March 25, 2023

மாசி பெளர்ணமியன்று அறிவிப்பாம்: அதிமுக & பாஜக கூட்டணி முடிவு!

தமிழக மக்களுக்கு வெறுப்பலையை ஏற்படுத்தும் என்று சிலர் கணித்துள்ள நிலையிலு அதிமுக மற்றும் பாஜக-வுக்கான தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை சற்றேறக்குறைய முடிந்து விட்டதாகவே தெரிகிறது. அதிமுகவுக்கு 25, பாஜகவுக்கு 15 என கூட்டணி உடன்பாடு ஏற்பட்டது. வரும் செவ்வாய்க் கிழமை 19ந்தேதி முறைப்படி அறிவிப்பு வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அரசியல் நிருபர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. – பா.ஜனதா கூட்டணி அமைக்க முடிவே செய்து விட்டன.இதையொட்டி.பா.ஜனதா கட்சியின் மேலிட பொறுப்பாளரான மத்திய மந்திரி பியூஷ் கோயல் வியாழக்கிழமை இரவு சென்னை வந்து அ.தி.மு.க. தேர்தல் குழுவுடன் அதிகாரப் பூர்வ பேச்சுவார்த்தை அதிகாலை 1 மணிவரை பேச்சு நடத்தினார்.

பா.ஜனதா சார்பில் மத்திய மந்திரியுடன் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் அ.தி.மு.க. தரப்பில்முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செலவம், அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி மற்றும் வைத்திலிங்கம் எம்.பி., கே.பி.முனுசாமி ஆகியோரும் கலந்து கொண்டனர். தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம் இல்லத்தில் இந்த பேச்சு வார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் தொகுதி உடன்பாடு மற்றும் கூட்டணியில் எந்தெந்த கட்சிகளை சேர்ப்பது அந்த கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு பற்றி முடிவு செய்யப்பட்டது.

யார்- யாருக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பதில் மட்டும் இழுபறி நீடிப்பதாக கூறப்படுகிறது.

அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க., புதிய தமிழகம், புதுவை என்.ஆர். காங்கிரஸ், த.மா.கா. ஆகிய கட்சிகள் இடம் பெறுவது உறுதியாகியுள்ளது.

தமிழகம் – புதுவையில் மொத்தம் உள்ள 40 இடங்களில் அ.தி.மு.க.வுக்கு 25 தொகுதிகள், பா.ஜனதாவுக்கு 15 தொகுதிகள் என முடிவாகி உள்ளதாக தெரிகிறது.

அ.தி.மு.க. அணி கட்சிகள்: த.மா.கா., என்.ஆர்.காங்கிரஸ், புதிய தமிழகம்

பா.ஜனதா அணி கட்சிகள்: பா.ம.க., தே.மு.தி. க.

அ.தி.மு.க. தனது தொகுதிகளில் த.மா.கா., என்.ஆர்.காங்கிரஸ், புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுக்கு தலா 1 தொகுதியை விட்டுக் கொடுத்தது போக 22 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

பா.ஜனதா தனது தொகுதிகளில் பா.ம.க.வுக்கு 4 தொகுதிகளும், தே.மு.தி. க.வுக்கு 3 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்தது போக மீதம் உள்ள 8 தொகுதிகளில் போட்டியிடும் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தொகுதி பங்கீடுகள் குறித்து. இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தை முடிவில் தொகுதி பங்கீடுகள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை 2 கட்சி தலைவர்களும் இணைந்து – வரும் செவ்வாயன்று வெளியிடுவார்கள்.

பியூஷ் கோயல் வருகிற திங்கள் அல்லது செவ்வாய்க் கிழமை மீண்டும் சென்னை வந்து இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

பா.ஜனதாவுக்கு தென் சென்னை, கோவை, கன்னியாகுமரி, சிவகங்கை, தென்காசி, பெரம்பலூர் ஆகிய 6 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும், மீதம் உள்ள 2 தொகுதிகள் முடிவாகவில்லை.

4 தொகுதிகள் பரிசீலிக்கப்படுகின்றன. திருப்பூர், பொள்ளாச்சி, நெல்லை, ராமநாதபுரம் ஆகியவை பரிசீலனையில் உள்ளன.

பா.ம.க.வுக்கு அரக்கோணம், ஆரணி, தர்மபுரி தவிர சிதம்பரம் அல்லது விழுப்புரம் தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.

என்.ஆர்.காங்கிரசுக்கு புதுவை தொகுதி ஒதுக்கப்படும் என தெரிகிறது. தே.மு.தி.க.வுக்கு மத்திய சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும் தே.மு.தி.க. கூடுதலாக சேலம் தொகுதியையும் கேட்கிறது என்று கூறப்படுகிறது. அந்த தொகுதியை விட்டுக் கொடுக்க அ.தி.மு.க. மறுத்து விட்டது. அதனால் மாற்றுத் தொகுதி தரப்படுமா என இன்னும் முடிவாகவில்லை.

வருகிற 19-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாசி மாதம் பவுர்ணமி நல்ல நாள் என்பதால் அன்றைய தினம் தொகுதி பங்கீடு விவகாரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட திட்டமிட்டுள்ளதாக அ.தி.மு.க. ஏரியா பீட் நிருபர்கள் தெரிவிக்கின்றனர்.