அக்னிபத் திட்டத்தின் கீழ் விமானப்படையில் சேர 7 1/2 லட்சம் பேர் விண்ணப்பம்!

அக்னிபத் திட்டத்தின் கீழ் விமானப்படையில் சேர 7 1/2 லட்சம் பேர் விண்ணப்பம்!

மோடி அரசு அறிமுகப்படுத்தியுள்ள அக்னிபத் திட்டத்தின் கீழ் விமானப்படையில் சேர 7 லட்சத்து 49 ஆயிரத்து 899 பேர் விண்ணப்பித்துள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

முப்படையில் தற்காலிகமாக 4 ஆண்டுகள் மட்டுமே பணியாற்றும் வகையில் இளைஞர்களை சேர்க்கும் ‘அக்னிபத்’ என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த புதிய பணி நியமன முறையை ‘டூர் ஆப் தி டூட்டி’ என்று அழைக்கிறார்கள். இந்த திட்டத்தின் கீழ் நியமிக்கப்படும் வீரர்கள் அக்னிவீரர்கள் என அழைக்கப்படுவார்கள். ஒப்பந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட உள்ள அக்னிவீரர்களுக்கு 25 சதவிதத்தினரை தவிர மற்றவர்கள் 4 ஆண்டு முடிவில் விடுவிக்கப்படுவார்கள். அவர்களுக்கு ரூ.10 லட்சம் (வரிப்பிடித்தம் இல்லாமல்) மற்றும் சான்றிதழும் வழங்கப்படும்.

இந்த திட்டத்தின் கீழ் 45 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வீரர்களை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ராணுவத்தில் அதிகாரி பதவிக்கு கீழ் உள்ளவர்கள் இந்த பணியில் நியமிக்கப்படுகிறார்கள். இந்த திட்டத்துக்கு இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்ற போதும் அக்னி வீரர்களை தேர்வு செய்யும் பணியை தீவிரப்படுத்தியது மத்திய அரசு.

அக்னிபத் திட்டத்தின் கீழ் விமானப் படையில் சேர விரும்புவோர், கடந்த 24–ந்தேதி முதல் இந்திய விமானப் படையின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://careerindianairforce.cdac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்து வந்தனர். விண்ணப்ப பதிவு நேற்றுடன் (5ம் தேதி) முடிவடைந்த நிலையில் விமானப்படையில் சேர 7 லட்சத்து 49 ஆயிரத்து 899 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்ற இந்திய விமானப்படை அறிவித்துள்ளது.

இதுவரை விமானப் படை பணி நியமனத்திற்கு பெறப்பட்ட விண்ணப்பங்களில் இதுவே அதிகம் என்று கூறப்படுகிறது.

தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களைளுக்கு ஆன்லைன் தேர்வு வரும் ஜூலை 24–ம் தேதி நடத்தப்படும் என்றும் இந்திய விமானப் படை அறிவித்துள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!