பெற்று, தமிழகம் உட்பட 16 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களுக்கு முதல் தவணையாக 6,000 கோடி வழங்கியது.

மாநிலங்களின் நிதி நிலை தொடர்பாக ஆய்வறிக்கை வெளியிட்டுள்ள ரிசர்வ்வங்கி, மாநிலங்களுக்கு கடும் நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அவற்றின் மூலதன செலவுகள் வெகுவாக குறைந்து விடும். உதாரணமாக, மாநிலங்கள் கொரோனா பரவலுக்கு முன்பே பட்ஜெட் தாக்கல் செய்துள்ளன. அதன்படி, நிகர நிதிப்பற்றாக்குறை ஜிடிபியில் 2.4 சதவீதம். கொரோனா பரவலுக்கு பின்பு மாநிலங்கள் சமர்ப்பித்த பட்ஜெட்டில் நிதிப்பற்றாக்குறை மாநிலங்களின் ஜிடிபியில் 4.6 சதவீதமாக உள்ளது. கொரோனா பரவல் மாநிலங்களின் கடந்த 3 ஆண்டு ஆதாயங்களை பாழடித்து விட்டது. இவை பொருளாதார பாதிப்பில் இருந்து மீள பல ஆண்டுகளாகும் என்பதை ரிசர்வ் வங்கி சுட்டிக் காட்டியுள்ளது.

வருவாய் சரிவு காரணமாக, மாநிலங்களின் மூலதன செலவுகள் வெகுவாக குறைந்துள்ளன என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதாவது, மூலதன செலவுகள் 1.26 லட்சம் கோடியை மாநிலங்கள் குறைத்துள்ளன. இது, முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி)யில் 0.6 சதவீதம் குறைவு. கடந்த 20 ஆண்டுகளில் இந்த அளவுக்கு மூலதன செலவுகளை மாநிலங்கள் குறைத்தது இதுவே முதல் முறை என கருதப்படுகிறது. சராசரியாக மாநிலங்கள் ஜிடிபியில் சுமார் 0.5 சதவீதம் வீதம் மூலதன செலவுகளை குறைத்துள்ளன.

பட்ஜெட் மதிப்பீட்டிலும் இதே நிலைதான் காணப்படுகிறது. 10 முக்கிய மாநிலங்கள், கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலக்கட்டத்தில் மூலதன செலவை 35 சதவீதம் வரை குறைத்துள்ளன. வருவாய் முந்தைய ஆண்டை விட 21 சதவீதம் குறைந்துள்ள நிலையில் சம்பளம் உள்ளிட்ட செலவினங்கள் 12 சதவீதம் அதிகரித்துள்ளது. எனவே, பொருளாதார பாதிப்பில் இருந்து மாநிலங்கள் மீள்வது அவ்வளவு சுலபமல்ல என்று ரிசர்வ் வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

அதே சமயம் நடப்பு நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி எதிர்மறையாகவோ அல்லது பூஜ்ஜியமாகவோ இருக்கும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். அண்மையில் இந்திய ஆற்றல் மாநாட்டில் பேசிய நிர்மலா சீதாராமன், ”ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றம் தெரிகிறது. விரைவில் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்புவோம் என்று நம்பிக்கை உள்ளது. ஆனால், இந்த ஆண்டில் அதற்கான வாய்ப்புகள் குறைவுதான். பொருளாதார வளர்ச்சி நடப்பு ஆண்டில் எதிர் மறையாகவோ அல்லது பூஜ்ஜியமாகவோ இருக்கும். அடுத்த நிதியாண்டில் கட்டாயம் வளர்ச்சி ஏற்படும். பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும், பொதுச் செலவுகளில் கவனம் செலுத்துவதிலும் அரசு தொடர்ந்து மும்முரமாகச் செயல்படும்” என்று தெரிவித்தார்

Related Posts

error: Content is protected !!