சைபர் தாக்குதல்களால் இந்தியாவில் 76% தொழில் நிறுவனங்கள் பாதிப்பு!
ஒரு பக்கம் இ-மெயில், ஃபேஸ்புக், டவிட்டர், வாட்ஸ் ஆப், ஹெலோ மாதிரியான பல்வேறு சமூக இணையதளங்களின் தொழில்நுட்ப வளர்ச்சி மின்னல் வேகத்தில் ஊடுருவி வருகின்றன. அதே சமயம் சைபர் தாக்குதல்களால் இந்தியாவில் 76 சதவிகிதம் அளவிலான தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஆய்வு ஒன்று கூறுகிறது.
சர்வதேச அளவில் ஆன்லைன் சைபர் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் 2018ஆம் ஆண்டில் சுமார் 76 சதவிகிதம் அளவிலான தொழில் நிறுவனங்கள் இதனால் பாதிக்கப் பட்டு உள்ளதாக சோபோஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சர்வதேச அளவில் சைபர் தாக்குதல்களின் அளவு 68 சதவிகிதமாக இருந்துள்ளதாக ‘7 Uncomfortable Truths of Endpoint Security’ என்று தலைப்பிடப்பட்ட இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இந்த சைபர் தாக்குதல்களைத் தகவல் தொழில்நுட்ப மேலாளர்கள்தான் கண்டுபிடிக்கின்றனர்.
தகவல் தொழில்நுட்ப மேலாளர்கள் தங்களது நிறுவனங்களில் 39 சதவிகிதம் அளவிலான சைபர் தாக்குதல்களைக் கண்டறிந்துள்ளதாக இந்த ஆய்வு கூறுகிறது. 97 சதவிகிதம் அளவிலான தகவல் தொழில்நுட்ப மேலாளர்கள் தங்களது நிறுவனங்களில் சைபர் தாக்குதல் மிகப் பெரிய பிரச்சினை யாக இருப்பதாகவும், 92 சதவிகிதம் அளவிலான தகவல் தொழில்நுட்ப மேலாளர்கள், சைபர் தாக்குதலைக் கண்டுபிடிக்க வலிமையான குழு அமைக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்து உள்ளனர். சைபர் தாக்குதல்களைக் கண்டுபிடிப்பவர்களைப் பணியில் அமர்த்தும் பணி கடினமாக இருப்பதாக 89 சதவிகிதத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஃபிரான்ஸ், கனடா, மெக்சிகோ, கொலம்பியா, ஜெர்மனி, ஜப்பான், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 12 நாடுகளில் சுமார் 3,100 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.