கொரொனா பீதி : அரசு ஏன் இவ்வளவு மெனக்கெடுகின்றது எனக் கேட்க தோன்றுகிறதோ?

கொரொனா பீதி : அரசு ஏன் இவ்வளவு மெனக்கெடுகின்றது எனக் கேட்க தோன்றுகிறதோ?

போர்காலங்களில் முதலில் சாவது உண்மை என்பார்கள், ஆம் அவ்வளவு வதந்திகள் கொடிகட்டி பறக்கும் .கொரோனாவிலும் அப்படி பரவ ஆரம்பித்தாயிற்று, பெரும் அச்சமும் அவநம்பிக்கையும் தமிழகத்தில் சூழ்ந்திருக்கின்றது.. முதலில் ஒரு உண்மையினை தெரிந்து கொள்ள வேண்டும், நடப்பது முன் எச்சரிக்கையான விஷயம் மட்டுமே, மாறாக கொரொனா எல்லோரின் கழுத்தையும் நெறித்துகொண்டிருக்கின்றது என்பதல்ல‌.

 

கொரோனாவுக்கு மருந்து இல்லை என்பது உண்மை சந்தேகமில்லை, ஆனால் டெங்கி போன்ற ஏராளாமான நோய்களுக்கும் மருந்தே இல்லை, எல்லாமே ஆரம்பகட்டத்தில் வந்தால் குணப்படுத்திவிடலாம்

டெங்கிங்கு அஞ்சா சமூகம் கொரோனாவுக்கு அலறுகின்றது என்றால் அது இது ஒருவித அச்சம் அன்றி வேறல்ல‌.. கொரோனா தொற்றுநோய் , மருந்ந்தில்லை. ஒருவரிடம் இருந்து எளிதில் தொற்றும் ஆனால் 20லட்சம் பேர் பாதிக்கபட்டால் சாவு 10 ஆயிரம் வருகின்றது. இந்தியாவில் ஆயிரகணக்கானொர் பாதிக்கபட்டால் சாவு ஒரு இலக்கத்தில்தான் இருக்கின்றது

அதாவது கொரோனா மிகபெரும் ஆட்கொல்லி நோய் அல்ல, ஆனால் ஏற்கனவே நோயுற்றவர் களை பலகீனமாக இருப்பவர்களை கொல்கின்றது . ஆக ஏற்கனவே நோயோடு போராடுபவர்களை கொல்கின்றதே அன்றி நல்ல நிலையில் இருப்பவர்களிடமிருந்து பின் வாங்குகின்றது, அவர்கள் குணமடைகின்றார்கள்

சிகரெட் குடிப்பவன் நுரையீரல் கெட்டு இருக்கும், குடிப்பவன் ஈரல் பாதிப்படைந்திருக்கும் அதை கொல்வது கொரானாவுக்கு எளிது, ஐரோப்பிய கோஷ்டி அடிவாங்குவது இப்படித்தான் குடியும் புகையுமாக இருந்த கோஷ்டி அடிபடுகின்றது, சீனாவில் நிலமை வேறு உணவும் இன்னும் பல காரணங்கள். இந்தியா அப்படி அல்ல, இதனால்தால் பல்லாயிரம் பேர் பாதிக்கபட்டாலும் ஏராளமானோர் சட்டென இயல்பு நிலைக்கு திரும்புகின்றார்கள்

கவனியுங்கள் மருத்துவமனையில் இருப்பவன் எல்லாம் கொரோனா நோயாளி அல்ல, அல்லவே அல்ல. இருமலும் காய்ச்சலும் இருந்தால் அனுமதிக்கபட்டு சோதிக்கபடுவர், அதுதான் நடக்கிறது.  பொதுவாக வெளிநாட்டுக்கு செல்வோர் அங்கிருந்து திரும்புவோருக்கு சில சூழல் நீர் மற்றும் இதர காரணமாக ஒரு சளி இருமல் காய்ச்சல் வரும், இது இயல்பு

90% பேர் இதற்கு தப்பமுடியாது, சட்டென மாறும் சூழல், நீர், உணவு, சீதோஷ்ண நிலைக்கு அந்த மாற்றம் உடலில் வரும், ஆம் உடல் அந்த சூழலுக்கு தன்னை மாற்றும் நேரம் வரும். இது இது காலமும் வந்த சாதாரண விடயமே. இப்பொழுது கொரோனா சீசன் என்பதால் சோதனை நடக்கின்றதே அன்றி நிலமை மகா சீரியஸ் என்பதெல்லாம் அபத்தம். ஒரு கொலை நடந்தால் போலீஸ் 100 பேரை சந்தேகபடும் , அதுபோல இருமல் சளி இருந்தால் சந்தேகம் கொண்டு சோதிக்கின்றார்கள்.

