பூர்வீக சொத்தில் பெண்களுக்கு சம பங்கு; சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
திருத்தப்பட்ட இந்து வாரிசு சட்டத்தின்படி ஆண்களைப் போன்று பெண்களுக்கும் பெற்றோரின் சொத்தில் சம பங்கு பெற உரிமை உண்டு என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
இந்தியாவை பொறுத்த வரை 2005ம் ஆண்டிற்கு முன்பு இருந்த இந்து வாரிசு உரிமை சட்டத்தில் பெற்றோர்களின் சொத்தில் ஆண்களுக்கு மட்டுமே உரிமை உண்டு என்று இருந்தது. 2005ம் ஆண்டு சட்ட திருத்தத்தில் பெற்றோர்களின் சொத்தில் ஆண்களை போலவே பெண்களுக்கும் சமபங்கு உண்டு என்ற மாற்றம் கொண்டு வரப்பட்டது.
இதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் பல தரப்பினர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டு இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
சுப்ரீம் கோர்ட் நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு இன்று அளித்த தீர்ப்பில்,”திருத்தப்பட்ட இந்து வாரிசு சட்டத்தின்படி மகனை போன்று மகளும் சொத்தின் சம பங்கை பெறும் உரிமை உள்ளது.சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னதாக சொத்துதாரர் இறந்திருந்தாலும் பெண்ணுக்கு சம பங்கு பெறும் உரிமை உள்ளது.
பெற்றோரின் சொத்தைப் பிரித்து பங்கு வழங்கும் போது ஆண் பிள்ளைகளைப் போலவே பெண்களுக்கும் சம பங்கு வழங்க வேண்டும் என்று 2005, இந்து வாரிசு உரிமை சட்டம் வழிவகை செய்கிறது, அதே சமயம் இந்த சட்டம் இயற்றப்படுவதற்கு முந்தைய காலக் கட்டத்துக்கும் பொருந்தும்” என தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.