March 21, 2023

லிங்கா கதை திருட்டு என்ற சர்ச்சைக்க்கு முடிவு வந்திடுச்சு! -ராக்லைன் ஹேப்பி!

கடந்த நாற்பதாண்டுகளாக சூப்பர் ஸ்டார் பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் ரஜினிகாந்த் நடிப்பில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ‘லிங்கா’ திரைப் படத்தை ராக்லைன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வெங்கடேஷ் தயாரித்தார். இன்றளவும் சர்ச்சைக் குரிய முல்லை பெரியாறு அணையை கட்டிய பென்னி குக்கின் வாழ்க்கையை தழுவிய இப் படத்தின் கதையை பொன்குமரன் எழுத, கே.எஸ்.ரவிக்குமார் திரைக்கதை எழுதி இயக்கினார். படம் வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்பு, மதுரையை சேர்ந்த ரவிரத்தினம் என்பவர், ‘லிங்கா’ படத்தின் கதை தனது ‘முல்லை வனம் 999’ படத்தின் கதை என்றும், தனது கதையை திருடி தான் ரஜினியை வைத்து ‘லிங்கா’ படத்தை தயாரிக்கிறார்கள், என்று மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அச்சூழலில் படத்தை குறிப்பிட்ட தேதியில் வெளியிடுவதற்கான பணியில் படக்குழுவினர் ஈடுபட்டிருந்த போது, இந்த வழக்கு அவர்களுக்கு பெரும் மன உளைச்சலை கொடுத்த நிலையில், மதுரை ஐகோர்ட் ரூ.10 கோடியை நீதிமன்றத்தில் செலுத்திவிட்டு படத்தை ரிலீஸ் செய்து கொள்ளலாம் என்று உத்தரவிட்டது. அதுவும் சில மணி நேரங்களே கால அவகாசம் இருக்கும் நிலையில், இப்படி ஒரு இக்கட்டான சூழலில் உருவானதால், தயாரிப்பாளர் ராக்லைன் வெங்க டேஷ், அப்செட்டானாலும், ரஜினி படத்தை சொன்னபடி, சொன்ன தேதியில் வெளியிட வேண்டும் என்பதற்காக, பத்து கோடி ரூபாயை நீதிமன்றத்தில் படத்தையும் ரிலீஸ் செய்தார்.

ஆனாலும் , இந்த கதை திருட்டு வழக்கு சுமார் 5 வருடங்களாக நடந்துக் கொண்டிருந்த நிலையில், வழக்கு தொடர்ந்த ரவிரத்தினம், தனது கதை என்பதற்கான சரியான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்க்க முடியாமல், வழக்கை வாபாஸ் பெற்றுவிட, நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து விட்டது. அதன்படி, ‘லிங்கா’ கதை பொன்குமரன் என்பவரால் எழுதப்பட்டது என்பதும், அக்கதை திருட்டு கதை இல்லை என்பதும் நீதிமன்றம் மூலமாகவே நிரூபணம் செய்யப்பட்டதால், ரஜினி காந்த், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், கதையாசிரியர் பொன்குமரன் ஆகியோர் மீது இருந்த களங்கம் நீங்கியது. இந்த தகவலை மக்களுக்கு தெரியப் படுத்தும் வகையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில்  நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் பேசியதாவது:

“சமீபத்தில் எங்களுக்கு நற்செய்தி கிடைத்தது. லிங்கா படத்தின் போது ஒருவர் இந்தக்கதை என்னுடையது என்று வழக்கு போட்டிருந்தார். இப்போது கேஸ் எங்களுக்கு சாதகமாக வந்துள்ளது. பத்திரிகையாளர்களை இந்த நேரத்தில் எதற்காக சந்திக்கிறோம் என்றால் அந்த நேரத்தில் அவசர அவசரமாக படத்தைக் வெளியிட வேண்டும் என வேலை செய்து கொண்டிருந்தொம். ரஜினி சார் பிறந்த நாளைக்கு படத்தைக் கொண்டு வர வேண்டும் என்று உழைத்தோம் . அந்த நேரத்தில் அது மிகுந்த மன உளைச்சலை கொடுத்தது. நான் ஒரு கதையை சொல்லும் போது அது சரியாக ரிஜிஸ்டர் செய்திருக்கிறதா என்று பார்த்து தான் செய்வேன். அந்த நேரத்தில் கோர்ட் திடீரென பத்துக்கோடி கட்ட வேண்டும் என்று கட்டளையிட்டது. ஒரு நாளைக்குள் பத்து கோடி கட்டுவது எவ்வளவு சிரமம். அன்றைக்கு நிறைய ஊடகங்கள் கதைத் திருட்டு சம்பந்தமாக நிறைய எழுதி இருந்தார்கள். அதனால் தான் இந்த நல்ல செய்தியும் பத்திரிகைகளில் வர வேண்டும் என்று இங்கு வந்தோம். எதிர் தரப்பில் தாக்கல் செய்த எல்லா சாட்சியங்களையும் விசாரித்த பின் எங்கள் பக்கம் இருக்கும் நியாயத்தை உணர்ந்து நல்ல தீர்ப்பை வழங்கினார்கள். ரைட்டர் யூனியனுக்கு இன்னும் பவர் இருக்க வேண்டும். கதைத் திருட்டு சம்பந்தப்பட்ட கேஸ்களில் இப்படி ஒரு சாதகமான தீர்ப்பு வந்தது எங்களுக்குத் தான் என்று நினைக்கிறேன். கதையை முதலில் ரிஜிஸ்டர் செய்யுங்கள். அதன்பிறகு ரைட்டர் யூனியன் இருக்கிறது அங்கு செல்லுங்கள்” என்று பேசினார் .

ராக்லைன் வெங்கடேஷ் பேசியதாவது,

“ரஜினி சார் படம் ரிலீஸ் பண்ற சூழல் எப்படி இருக்கும் என்று உங்களுக்கு தெரியும். நாளை ரிலீஸ் என்றால் முந்தைய நாள் எங்கள் லாயர் 10 கோடி டெபாஸிட் செய்ய வேண்டும் என்ற ஆர்டர் வந்திருப்பதாக சொன்னார். படம் எடுப்பதே எங்களுக்கு சேலஞ்ச் இருந்தது. படம் எடுத்த கஷ்டத்தை விட அது பெரிய கஷ்டமாக இருந்தது. உடனே பேங்க்ல அப்ரோச் செய்து எப்படியோ சமாளித்தோம். ஒருவேளை அந்த படம் அந்த சந்தர்ப்பத்தில் ரிலீஸ் ஆகவில்லை என்றால் என்னாவாகும். அந்த டைமில் இப்படி வந்து ப்ளாக் மெயில் பண்றது சரியல்ல .அந்த டைமில் ரஜினி சார் எனக்கு ரொம்ப சப்போர்ட் செய்தார். இதைப்.போல கடைசி நேரத்தில் ப்ளாக்மெயில் செய்வது இந்த திரைப்பட துறைக்கு நல்லதல்ல .உண்மை ஒருநாள் வெல்லும் என்று எங்கள் படத்தில் வரும் அந்தப்பாட்டு மாதிரி உண்மை தான் ஜெயிக்கும். சினிமா இண்டஸ்ட்ரிக்கு இந்த மாதிரி இனி வரக்கூடாது. இந்தப்.பிரச்சனை இனி வராமல் இருக்க ரைட்டர் யூனியன் டைரக்டர் எதாவது ஒருவழி செய்ய வேண்டும். கோர்ட்டுக்கு அதிகமுறை அலைந்துள்ளேன். அங்குபோய் நின்று பதில் சொல்ல வேண்டும். அது நிறைய மெண்டல் பிரஷர் தந்தது. தற்போது தவறை செய்தவர்களுக்கு தெரிந்து விட்டது. அதனால் அவர்கள் மேல் நான் வழக்கு எதுவும் போடப்போவதில்லை. நானும் ரஜினி சாறை பின்பற்றுபவன் தான். இனி இப்படி நடக்கக்கூடாது என்று மீடியா மூலமாக கேட்டுக்கொள்கிறேன் ” என்றார்

மேலும் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் பதில் அளித்துப் பேசியதாவது,

“பணம் கேட்டு மிரட்டினார்கள். நிறைய பேர் பேரம் பேசி முடிக்கலாம் என்றும் சொன்னார்கள். நான் பத்தாயிரம் ரூபாய் கூட கொடுக்க மாட்டேன் என்று கூறிவிட்டேன் . எதுவா இருந்தாலும் கோர்டில் பார்த்துக்கொள்கிறேன் என்றேன். இனி ரஜினி சார் படம் தயாரிப்பது குறித்து ரஜினி சார் முடிவு செய்யவேண்டும். என் வாழ்க்கையில் ரஜினி சாரை வைத்து ஒருபடம் தயாரித்தேன் என்ற திருப்தி போதும்” என்றார்.