சரி இதெல்லாம் எளிது என்றால் அரசு ஏன் இவ்வளவு மெனக்கெடுகின்றது என கேட்கலாம் விஷயம் எளிது. இது வாரி சுருட்டும் நோய் இல்லை என்றாலும் பலவீனமானர்களுக்கு ஆபத்து ஆகும் இன்னொன்று பெரும் எண்ணிக்கை மக்கள் பாதிக்கபட்டால் சிகிச்சைக்கு தட்டுப்பாடாகும், குணமாக்கலாம் ஆனால் எண்ணிக்கை பெருகினால் ஆபத்து மருத்துவர் உட்பட தட்டுப்பாடு. அரசு நடவடிக்கை எடுத்து தடுக்காவிட்டால் மேற்கத்திய நாடுகள் மீண்டபின் இங்கு முதலீடும் தொழிலும் பாதிக்கபடும் இன்னும் ஏக சிக்கல் வரும். இதனால் அரசும் மின்னல் வேக நடவடிக்கை எடுக்கின்றது. இதனால் வீண் பயத்தையும் அச்சத்தையும் போக்குங்கள், வெளிநாட்டில் இருந்து வரும்பொழுது விமானம் ஒரு எந்திரமே. ஒரு நட்டு கழன்றாலும் முடிந்தது விஷயம், ஆனால் அச்சமின்றி வந்து சேருகின்றார்கள் எப்படி?

நம்பிக்கை, ஒரு எந்திரம் மேல் வைக்கும் நம்பிக்கையினை கடவுள் மேலும் உங்கள் மேலும் வையுங்கள்.. பூமி, இது வாடகை வீடு , உடல் என்பதும் வாடகைக்கு ஆன்மா தங்கும் கூடு. நேரம் முடிந்தால் எல்லோரும் கிளம்பவேண்டியதுதான், ஒவ்வொருவரும் என்ன நோக்கத்திற்காக வந்தோமோ அது முடிந்தால் ஒரு நொடி கூட தங்கமுடியாது. உலகில் ஒவ்வொருவனையும் கவனிக்கின்றேன், கடந்தவாரம் அவன் மனநிலை எப்படி இருந்தது? பில்லியன் டாலர் ஒப்பந்தம், வருமானம், உலக சுற்று பயணம், திருமணம், வீடு வாங்கல் விற்றல், வியாபாரம், ஆட்சி, ராணுவம், எண்ணெய், போர், எதிர்கட்சி அது இது என ஒவ்வொருவனும் ஓராயிரம் ஆண்டுக்கு திட்டம் வைத்திருந்தான். எல்லாம் அப்படியே நொறுக்கபட்டு எல்லா பயலும் அடங்கி ஒடுங்கி அமர்ந்திருக்கின்றான்

நாளை என்பதை கணிப்பவன் எவன்? இந்த வருடம் இத்தனை பில்லியன் டாலர், இந்த தொழில் ,இவ்வளவு வருமானம் என திட்டமிட்ட பெரு மூளைகள் எல்லாம் ஒடுங்கி அடங்கி கட்டிலில் மல்லாக்க கிடக்கின்றன‌.  நான் பெண்டகன் ராணுவதளபதி நான் நினைத்தால் உலகை அழிப்பேன் ஏ கொரான்வே என்னிடம் வராதே என அவனுக்கு சொல்லமுடியவில்லை அழுகின்றான்.  ஐரோப்பா வின் சகல கட்டுப்பாடும் என்னது என சொல்பவனும் கொரோனா முன் மண்டியிடுகின்றான். பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ் கொரனாவினால் பாதிக்கப்பட்டு படுக்கையில் உள்ளார். பணமோ, ராணுவமோ, விஞ்ஞான மருத்துவமோ எல்லாம் உயிரை காப்பாற்றாது என்பது ஒவ்வொரு வனுக்கும் தெரிகின்றது. ஆயுதம், பணம், அதிகாரம், செல்வாக்கு எல்லாமே கொரோனா முன் தூசாக சரிந்து கிடக்கின்றன‌

கடந்த வாரம் வரை பல்லாயிரம் கனவோடும் வாழ்வின் ஒவ்வொரு நொடிக்கும் திட்டமிட்டு இருந்தவன் , நொடிந்து ஒடிந்து அடங்கி கிடக்கின்றான், எல்லாம் மாயை என்பது புரிகின்றது. ஆம் கடந்த காலத்துக்கு நாம் செல்லமுடியாது, நாளை அல்ல அடுத்த நொடி நமக்கு தெரியாது. வாழும் காலத்தில் வாழ்வதே வாழ்வுக்கான வழி, அதுவன்றி வேறல்ல‌. வீணான பயத்தில் அஞ்சி சாகாதீர்கள், குழந்தைகளை பயமுறுத்தி பெரியோர்களையும் முதியோர்களையும் அச்சுறுத்தி ஒருவித யுத்த சூழலில் வாழாதீர்கள்

அண்டை வீட்டில் நல்ல பாம்பு இருப்பது போல் யாரையும் அச்சத்தோடு நோக்காதீர்கள். சக மனிதன் மேல் நம்பிக்கை வேண்டும், உங்களுக்கு நாங்கள், எங்களுக்கு நீங்கள் என உற்சாகமும் நம்பிக்கை யும் கொடுக்க வேண்டும். என் சொத்து, என் குடும்பம், என் ஆயுள் , என் வாழ்வு என பதைபதைப்பில் இருப்பீர்களானால் உங்களுக்கும் நிம்மதிக்கும் வெகுதூரம், அதுதான் சாத்தான் அதுதான் பேய் மனம்.

நல்ல மனம் நெருப்பிலும் குளிராய் இருக்கும், தீரா ஆசைகொண்ட பேய் மனம் குளிரிலும் நெருப்பாய் எரியும். சில நூறு வருடங்கள் வாழும் மரத்துக்கு இருக்கும் ஆயுள், சில ஆமைகளுக்கு இருக்கும் ஆயுள் கூட மனிதனுக்கு இல்லை என்பதை உணருங்கள். ராமனும் கண்ணனும் ஞானி களும் சித்தர்களுமே வாழ்ந்து சென்றுவிட்ட உலகில் நீங்களும் நானும் தப்பிவிட முடியாது..இது அவன் படைத்த உலகம், உடல் அவன் கொடுத்த கூடு, இங்கு அவன் ஆடுவதே ஆட்டம், அவன் இடுவதே கட்டளை, அதை மாற்றும் சக்தி எவனுக்கு உண்டு?

அதனால் அடுத்த நொடியினை பகவானிடம் கொடுத்துவிட்டு அமைதியாய் இருங்கள், அது ஒன்றுதான் நிம்மதிக்கான வழி.. அச்சமே முதல் உயிர்கொல்லி, பாம்பு கடித்து சாகுபவை விட பாம்பு பற்றிய பயத்தில் சாவோர் அதிகம் என்பார்கள், எல்லாமே அச்சம், அச்சம் அவ்வளவு கொடுமையானது. நம்பிக்கையோடு கொடுக்கபடும் ஒரு துளி சாதாரண தீர்த்தம் நோயினை குணமாக்க கூடியது. நம்பிக்கை அவ்வளவு வலிமையானது,

முடிந்தால் டிவி போன்ற மீடியாக்களை , எப்பொழுதாவது பாருங்கள் போதும். மக்களிடம் எச்சரிக்கை என்ற பெயரில் பெரும் பீதியினை அவைதான் செய்கின்றன‌. இயல்பாய் இருங்கள், லோகத்தில் நீங்களும் ஒரு சாதாரண தூசு என்பதை உணர்ந்து அகந்தை ஒழித்து புன்னகையாய் இருங்கள், எந்த ஆபத்தும் வராது, வந்தாலும் உடனே நீங்கிவிடும்

எச்சரிக்கை நல்லது ஆனால் அதீத எச்சரிக்கையும், நூற்றாண்டு காலம் வாழ்வோம் எனும் பெரும் எதிர்பார்ப்பும் தேவையற்றது. விமான பயணத்தில் விமானம் எழும்பியதும் முழு பயணத்துக்கும் பைலட்டே பொறுப்பு, கப்பல் கிளம்பியதும் கேப்டனே பொறுப்பு. அப்படி கடவுளிடம் பொறுப்பை விட்டுவிட்டு இருக்கும் நொடியினை கொண்டாடுங்கள்.

இதுவும் கடந்து போகும்….!

 

மகரிஷி

error: Content is protected !!